Wednesday, January 13, 2016

பாண்டவர்களின் மதிநுட்பம்

பாண்டவர்களின் மதிநுட்பம்

பாண்டவர்களின் மதிநுட்பம்பாண்டவர்களும், கெளரவர்களும் இளம் வயதில் குரு துரோணாச்சாரியாரிடம் கல்வி பயின்றனர். குரு துரோணாச்சாரியார் அனைவரையும் சமமாகப் பாவித்து கல்வி புகட்டி வந்தார். தான் நடத்திய பாடங்களை மாணவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்று அறிய வினாக்களை அவ்வப்பொழுது கேட்பார்.

பாண்டவர் தரப்பிலிருந்து தருமர், அர்ஜூனன், நகுலன், சகாதேவன், பீமன், ஆகியோர் அக்கேள்விகளுக்கு சரியான விடையளிப்பார்கள்.கெளரவர் தரப்பிலிருந்து துரியோதனன், அவன் தம்பியர்கள் தவறாக பதிலளிப்பார்கள். சில நேரங்களில் பதிலளிக்கமாட்டார்கள், எனவே, குரு பாண்டவர்கள் தரப்பிலிருந்து கேள்வி கேட்டு பதில் வரவழைக்க வேண்டியிருந்தது.

இதை தவறாகப் புரிந்துகொண்டு தம் தந்தை திருதராட்டிரனிடமும், தாத்தா பீஷ்மரிடமும், ஆசிரியர் எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. பாண்டவர்களுக்கே சொல்லிக் கொடுத்து கேள்விகளைக் கேட்கிறார். என்று குற்றம் சுமத்தினான் துரியோதனன்.
 
திருதராட்டிரனும், பீஷ்மரும், குரு துரோணாச்சாரியார் இவ்வாறு பாரபட்சமாக நடந்துகொள்ளமாட்டார். நம்முடைய குழந்தைகளிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று பேசிக்கொண்டு குரு துரோணாச்சாரியாரிடம் நேரில் கேட்கச் சென்றனர்.

குரு அவர்கள் இருவரையும் வரவேற்று என்ன காரணமாக வந்தீர்கள்? என்று கேட்க துரியோதனன் தங்களிடம் கூறியதை துரோணாச்சாரியாரிடம் கேட்க,அதற்கு ஆசிரியர் நான் இரு தரப்பினரையும் சமமாகப் பாவித்து பாடம் நடத்தி வருகிறேன். பாடம் நடத்திய பிறகு அதற்குரிய வினாக்கள் கேட்கும்போது துரியோதனன் தரப்பில் விடை வருவதில்லை.

பாண்டவர்கள் உடனுக்குடன் விடையளிக்கின்றனர். எனவே நான் அவர்கள் பக்கம் கேள்விகளைக் கேட்டேன் என்றார். இருவரும் தம் பிள்ளைகளின் மனப்போக்கினை அறிந்து இரு தரப்பினருக்கும் ஒரு சிறு பரீச்சை வைத்துப் பார்க்கலாம் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
 
மறுநாள் காலை திருதராட்டிரனும், பீஷ்மரும் துரியோதனனையும் அவன் தம்பியையும் அழைத்து ஒறு சிறு பொருள் கொடுத்து இப்பணத்தை வைத்துக் கொண்டு வீடு நிறைந்து இருக்குமாறு செய், நாங்கள் நாளைக்கு வருகிறோம் என்று கூறிவிட்டுச் சென்றனர்.

இதேபோல பாண்டவர்களையும் பார்த்து துரியோதனனிடம் சொல்லிய கருத்துக்களையே சொல்லி நாளை வருவதாக தெரிவித்துச் சென்றனர்.
 
துரியோதனன் தன் மாமா சகுனியிடம் ஆலோசனை கேட்டான். அதற்கு சகுனி தம்பி துரியோதனா, உன் தந்தையிடம் பொக்கிஷத்தில் நிறைய பணம் உள்ளது. அதிலே பாதியை உன்னிடத்தில் கொடுத்திருக்கலாம். கஞ்சத்தனமாக உன் தந்தையும், தாத்தாவும் இச்சிறு பொருளை கொடுத்துள்ளனர்.

இப்பொருளைக் கொண்டு வீடு நிறைந்து இருக்குமாறு செய்வது கடினம். இருப்பினும், இப்பொருளுக்கு வைக்கோல் வாக்கினால் வீடு நிறைய அடுக்கி விடலாம் என்று யோசனை கூறினான்.அதற்கு துரியோதனன் சரி மாமா, சரியான நேரத்தில் தகுந்த யோசனையை சொல்லியிருக்கிறீர்கள்.

இந்த யோசனையை வேறு யாரிடமும் சொல்லவில்லையே என்று கேட்க, இல்லை என்று பதிலளித்தார் சகுனி. துரியோதனனும், சகுனியும் கையிலுள்ள பணத்திற்கு வைக்கோலை வாங்கி வீட்டை தாழிடமுடியாத நிலைக்கு அடுக்கி விட்டனர்.
 
பாண்டவர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்ட ஒரு சிறு தொகையை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்தனர். ஐவரும் சேர்ந்து வீட்டை புதுப்பித்தனர். வீடு வெள்ளையடிக்கப்பட்டது. கோலங்கள் போடப்பட்டன. மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டன. அறுசுவை உணவு தயாரிக்கப்பட்டது.

பன்னீரும், சந்தனமும் அறையில் வைக்கப்பட்டன. தட்டில் தாம்பூலம், பழம், இனிப்புகள் அலங்கரிக்கப்பட்டன. ஊதுவத்தி, சாம்பிராணி, புஷ்பம் இவைகளின் வாசனை மூக்கை துளைத்தது. கையிலுள்ள எஞ்சிய பொருளுக்கு அங்கவஸ்திரம் வாங்கப்பட்டது.

மறுநாள் காலை திருதராட்டிரரும், பீஷ்மரும் வருகை தந்தனர். பாண்டவர்கள் ஐவரும், பட்டு அங்கவஸ்திரம் அணிவித்து மலர் மாலைகளுடன் எதிர்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். பால், பழம் வழங்கப்பட்டது.

ஊதுவத்தி, சாம்பிராணி, சந்தனம் இவற்றின் மணம் மூக்கைத் துளைத்தது. அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. தாம்பூலம் வழங்கப்பட்டது. இருவரும் மெய்மறந்து போனார்கள். பாண்டவர்களின் அறிவுக் கூர்மையை பாராட்டினார்கள்.
 
நம்முடைய பிள்ளைகள் என்ன செய்திருக்கிறார்கள் பார்க்கலாம் என்ற ஆர்வத்துடன் திருதராட்டிரரும், பீஷ்மரும் துரியோதனன் வீட்டிற்குச் சென்றனர். துரியோதனன் தந்தையைப் பாரத்ததும் மிக்க மகிழ்ச்சியுடன் ஏன் அப்பா இவ்வளவு தாமதம்? தாத்தா உங்களை பாண்டவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார்.

ஏன் இப்படி தாத்தாவிற்கு ஓரவஞ்சினை? பாண்டவர்களுக்கு வீடு நிறைய பொருள் வாங்கி வைக்க எப்படித் தெரியும்? பாவம் பஞ்சப் பரதேசிகள் என்று தூற்றினான்.தம்பி துரியோதனா, வீடு நிறைந்து இருக்குமாறு செய்துவிட்டாயா? என்று இருவரும் கேட்க,

வீட்டை திறக்கமுடியாத அளவிற்கு நிறைத்துவிட்டேன் என்றுகூறி கஷ்டப்பட்டு கதவைத் திறக்க முயன்றான். பாதி கதவு கூட திறக்க முடியவில்லை. அந்த அளவிற்கு வைக்கோல் வாங்கி அடைக்கப்பட்டிருந்தது.துரியோதனனின் நிலையைப் பார்த்து அவர் தந்தையும், தாத்தாவும் வெட்கித் தலை குனிந்தனர்.
 

No comments:

Post a Comment