Friday, September 16, 2011

** குங்குமத்தை எந்த விரலால் இட வேண்டும்?சுவாமிக்குப் படைத்த எலுமிச்ச பழத்தை சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரம் இருந்தால் கூறுங்கள்.

தினமும் ராகு காலத்தில் ஒரு கிண்ணத்தில் முழு உளுந்து நிரப்பி அதன் நடுவே தீபம் ஏற்றி வைத்து, துர்க்கையையும், ராகுவையும் மனதில் வேண்டி கொண்டு ஒன்பது முறை வலம் வாருங்கள். பிறகு அந்த உளுந்தை ஏழைக்குக் கொடுங்கள். இயன்ற வரை உளுந்து தானம் செய்யலாம். தோஷம் நீங்கி மங்களம் ஏற்படும்.

* சுவாமிக்குப் படைத்த எலுமிச்ச பழத்தை சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

அர்ச்சனை செய்த தேங்காய் மூடிகளை சமையலுக்குப் பயன்படுத்துவதில்லையா? அது போலத்தான் எலுமிச்சம்பழமும். தாராளமாக சமையலுக்கு உபயோகிக்கலாம்.

* அபிஷேகம் செய்யும் பொருட்களுக்கு ஏற்ப தனித்தனி பலன்கள் உள்ளதாகக் கேள்விப்பட்டேன் விளக்கம் தரவும்.

பொதுவாக இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பாவங்களைப் போக்கி புண்ணியத்தைத் தரவல்லது. இப்பிறவியில் பாவமே செய்யவில்லையே என்று கேட்கலாம். போன பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் பலன் தான் இப்பிறவியாகும். அப்போது செய்த பாவங்களின் பயனாய் இப்பிறவி வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படுகின்றன. இவை நீங்கி இன்பமாய் வாழ சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிக உத்தமமாகும்.
தண்ணீர் அபிஷேகம் பாவம் நீக்கும். எண்ணெய் தரித்திரம் நீக்கும், பால் ஆயுள் விருத்திக்கு உதவும். தயிர் நோய் நொடிகளைப் போக்கும், பஞ்சாமிர்தம் வம்சவிருத்தியை உண்டாக்கும். விபூதி நல்லறிவைத் தரும். பழவகைள், இளநீர் பித்ரு சாபத்தை நீக்கும். சந்தனம், பன்னீர் லட்சுமி கடாட்சம் உண்டாக்கும்.

* துளசி இலைகளை சில குறிப்பிட்ட நாட்களில் பறிக்கக் கூடாது என்பதன் காரணம் என்ன?

வில்வ மரத்தில் சிவபெருமானும், துளசியில் மகா விஷ்ணுவும் வசிக்கிறார்கள். திங்கட்கிழமை அதாவது சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த நாள். எனவே, அன்றைய தினம் வில்வம் பறிப்பதில்லை. அதுபோல சனிக்கிழமை ஏகாதசி திருவோணம் போன்ற நாட்கள் மஹாவிஷ்ணுவிற்கு உகந்தவை. எனவே இந்நாட்களில் துளசி பறிப்பதில்லை.

** குங்குமத்தை எந்த விரலால் இட வேண்டும்?

வலது கை மோதிர விரலால் இட்டுக் கொள்ள வேண்டும். கட்டை விரலால் இட்டுக் கொண்டால் பணவிரயமும், ஆள்காட்டி விரல் சந்ததிக் குறைவையும், பெருவிரல் பயிர் தான்யக் குறைவையும், சுண்டு விரல் புகழ் குறைவையும் ஏற்படுத்தும். மோதிர விரல் சகல சம்பத்துக்களையும் அளிக்கும்.

* ருத்ராட்சத்தை எல்லோரும் அணிவது முறை தானா?

ஏற்கனவே இரு முறை இது சம்பந்தமாக விரிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஒழுக்கமாகவும், தூய்மையாகவும் இருப்பவர்கள் மட்டுமே இதை அணியலாம்.

* கடல் கடந்து பயணம் சென்று வந்தால் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறார்களே? உண்மையா!

நாள் கணக்கில் கப்பலில் பயணம் செய்து கடல் கடந்து வேறு நாட்டுக்குச் சென்ற போது பரிகாரம் தேவைப்பட்டது. மூன்று வேளை சந்தியாவந்தனம் அனுஷ்டானம் செய்பவர்கள் நிறைவில் பூமியில் சிறிது தண்ணீர் விட்டு அதைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். கப்பலில் பயணம் செய்யும் போது இது சாத்தியப்படாததால் பரிகாரம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது விமானத்தில் பயணிக்கும் காலமாதலால் அனுஷ்டானக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, பரிகாரம் தேவையில்லை. அதே நேரம் ஒரு விஷயத்தை முக்கியமாக
கவனிக்க வேண்டும். அனுஷ்டானங்களையும், இறைவழிபாட்டையும் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக்கூடாது என்பது தான் ஆன்றோர் வகுத்துள்ள நல்வழி.

No comments:

Post a Comment