Tuesday, May 17, 2011

இந்து சமயக் கோட்பாடுகள்

 சிந்துநதிக்கரையில் வசித்துவந்தவர்களை ‘சிந்துக்கள்’ அல்லது ‘இந்துக்கள்’ எனப் பாரசீகரும், கிரேக்கரும் அழைத்து வந்தனர். அவர்கள் பின் பற்றிய சமயமே இந்து சமயம் என்று சில சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்திய நாட்டினரின் மதமே இந்து மதம் எனப்பொருள் கூறுவாரும் உண்டு. ஒரு நாட்டின் பெயராலோ, ஒரு ஆற்றின் பெயராலோ நமது ஒப்புயர்வற்ற மதம் ஏற்பட்டது என்பது பொருத்தமற்றது. அதனால் இதன் உண்மைப்பொருளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.



இந்து மதம் என்னும் பெயர் அதன் கொள்கையை மேற்கொண்டு வந்ததாகும்.




இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப்பிரிக்கலாம். ஹிம் - ஹிம்சையில், து - துக்கிப் பவன் எனப்பொருள்படும். ஓர் உயிர் எந்த காரணத் தினாலாவது வருந்துவதாக இருந்தால், அத்துயரத்தை தனக்கு ஏற்பட்ட துயரமாகக் கருதி அகற்ற முன்வரவேண்டும். அத்தகையவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களை கொண்ட மதமே இந்து மதமாகும்.



அன்பே கடவுள். இறைவன் எல்லா உயிர் களிடத்தும் நீங்காமல் வாழ்கிறான். எல்லா உயிர்களின் உடம்பையே அவன் கோயிலாக கொண்டுள்ளான். ஆதலால் எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடம் அன்பு செலுத்தினால் அருள் வடிவமாகிய ஆண்டவனது அருள் பெறலாம். இதனை திருமூலர் தம் திருமந்திரத்தில்,



“""அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்



அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்



அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்



அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே''’’- என்கிறார்.



இந்து மதம் என்பதற்கு “சனாதன தர்மம்’’ என வேறு ஒரு பெயரும் உண்டு. இதற்கு அழிவில்லாத அறம் என்பது பொருள். மேலும் இந்து சமயம் முறையே திருநெறி, அருள்நெறி தவநெறி, மெயந்நெறி, சன்மார்க்கம் என்ற பல பெயர்களைக் கொண்டது. சமயம் என்பதற்கு ‘சமை’ என்பது பகுதியாய் உடம்பை வளர்ப்பதற்கு உணவுப் பொருளைச் சமைப்பது போல இறைவனை அடைவதற்கு பக்குவப்படுத்து வது இதன் பொருளாகும்.



இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மை யானது. அது ஒருகாலத்தில் உலகெங்கும் பரவி யிருந்தது என்பதை தற்கால நவீன புதைபொருள் ஆராய்ச்சி முதலியவற்றால் அறியலாம். பிற சமயங்கள் கூறும் கொள்கைகள் பல நமது இந்து சமயத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆதலால் உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் தாய்ச் சமயமாக இந்து சமயம் உள்ளது என கூறலாம்.


அறுவகைச் சமயங்கள்



இந்து சமயம் முறையே சைவம், வைணவம் காணாபத்யம், கௌமாரம், சாக்தம், சௌரம் என்று ஆறுவகையாகப் பகுத்துக் கூறப்படுகிறது.



திருமூலர் இதனை ""ஒன்றது பேரூர் வழி ஆறு அதற்குள்''’’ என்று கூறுகிறார். முதலில் சைவம். சிவபெருமானை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொண்ட சமயம் ‘சைவம்’ எனப்பட்டது. சைவத்தில் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மை மிகவும் விளக்கமாய் கூறப்படுகிறது. இவற்றை இறைவன் உயிர், தளை எனவும் கூறுவர்.



அடுத்து வைணவம் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் வைணவமாகும். இது வடகலை, தென்கலை என இருவகைப்படும். வட கலையார் வட மொழியில் உள்ள வேதசாத்திரங்களுக்கு முதலிடம் கொடுப்பர். தென் கலையார் தமிழ் மொழியில் உள்ள ஆழ்வார் களால் அருளப் பெற்ற பிரபந்தங்களுக்கு முதலிடம் தருவார்கள்.



இன்னொன்று காணாபத்யம். கணபதியே முழுமுதற்பரம் பொருள்,’ ஓங்கார வடிவினாக அவரை வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது காணாபத்யம். இதனை கணாபத்யம் எனவும் கூறுவர்.



கௌமாரம் என்பது குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்பவடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது.



சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயமே சாக்தம் ஆகும். சக்தி வழிபாடு - சக்தியே தெய்வம். அவரைத்தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது.



சூரியனை வழிபடுகடவுளாகக் கொள்வது சௌர சமயமாகும். பேரொளி வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சமயமாகும். சிவஞான சித்தியார், “அறு வகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர்



பொருளாய்’’ கடவுள் இயங்குகிறார் என இயம்பு கிறது. இதன் அடையாளமாகவே நமது சிவ ஆலயங் களில் கணபதி, முருகன், சூரியன், விஷ்ணு, அம்மையப்பர் மற்றும் துர்க்கையம்மன் ஆகிய திருவுருவங்களை அமைத்து வழிபாடு செய்து வருகின்றோம்.


இந்து சமய இலக்கியங்கள்



ஒவ்வொரு சமயத்திற்கும் முக்கியமான சமய நூல் ஒவ்வொன்று உள்ளது. நமது இந்து சமயத் திற்கும் வேதம், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணம் எனப் பல நூல்கள் உள்ளன.



வேதங்களானது தெய்வீகமான கருத்துகளைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப்பதால் அது மறையெனப் பெயர் பெற்றது. வேதங்களை வியாசர் நான்காக வகுத்துள்ளார். வேதங்களோடு தொடர்பு டைய சம்ஹிதைகள், பிராம்மணங்கள், ஆரண்ய கங்கள் மற்றும் உபநிடதங்கள் இந்து சமய இலக்கியங்களாய் பெருமை சேர்க் கின்றன.



அடுத்து ஆகமம். ஆகமம் என்றால் ஆன்மாக் களின் பாசங்களை நீக்கி வீடுபேற்றை அருளுதல். இவை மொத்தம் இருபத்தெட்டு ஆகமங்கள்



தமிழ் கடவுள் சிவன் மீது பாடப்பட்டவை திருமுறைகள். திருமுறை என்பதற்கு தம்மை அடைந்தவர்களை சிவமேயாக்குகின்ற முறை யெனப் பொருள் கூறுவர். திருமுறைகள் பன்னிரன்டு ஆகும்.



வைணவ சமயத்தில், விஷ்ணுவை தமிழ்ப் பாமாலைகளால் வழிபட்ட பன்னிரு ஆழ்வார்கள் அருளிச் செய்தவை. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆகும்.



அதேபோல சாத்திரங்கள் இவை பதினான்கு சாத்திரங்கள். இவற்றை மெய்கண்ட சாத்திரங்கள் என்பர். இவற்றில் தலை சிறந்தது சிவஞான போதம். சிவம் என்றால் ஒப்பற்ற மெய்ப் பொருள். ஞானம் என்றால் அதனை அறிதல். போதம் என்றால் தெளிதல். எனவே சிவஞான போதம் என்றால் ஒப்பற்ற மெய்ப்பொருளாகிய கடவுளை அறிந்து தெளிய உதவும் நூல் என்று பொருள் இது மெய் கண்ட தேவரால் அருளிச் செய்யப் பட்டது.



இதனையடுத்து அருணந்தி சிவாசாரிய சுவாமிகளால் இயற்றப்பட்டது சிவஞான சித்தியார் என்பதாம். மேலும் உமாபதி சிவாசாரியாரால் எட்டு நூல்கள் எழுதப்பட்டன. மெய் கண்டார், அருள் நந்தி, உமாபதி சிவம் ஆகிய சந்தனாச்சாரியார்கள் சைவ சித்தாந்தத்தை முறைப்படுத்தியவர் என்ற பெருமை படைத்தோராவர்.



இந்தியாவின் இரு ஒப்பற்ற காவியங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகும். இதிகாசம் என்பதற்கு “ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு’’ என்று பொருள். இராமாயண காவியத்தை இயற்றினார் வால்மீகி முனிவர். பாரதத்தை வியாச முனிவர் இயற்றினார். இதனை ஐந்தாம் வேதம் என்று சிறப்பித்துக் கூறுவர். பகவத்கீதை இதனுள் அடங்கியுள்ளது.



அடுத்து புராணம். புராணம் என்பதற்கு பழமை யான வரலாறு என்பது பொருள். புராணங்களை எழுதியவர் வேத வியாசர். இதனை உலகிற்கு அளித்தவர் சூதபுராணிகர் என்பதை அறிவோம். இந்த மகாபுராணங்கள் பதினெட்டு ஆகும்.


இந்து சமயக் கோட்பாடுகள்



இந்து சமயம் வலியுறுத்தும் சாதாரண அறக் கோட்பாடுகள் தவிர முக்கியமானவை இரண்டு;



1) வேதாந்த நெறிகள்



2) பகவத் கீதையில் கூறப்படும் நான்கு யோகங்களாகிய மார்க்கங்கள்.



வேதாந்த நெறிகள் முறையே அத்வைதம், விசிஷ்டாத் வைதம், துவைதம் ஆகும்.



அத்வைதக் கோட்பாட்டை உலகிற்களித்தவர் சங்கரர். அத்வைதம் என்னும் சொல்லை அ + துவைதம் எனப்பிரிக்கலாம் அ = இல்லை, துவைதம் - இரண்டு. அத்வைதம் = இரண்டற்ற ஒன்று “அகம்பிர்மாஸ்மி’’ - நான் பிரம்மமாய் இருக்கிறேன் என்பது. “பிரம்மம்’’ என்ற ஒரு பொருளே உண்மை, நிலையானது. ஜீவன்கள் அனைத்துமே பிரமம் ஆவர். இறைவனைப் பரமாத்மா என்றும் உயிர்களை ஜீவாத்மா என்றும் ஒவ்வொரு ஜீவாத்மாவும் “பரமாத்மாதான்’’ என்பதே இவ்உயரிய கோட்பாடு ஆகும்.



அதே போல விசிஷ்டாத்வைதம் இவ்வேதாந்த நெறியை உலகிற்கு அளித்தவர் இராமானுஜர் ஆவார். விசிஷ்ட + அத்வைதம் = விசிஷ்டாத் வைதம். அத்வைதம் இரண்டற்ற ஒன்றாக உள்ளது. விசிஷ்டம் - விசேஷம். விசிஷ்டாத் வைதமானது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து.



அடுத்து துவைதம் இந்நெறியை அல்லது சமயத்தைப் பரப்பியவர் மத்துவர். இவர் துளுவ நாட்டில் உள்ள உடுப்பிக்கு அருகில் அநந்தேஸ்வரம் என்னும் கிராமத்தில் அவதரித்தார். தமது ஒன்பதாம் வயதில் அச்சுதபிரகாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார்.



இன்னொன்று துதைம். துவி என்றால் இரண்டு. பிரபஞ்சமும், பரமாத்மாவும் வேறானவை. பரமாத்மா தனி, மற்றவை அதில் சேராதவை என்பதாகும். பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம் - இவை எவராலும் உண்டாக்கப் படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம் என்பதை வலியுறுத்தும் கோட்பாடு.


நான்கு மார்க்கங்கள்



மனிதன் தான் போகின்ற போக்கிலேயே விட்டால் அவன் படிப்படியாக நிதானமாய் வளர்ச்சியடைவான். மேலும் ஒருபடி சென்று தெய்விகத் தன்மை அடைய லாம். இப்படி காலத்தே வளர்ச்சி தானே நிகழும் என இரு தலை “"எறும்பு வழி'’’ அல்லது பிப்பீலிகா மார்க்கம் என்பர்.



மாறாக மனிதன் தன் உடல் மூச்சு, மனம் அறிவு ஆகியவற்றை பயன்படுத்தி பெருமுயற்சி செய்து இறையருளைப் பெற்று விரைவில் தன்னை முன்னேற் றிக் கொள்வது “"விஹங்கம மார்க்கம்' அல்லது “பறக்கும் வழி’’ எனப்படும். தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் மார்க்கங்கள் (நெறிகள்) முறையே, ஞான மார்க்கம், இராஜ மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் - என்பனவாம்.



இவை முறையே ஞானநெறி, இராஜநெறி, கர்மநெறி மற்றும் பக்தி நெறி என்னும் யோகம் என்றும் போற்றப் படுகின்றன.



முதலில் ஞான மார்க்கம். கூர்மையான அறிவு டையவர்கள் நல்லதையும் கெட்டதையும் அறிந்து, என்றும் நிலைத்திருப்பதையும், விரைவில் அழிந்து விடுவதையும் சிந்தித்து உணரும் ஆற்றல் உடையவர்கள்.



இவ்வறிவின் துணை கொண்டு சத்தியத்தையும் முழுமையான பரம்பொருளை தேடும் வழியே ‘ஞான மார்க்கம்’ எனப்படும்.



இரண்டாவது இராஜ மார்க்கம். மனிதன் சுய உணர்வுடன் உடம்பு, மூச்சு, மனம் இவற்றைக் கட்டுப் படுத்தி, ஒழுங்குபடுத்தி, தனக்குள்ளே ஒளிந்துகிடக்கும் சக்திகளைத் தூண்டி வெளிப்படுத்துவது ‘ராஜயோகம்’ எனப்படும். இதுவே இராஜமார்க்கம் எனப்படுகிறது. இதன் இறுதி இலட்சியம் மனதில் அல்லது உணர்வில் தோன்றும் அலைகளை அடக்குவது ஆகும். “ஒம்’’ என்ற பிரணவம் இங்கு வழிபடப் படுகின்றது.



மூன்றாவது கர்ம மார்க்கம். வாழ்க்கையில் மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் இரண்டு விதமான பயன்கள் இருக்க வேண்டும்.



ஒன்று அச்செயலினால் சமுதாயத்திற்கு லாபம் கிடைக்க வேண்டும், இரண்டு அச்செயல் அவனுடைய தெய்வ பக்தியை வளர்க்க வேண்டும்.



இந்த இருவிதமான பயன்கள் உடையவையாக ஒவ்வொரு செயலையும் ஆக்கும் விதியைக் கர்ம நெறி என்ற பெயரில் பகவத்கீதை உணர்த்துகிறது. தொழில் வாழ்க்கை, புறவாழ்க்கை என்ற வெளி வாழ்க்கையையும் குளித்தல், நடத்தல், உண்ணுதல், தானம் செய்தல் போன்ற சொந்த வாழ்க்கையின் செயல்கள் ஆகிய அனைத்துமே தனக்கு அக இன்பமும் சமுதாய நலமும் வளரும்படி செய்கின்றன. ஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் செய்கின்ற ஆசனம், பிராணாயாமம், தவம், நன்னூலறிவு ஆகிய அனைத்தும் உலக நன்மைக்கும் உதவும்படி எல்லோரும் இன்ப வாழ்வுவாழ கீதை வழி சொல்கின்றது. எனவே சமுதாயத்தின் அங்கத்தினராகிய ஒவ்வொரு வரும் தத்தம் கடமைகளை முறையாகவும் திறமை யாகவும் ஆற்றுவதை கர்ம மார்க்கம் எனலாம்.



நான்காவது பக்தி மார்க்கம். பரம்பொருள் மீது கொண்ட அன்பினால் மனிதன் அகந்தையை ஒழித்து, தன் சிறுமையைத் தவிர்த்து, உலகளாவிய உணர்வுள்ள வனாய் தியாகம், அன்பு வாயிலாக உயரிய நிலையை அடைவது பக்தி மார்க்கம். பக்தன் எதை நம்புகிறானோ அதுவாகவேதான் ஆகிவிடுகிறான் என்பது கீதையில் கண்ணன் கருத்து. இதை உணரும் விதம் நாம் பின் வருவனவற்றில் காணலாம். அடக்கமுடைய சரஸ்வதி போன்ற தெய்வங்களை வணங்கும்போது பக்தனும் பணிவுடையுவன் ஆகிறான். பற்றற்ற சிவனாரை வணங்கும் போது பக்தனும் பற்றற்றவனாகிறான். அன்பு மிகுந்த கண்ணனை வணங்கும். போது தருமம் ஆகிய ஆறு நற்குணங்களைக் கொண்ட இறைவனை பக்திப் பரவசத்தால் வழிபடும் போது நாமும் அந்த ஆறு நற் குணங்களை உடையவராகிறோம்.



இறுதியாக, இந்திய பண்பாட்டிற்கு அளித்திருப்பது இந்து சமயந்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.



இந்தியப் பண்பாட்டை எல்லோரும் போற்றச் செய்வதும் நமது பழம்பெரும் இந்து சமயத்தின் வாயிலாகத்தான் என்றால் அது மிகையாகாது.

1 comment: