Wednesday, January 13, 2016

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

மகாபாரதம், வியாச மகரிஷியால் சொல்லப்பட்டு, விநாயகரால் எழுதப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த மகாபாரதம் எப்படித் தோன்றியது தெரியுமா?

நைமிசாரண்யத்தில், பன்னிரண்டு வருடங்களில் நிறைவடையும் சந்திர யாகத்தை  சௌனக முனிவர் முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். அங்கு சூத முனிவர்  வந்தார். மற்ற முனிவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ‘‘எங்கிருந்து  வருகிறீர்கள்?

இவ்வளவு காலம் எங்கெல்லாம் போய் வந்தீர்கள்? என்று  கேட்டனர். சூதர், ‘‘ஜனமேஜய மகாராஜனின் சர்ப்ப யாகத்திற்குச்  சென்றிருந்தேன். அங்கே அரசனுக்கு வைசம்பாயன முனிவர் என்பவர், தன்னிடம்  வியாசர் கூறிய புண்ணியமான பாரதக் கதைகளைச் சொல்லக் கேட்டேன் என்றார்.

ஜனமேஜயன் மூலம் சூதர் அறிந்த பாரதக் கதை பற்றி சொல்லும்படி முனிவர்கள் ஆவலுடன் கேட்டனர்.
சூத  முனிவர் கூறலானார் : ‘‘சத்தியவதியின் தவப் பயனாகத் தோன்றிய வியாச பகவான்,  குறைவற்ற தவத்தினாலும் வழுவாத பிரம்மசரியத்தினாலும் வேதங்களை வகுத்தார்.  பிறகு பாரதமாகிய இதிகாசத்தை இயற்றினார்.

‘‘தாய் சத்தியவதியின்  கட்டளையாலும் புத்திமானாகிய பீஷ்மரின் வேண்டுதலாலும் வியாசர் தனது  மைந்தர்களாக திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகிய மூவரை அடைந்தார். அந்த  மூவரும் வளர்ந்து உலகத்தில் வாழ்ந்து பரகதி அடைந்தார்கள். அப்போது ஜனமேஜய  மகாராஜன் கேட்டுக்கொண்டதால் வியாசமுனிவர் குரு வம்சத்தின் விரிவான  சரித்திரத்தைச் சொல்லலானார்.

‘‘காந்தாரியின் பாம்பு போன்ற  குணத்தையும், விதுரனின் புத்தி வன்மையையும், குந்தியின் தைரியத்தையும்,  கண்ணபிரானின் பெருமையையும், சத்தியத்தில் பாண்டவர்க்குள்ள பற்றையும்,  துரியோதனாதியரின் தீயொழுக்கத்தையும் எடுத்துக்காட்டினார்.

இதை பின்னர்  பாரதமாக பல உப கதைகளுடன், லட்சம் சுலோகம் கொண்ட காவியமாக இயற்றினார். உப  கதைகளின்றி பாரதம் மட்டுமாக இருபத்து நாலாயிரம் சுலோகம் கொண்டது.  இதைத்தவிர, நூற்றைம்பது சுலோகங்களைக் கொண்டு பாரதச் சுருக்கம் ஒன்றையும்  வியாசர் இயற்றினார்.

பிறகு வியாசர் அந்தக் கதையை முதலில் யாருக்கு  சொல்வது என்று யோசித்துக் கொண்டே பிரம்மாவை நினைத்தார்.முனிவரை  மகிழ்விக்கவும் உலகத்துக்கு நன்மை புரியவும் அக்கணமே அவ்விடம் பிரம்மா  தோன்றினார்.

பிரம்மாவைக் கண்டு குதூகலித்த வியாசர், ‘பகவானே, நான் ஒரு  காவியத்தை இயற்றியிருக்கிறேன்.வேதத்தின் ரகசியம் முழுவதையும் அதில்  கூறியிருக்கிறேன்.

இதிகாசம், புராணம் போன்றவற்றின் உட்கருத்தும், முக்கால  நிகழ்ச்சிகளும், முதுமை, மரணம், நோய், பயம் இவற்றின் தத்துவமும், ஜாதிய  தர்மங்கள், ஆசிரம தர்மங்கள், ஆத்மவிசாரம், உலக நீதி, மருத்துவம், புண்ணிய  தீர்த்தங்கள், தேசங்கள், நதிகள், மலை, காடு, கடல், உலகப் போக்கு என  அனைத்தையும் இந்த நூலில் விளக்கியுள்ளேன்Õ என்றார்.

அதற்கு பிரம்மா,  ‘‘உலக ரகசியத்தை அறிந்த உம்மை, தவத்தில் சிறந்த வசிஷ்டரையும் விட  மேலானவராக எண்ணுகிறேன். உமது பிறப்பு முதலே உமது வாக்கு உண்மையானது என்பதை  அறிவேன். நீர் காவியம் என்று கூறியதால் இது காவியமாகவே இருக்கப்  போகிறது.

பிரம்மச்சரியம் முதலிய ஆசிரமங்களில் இல்லறம் சிறந்து  விளங்குவதுபோல் உமது காவியமும் அனைத்திலும் சிறந்து விளங்கும். அறம்,  பொருள், இன்பம், வீடு இவற்றை விளக்கும் பாரதம் என்னும் சூரியனால் நீர் உலக  இருளை அகற்றி விட்டீர்.

‘‘பாரதம் என்னும் மரத்துக்கு சங்கிரக  அத்தியாயம் விதை. பௌலோம பர்வம், ஆஸ்திக பர்வம் இரண்டும் ஆணிவேர். சம்பவ  பர்வம் அடி மரம். சபா பர்வமும், அரண்ய பர்வமும் கிளைகள். விராட பர்வமும்,  உத்தியோக பர்வமும் அதன் சாராம்சம். பீஷ்ம பர்வம் பெருங்கிளை.

துரோண பர்வம்  இலை, கர்ண பர்வம் மலர். சல்ய பர்வம் நறுமணம், ஸ்திரீ பர்வம் விஸ்தாரம்,  சாந்தி பர்வம் வலிமை. அசுவமேதம் அமுத ரசம். இந்த மரத்தை கவிகள் அனைவரும்  அண்டி இன்புறப் போகிறார்கள். மக்களுக்கு மேகத்தைப் போல் கவிகளுக்கு இது  அழிவற்ற நற்பயனை அளிக்கப் போகிறது என்று ஆசியளித்து அருளிவிட்டு பிரம்மா  மறைந்தார்.

‘‘வியாச முனிவர் இந்த மகாபாரதத்தைத் தன் மகன் சுக  முனிவருக்குக் கற்பித்தார். தகுந்த பல
சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.  நாரத முனிவர் இதைக்கற்று, தேவருக்குக்கூறினார்.

. தேவமுனி பிதுருக்களுக்கும்; சுக முனிவர்  கந்தர்வர், யட்சர், ராட்சசர் முதலியோருக்கும், வைசம்பாயன முனிவர் ஜனமேஜய  மகாராஜனுக்கும் இதைக் கூறினர்.

‘‘துரியோதனன் தீமையாகிய பெரிய மரம்,  கர்ணன் அதன் அடிப்பாகம், சகுனி கிளை, துச்சாதனன் பூவும் பழமும்,  திருதராஷ்டிரன் வேர், இது ஒரு புறம்; தர்மபுத்திரன் தர்மமே உருவான பெரிய  மரம், அர்ஜுனன் அதன் அடி மரம். பீமன் கிளை; மாத்ரியின் மைந்தர்கள் பூவும்  பழமும் ஆவார்கள்.

பகவான் கிருஷ்ணனும் வேதங்களும் அந்த மரத்தின் வேர்கள்.  இந்த இரு சாராரின் சரிதத்தை இதில் விரிவாகக் கூறியிருக்கிறார் வியாச  முனிவர். பாரதத்தின் ஒரு பகுதியை சிரத்தையாகப் படித்தால்கூட பாவம்  அனைத்தும் விலகும். இதில் தேவரிஷிகள், ராஜரிஷிகள் அனைவருடைய சரிதமும் இடம்  பெற்றிருக்கிறது. இந்த நூலை சிரத்தையுடன் படிப்போர் நீண்ட ஆயுளையும்  தேவலோகப் பதவியையும் அடைவர்.

‘‘முன் ஒரு காலத்தில் தேவ ரிஷிகள்  சேர்ந்து நான்கு வேதங்களையும் ஒன்றாகச் சேர்த்து தராசின் ஒரு தட்டில்  வைத்தார்கள். பாரதத்தை மறு தட்டில் வைத்தார்கள். பாரதம் மகத்தானதாகவும்  பாரத்தை உடையதாகவும் இருந்தது. அதனால் மகாபாரதம் எனப் பெயர் பெற்றது!  -இவ்வாறு விளக்கினார் சூதர்.
 

No comments:

Post a Comment