Thursday, October 16, 2014

ஒருவரின் ஆன்மிக பயணத்திற்கு உதவக் கூடியவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்

ஒருவரின் ஆன்மிக பயணத்திற்கு உதவக் கூடியவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம் -வழிகாட்டிகள், ஆசிரியர்கள் மற்றும் குரு.
(தமிழில் 'மற்றும்' என்ற வார்த்தையை 'and' என்ற வார்த்தையைப் போல சிலர் பயன்படுத்துகின்றனர், இங்கு அப்படி பயன்படுத்தப் படவில்லை)
வழிகாட்டி என்பவர் நம்முடன் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் நமக்கு வழியை காட்டியபின் தன்வழி செல்வார். அவர் காட்டும் வழி சரியான வழியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சரியான வழியை முடிவு செய்து செல்ல வேண்டியது பயணியின் பொறுப்பு.
ஆசிரியர் என்பவர், பயணத்தைப் பற்றி தன் அறிவால் அறிந்ததை நமக்கு அறிவுறுத்த முயல்பவர். அவர் அறிவுறுத்துவதை அவர் அனுபவித்திருக்க வேண்டிய அவசியமில்லை, பயணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. படிப்பறிவு, கேள்வியறிவால் அறிந்தவற்றை புரியும்படி எடுத்துச் சொல்ல தெரிந்தால் போதும். சரியானவற்றை மட்டுமே அறிவுறுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கில்லை. அவர் அறிந்ததை சரியாக அறிந்திருப்பார் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை. இங்கு சரியானவற்றை சரியான முறையில் கற்றுக்கொள்வது கற்பவரின் பொறுப்பு.
குரு என்பவர் மற்ற இரண்டு விதமானவர்களை விட மிகவும் மாறுபட்டவர். தகுதியுடையவனைத் அடையாளம் கண்டு, தேடிச் சென்று அவனை சீடனாக ஏற்பார். சீடன் அறியவேண்டியவற்றை சரியான நேரத்தில், சரியான முறையில் அறிவுறுத்துவார். சீடனை வழிநடத்தும் பொறுப்பை ஏற்பார். தான் சென்றடைய முடியாவிட்டாலும், தன்னையிழந்தேனும், சீடன் சென்றடைய வழி செய்வார்.

No comments:

Post a Comment