Thursday, September 22, 2011

பூணூலை எப்படி போட வேண்டும்?

தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம்; சிரத்தையோடு செய்வது சிரார்த்தம். தெய்வ காரியங்களைப் பண்ணும்போது, சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாகப் பக்தியோடு செய்ய வேண்டும். பித்ரு காரியங்களைச் செய்யும்போது சிகையை முடியாமல், யக்ஞோபவீதம் வலது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும். இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பவ தேவதைகளின் உபாஸனையையும் விட்டு விட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபேøக்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோப வீதம் இல்லை. ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ண வேண்டும் என்று சொல்கிறேன் :
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயணம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு, தெற்கு தான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். தென்புலத்தார் என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம். (உத்தராயணம் என்பதில் மூன்று சுழி ண போட்டும், தக்ஷிணாயனம் என்னும் போது இரண்டு சுழி ன போட்டும் சொல்ல வேண்டும். அயனம் என்றால் மார்க்கம், வழி என்று அர்த்தம். உத்ர என்பதில் வருகிற ர காரத்தினால் ன என்பது ண வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்தி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது. உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்கு முகமாக இருந்து கொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள் தான். அதனால் தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின் மேல் இருக்கும் படியாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது.
பிரதக்ஷிணம் பண்ணுவது என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கிப் போவது என்று தான் அர்த்தம். (முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்க்கத்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.) இதே மாதிரி, நாம் கிழக்கு முகமாக இருந்து கொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள் தான். அதனால் தான்,தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது. தேவ காரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின்போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலை மாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment