Wednesday, January 13, 2016

உமை போட்ட சீதை வேடம்

உமை போட்ட சீதை வேடம்

ஒருநாள் சிவபெருமான் உமையம்மை யிடம் இராமனின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தார். குறிப்பாக இராமனது ஏகதார விரத மேன்மையைப் பலவாறு புகழ்ந்தார்.

""வேறு யாராவது சீதையைப்போல் மாறு வேடமணிந்து வந்தால் இராமன் ஏமாற மாட்டானா? ஏமாறுவது மனித இயல்புதானே! இராமன் சாதாரண மனிதன் தானே?'' என்று உமையம்மை மறுதலித்துப் பேசினாள்.

""இராமன் மனிதனாகத் தோன்றினாலும் அவன் பரம்பொருள். அவனுக்குத் தெரியாத ரகசியம் எதுவுமே உலகில் இல்லை'' என்றார் சிவபெருமான்.

""நான் இராமனை சோதித்து வென்று, அவன் பரம்பொருள் அல்ல; மனிதன்தான் என்று காட்டுகிறேன்'' என்று சபதம் செய்தாள் உமை.

""மனைவியைப் பிரிந்தவன் பரம்பொருளானால் சீதை இருக்கும் இடத்தை உணர்ந்து கொள்ள மாட்டானா? இப்படிக் காடெல்லாம் அழுது கொண்டு திரிவானா? ஆதலால் இராமன் பரம்பொருள் அல்ல என்பது உறுதி'' என்று மேலும் கூறினாள் உமை. பின்னர், சீதையாக வேடமிட்டுக் கொண்டு இராமன் வரும் வழியில் சென்று நின்று கொண்டிருந்தாள்.

நடுவழியில் சீதை உருவில் உமையைக் கண்ட இராமன், ""சகோதரி, நீ உன் கணவர் உடலில் பாதியாக உள்ளவள் அல்லவா! இப்போது பிரிந்து ஏன் இங்கு வந்தாய்? உன் கணவர் உனக்காகக் காத்திருப்பார். உடனே புறப்படு!'' என்றான் இராமன்.

"சீதை உருவிலிருக்கும் தன்னை அடையாளம் கண்டு கொண்டு, "சகோதரி' என்று அழைத்தமையால், பிறர்மனை நோக்கா பேராண்மை இராமனிடம் உள்ளது. ஆதலால் இராமனைப் பரம்பொருள் என எண்ணத் தடையில்லை. என் சோதனையில் இராமன் வென்றான். நான் தோற்றேன்' என்று நாண முற்ற உமை, அக்கணமே சிவபெருமானிடம் சென்று, தான் இராமனை சாதாரண மனிதன் என்று எண்ணியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

No comments:

Post a Comment