Friday, December 21, 2012

12 நாட்கள் கர்மா செய்வது ஏன்?

கர்மாக்கள் செய்வதில் காலம் மிகவும் முக்கியமானது. எந்தக் கர்மாக்களை எவ்வளவு நாட்கள் செய்ய வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளதோ, அந்த கர்மாக்களை அவ்வளவு நாட்கள் வரை செய்தால்தான் முழுமையான பலனை அடைய முடியும். தற்போது நாம் பல கர்மாக்களை, காலஅவகாசம் இல்லாததால் சுருக்கிக் கொண்டு விட்டோம்.

நான்கு நாட்கள் அக்னியை காப்பாற்றி சமிதாதானம் செய்து முடிக்க வேண்டிய பூணல் போடுதல் என்னும் நிகழ்ச்சி ஒரே வேளையில் முடிக்கப்படுகிறது. மாலை பிரவேச ஹோமம் செய்து தொடர்ந்து நான்கு நாட்கள் ஒளபாஸன ஹோமம் செய்து ஐந்தாவது நாள் சேஷஹோமம் செய்து முடிக்க வேண்டிய ஐந்துநாள் திருமணம் ஒரேநாளில் முடிக்கப்படுகிறது.

இப்படி பல கர்மாக்களின் காலத்தை நாம் சுருக்கிக் கொண்டு விட்டாலும் கூட, நமது சமூகத்தில் இன்றுவரை இறந்தவருக்காகச் செய்யப்படும் கர்மாக்களை சுருக்கிக் கொள்ளவில்லை. இது நாம் பெருமைப்படக்கூடிய விஷயம். மேலும் கர்மாக்கள் இன்றும் கூட பல இடங்களிலும் பெரியோர்களின் உதவியோடு மிகுந்த சிரத்தையுடன் (ஈடுபாட்டுடன்) நடத்தப்படுகின்றன.

இவ்வாறு நடத்தப்படுவதால் இறந்தவருக்கு நல்ல கதி (வழி) ஏற்படுத்தப்படுவதுடன், இறந்தவரின் ஆசியால் கர்மா செய்யும் மகன் மகள்கள் மற்றும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்யம், வம்ச விருத்தி, முதலான அனைத்து நன்மைகளையும் அடைகிறார்கள். எதற்காக பத்துநாள் செய்ய வேண்டும், இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே இந்த காரியங்களைச் செய்து விடலாமே! என்னும் கெட்ட எண்ணம் இதுவரை யாருக்கும் எழவில்லை.

இதற்கு இறந்த ஜீவனிடம் இருக்கும் பாசம் அல்லது பயமும் காரணமாக இருக்கலாம். இன்றுவரை இறந்தவருக்கான கர்மாக்கள் இறந்தது முதல் பன்னிரெண்டு நாட்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 13-வது நாள் செய்யப்படும் கர்மா இறந்தவருக்காக அல்ல, குடும்பத்தில் உள்ள நபர்களுக்காக. ஆகவேதான் இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இன்றும் நலமாக இருக்கின்றார்கள்

No comments:

Post a Comment