Monday, May 2, 2011

பூசலார் நாயனாரின் கதை

பூசலார் நாயனாரின் கதைகோடி கோடியாய் கொட்டி அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதில்லை. அனுதினமும் மனதளவில் இறைவனை தியானித்தாலே போதும் பக்தர்களின் மனக்கோவிலில் இறைவன் எழுந்தருளுவான். இதனை பூசலார் நாயனார் மெய்ப்பித்திருக்கிறார்.
சிவபெருமானின் அருளைப்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் என்பவர் ஏழை சிவபக்தர்.திருநின்றவூரில் வசித்து வந்த அவர், சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்ப அயராது முயற்சி செய்தார். எனினும் எவரிடம் இருந்தும் பொருளுதவி கிடைக்கவில்லை.இதனால் துயரம் அடைந்த பூசலார் மனதிலேயே இறைவனுக்கு ஆலயம் கட்ட நினைத்து ஆகமவிதிப்படி அதற்காக பணிகளை மேற்கொண்டார். மானசீகமாக மனதில் கட்டிய கோவில் மளமளவென முடிந்தது. கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார் நாயனார்.

இதே நேரத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவபெருமானுக்கு கருங்கல்லால் ஆன அழகிய ஆலயத்தை கட்டியிருந்தான். வேதியர்களின் ஆலோசனைப்படி குடமுழுக்கு செய்ய நாள் குறித்தான் மன்னன். பூசலார் குறித்த நாளும், மன்னன் குறித்த நாளும் ஒரே நாளாக அமைந்தது இறைவனின் திருவிளையாடல்.குடமுழுக்கு தினத்தின் முதல்நாளன்று மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான். குடமுழுக்கு நாளினை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். திருநின்றவூரில் உள்ள பக்தர் ஒருவர் கட்டிய ஆலயத்தில் எழுந்தருள இருப்பதாகவும் மன்னனிடம் கூறினார் இறைவன்.

இதனால் ஆவல் கொண்ட மன்னன், தனது பரிவாரங்களுடன் திருநின்றவூர் சென்று, பூசலாரை வணங்கி நின்றார். மன்னனே தம்மை காண வந்த நோக்கம் அறிந்த பூசலார் மெய்சிலிர்த்தார். தமது உள்ளக்கோவிலில் எழுந்தருள வேண்டி மன்னனையே வேறு நாள் மாற்றச் சொன்ன இறைவனை நினைத்து உள்ளம் உருகினார் பூசலார்.பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன் அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயம் போலவே திருநின்றவூரில் ஒரு ஆலயம் எழுப்பினார். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த ஆலயம் தான் இன்றைக்கும் திருநின்றவூரில் கம்பீரமாக உள்ள இருதயாலீசுவரர் ஆலயம்.இந்த ஆலயத்தின் கருவறையில் ஈசனின் லிங்கத்துடன் பூசலாரின் சிற்பமும் இணைந்துள்ளது சிறப்பம்சம். தினமும் மனதில் நினைத்து வழிபட்ட பூசலார் நாயன்மாரின் கதை இன்றைய தலை முறையினருக்கும் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment