Friday, April 24, 2015

நம்பிக்கைத் துரோகம் செய்தால் அழியவேண்டியதுதான்

ஒரு குளத்தில் மீன்களும் நண்டுகளும் வசித்து வந்தன. அந்த குளக்கரையில் வசித்து வந்த கிழட்டு கொக்கு, அவ்வப்போது மீன்களைப் பிடித்து தின்று வந்தது. அதிக சிரமமின்றி மீன்களைப் பிடித்துத் தின்ன என்ன வழி என்று யோசித்தது. மனதில் ஒரு தந்திரம் தோன்றியது.
வருத்தத்துடன் அமர்வதுபோல குளக்கரையில் வந்து கொக்கு அமர்ந்து கொண்டது. அதைப் பார்த்த நண்டு "கொக்காரே , ஏன் மீன்களைப் பிடித்துத் தின்னாமல் கவலையுடன் அமர்ந்திருக்கிறீர்?' என்று கேட்டது. "சில நாட்களில் மீனவர்கள் வந்து குளத்தில் மீன் பிடிக்கப் போகிறார்கள். அதன் பிறகு ஒரு மீன் கூட இருக்காது. நான் என் உணவுக்கு என்ன செய்வேன்? அதுதான் கவலை' என்று கொக்கு கூறியது. மீன்கள் பயந்துவிட்டன. "இதிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லையா?' என்று கேட்டன.
"பக்கத்திலேயே இன்னொரு குளம் இருக்கிறது, நீங்கள் சம்மதித்தால் ஒவ்வொருவராக அங்கே தூக்கிச் சென்று விடுகிறேன்' என்று கொக்கு கூறியது. மீன்கள் கொக்கின் யோசனைக்கு சம்மதித்தன. ஒவ்வொரு மீனாக கௌவிக் கொண்டு பறந்தது. சற்று தூரத்தில் உள்ள பாறையில் அமர்ந்து ஒவ்வொன்றாக உண்டது. மீன்முட்கள் பாறையில் சிதறிக்கிடந்தன.
ஒரு நாள் நண்டைத் தின்ன ஆசைப்பட்டது. கொக்கு நண்டுகளின் தலைவனை தூக்கிக் கொண்டு பறந்தது. பாறைக்கு நண்டை கொண்டுபோனவுடன் அங்கே சிதறிக் கிடந்த மீன் முட்களை பார்த்ததும் கொக்கின் நோக்கம் சட்டென நண்டுக்கு புரிந்து போயிற்று. எதிர்பாராதபடி தாவி கொக்கின் கழுத்தை தனது கொடுக்கால் பிடித்து இறுக்கியது நண்டு. கொக்கு "என்னை கொன்று விடாதே' என்றுகெஞ்சியது.
"நம்பிக்கைத் துரோகியை விட்டால் ஆபத்து' என்று கூறிய நண்டு மேலும் தன் பிடியை இறுக்கி கொக்கின் கழுத்தைத் துண்டித்துக் கொன்றது.
நீதி: நம்பிக்கைத் துரோகம் செய்தால் அழியவேண்டியதுதான்

No comments:

Post a Comment