Thursday, September 22, 2011

கல்கி அவதாரம் எப்போது?

கிருஷ்ணர் தன் அவதார நோக்கம் முடிந்து சங்கு சக்கரத்துடன் காட்சி தந்தார். தேவலோகத்தில் தேவர்கள் அனைவரும் மலர் மாறி பொழிந்து மங்கலவாத்தியம் முழங்க பகவானை வரவேற்க காத்திருந்தனர். பூமியில் இருந்து புறப்பட்டு வைகுண்டம் சென்றடைந்தார் விஷ்ணு பகவான். கிருஷ்ணாவதாரம் முடிந்த உடனே கலியுகமும் பிறந்தது. ராம அவதாரத்தில் ராமரின் அன்பினால் கொல்லப்பட்ட வாலிதான் கிருஷ்ணா அவதாரத்தில் வேடனாக வந்து கண்ணன் மீது தவறுதலாய் அம்பு எய்தினான். அதனால் கிருஷ்ணர் உயிர் பிரிந்தது. அவர் வைகுந்தம் சென்றதால் உடன் துவாரகையும் கடலில் மூழ்கியது. கண்ணன் உடல் சந்தனக் கட்டையாகி மிதந்து குருவாயூர் சென்று அடைந்தது. அவ்விடம் தான் குருவாயூர் ஆகும். தசாவதாரங்களில் 9 அவதாரங்களில் ராமாவதாரமும்,கிருஷ்ணாவதாரமும் தான் பூரண அவதாரங்கள் இவை இரண்டும் தான் இதிகாசங்களாக மலர்ந்தன. அவைதான் ராமாயணம், மகாபாரதம். இந்த 9 அவதாரங்களுடன் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் ஓர் அவதாரம் உள்ளது. அது தான் கல்கி அவதாரம். பகவான் குதிரை முகத்துடன் யாஸஸ் என்பவருக்கு மகனாக அவதாரம் செய்ய போகிறார். தீமைகளை அழித்து நன்மை செய்யவே பகவான் அவதாரம் செய்வார். கலியுக முடிவில் மக்கள் தீமையே உருவாக உள்ளனர். அவர்களை அழித்து அமைதியும் அன்பும் நிலைநாட்ட கல்கி அவதாரம் நிகழும்.
கலியுகம் முடிவில் வருணங்கள் ஒன்றுக்கொன்று கலந்து பலவிதமாக இருக்கும். துர்க்குணம் உடையவர்கள் அதிகமாவார்கள். சாஸ்திரம் பயின்றாலும் அவற்றை அனாச்சாரங்களாகத்தான் பரப்புவார்கள். மிலேச்சர்கள் தலைமை பொறுப்பேற்று மக்களைத் துன்புறுத்துவார்கள். கலியுகத்தில் மனிதர்களிடையே பொய், வஞ்சனை, தூக்கம், சோம்பல், மனவருத்தம், ஹிம்சை செய்தல், பலவீனம், பயம், அறியாமை, அழுகை அதிகமாக இருக்கும் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற வெறி ஏற்படும். துறவிகள் பணத்தாசையால் அலைவர். இல்லறத்தார் எங்கே எது கிடைக்கும் என்று திரிவர். தாய் வழி உறவினர்களை தவிர்த்து மனைவி வழி உறவினர்களை மட்டுமே மதிப்பார்கள். மனைவிக்கு மட்டுமே கட்டுப்படுவர். சிறிதளவு சொத்துக்கும் உறவினர்களை கொல்வார்கள். பெற்றோர்களைக் காப்பாற்ற மாட்டார்கள். திருமணத்தில் முறை இருக்காது. இவ்வளவு கெடுதல் இருந்தாலும் கடுமையான தியானத்தால் கிருதயுகத்திலும், யாகங்களில் திரேதா யுகத்திலும் பூக்கள் கொண்டு செய்த விரிவான பூஜைகளால் துவாபர யுகத்திலும் கிடைத்த அதே பலனை கலியுகத்தில் கண்ணனின் திருநாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே கிடைத்துவிடும். பாவங்களும் விலகிவிடும். கலியுகத்திலும் இதுவே யுகதர்மமாக மாறும்.
கலியுகத்தில் 3000 ஆண்டுகள் கடந்துவிட்டன என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். கலியுகத்தின் 2000 ஆண்டு கழிந்ததுமே அன்னிய ஆதிக்கம் பரவிவிட்டது. கலியுகத்தின் கேசவனுடைய ஹரி நாமத்தை பாராயணம் செய்வதாலேயே 3 யுகங்களுக்கான புண்ணியம் பெற்று விடலாம். இப்படி மகனீயர்களும் தபஸ்விகளும் தாம் அதர்மத்தை சீர்தூக்கிப் பார்த்து உணர்ந்தாலும் உலகில் தர்மம் சிதைந்து நீதி நேர்மை நசிந்து அராஜகம் தலை விரித்தாடும் போது நல்லவர்களையும் தர்மத்தையும் காக்க கல்கி அவதாரம் நிகழும்.

No comments:

Post a Comment