Monday, October 20, 2014

நவராத்திரிக்குரிய சிவ பூஜை முறைகள்

புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சம் முடிந்த பின்னர் நவராத்திரி பூஜை ஆரம்பமாகின்றது. ஆனால், மகாளய அமாசையன்று பித்ரு காரியங்களை முறையாகச் செய்தால் தான் நவராத்திரி பூஜைகளைக் கடைப்பிடிக்க நாம் தகுதி பெற்றவர்கள் ஆவோம். எனவே மகாளய அமாவாசை பூஜையை தவறாமல் செய்ய வேண்டும்.

அமாவாசை திதி:-

மகாளய அமாவாசை பூஜை என்றாலே நம் முன்னோர்களை நினைத்து வழிபடும் பித்ரு பூஜை தான். ஆனால் தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் பித்ருக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகவே தெரியவில்லை. அவர்களுக்கு உரிய பூஜைகளை முறையாகச் செய்வதும் கிடையாது.

வருடத்திற்கு ஒருமுறை மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையில் மட்டும் தர்ப்பணம் கொடுத்து விட்டுப் பேசாமல் இருந்து விடுகின்றனர். அது தவறு. பித்ரு பூஜைகளை தினமுமோ, மாதாமாதமோ கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

மகாளய அமாவாசையன்று பித்ரு தேவதைகள் அனைவரும் வைத்தியர்கள் ரூபத்தில் தான் வருகின்றனர். எனவே, அன்று வைத்தியர்களுக்கு பாத பூஜை செய்து, அவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும்.

மகாளய அமாவாசை தின அதிதி போஜனத்தில் பன்னிரண்டு பேர்களுக்குக் குறையாமல் உணவு அளிக்க வேண்டும். இது உத்தமப் பலன்களைப் பெற்றுத் தரும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தல் அல்லது வீட்டிற்குக் கூரை வேய்ந்து தருதல் வேண்டும்.

முதல்நாள்-பிரதமை திதி:-

பகலில் கண்டிப்பாக சிவ பூஜை செய்தல் வேண்டும். அப்போது தான் இரவில் சக்தி பூஜை செய் வதற்கு உரித்தான தகுதியைப் பெறுகின்றோம். பிரதமை திதியில் மாமரத்து வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து, 1008 நாமாவளிகளைச் சொல்லி, சிவ பூஜை செய்தல் வேண்டும். இது மிக முக்கியம். அவ்வாறு செய்யவில்லையெனில் பாதி நவராத்திரி பூஜை செய்த தாகத்தான் பொருள்.

இரண்டாம் நாள் - துவிதியை திதி:-

பலா மரத்தின் வடக்கு வேர் கொண்டு சிவ லிங்கம் செய்து, பகலில் சிவலிங்க பூஜை செய்ய வேண் டும்.துவிதியை திதியன்று இவ்வாறு பூஜை செய்வதால் உடல்சூடு ரகசியத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

மூன்றாம் நாள் - திருதியை திதி:-

வில்வ மரத்து வடக்கு வேர் கொண்டு சிவலிங்கம் செய்து, பகலில் சிவ பூஜை செய்தல் வேண்டும். இவ்வாறு சிவ பூஜை செய்வதால் `தேவர்கள் யார்ப மனிதர்கள் யார்?' என அவர்கள் உருமாறி வந்தாலும் அவர்களைக் கண்டு கொள்ளும் சக்தி கிடைக்கும்.

நான்காம் நாள் - சதுர்த்தி திதி:-

அத்தி மரத்தின் வடக்கு வேர் அல்லது வெள்ளெருக்கு வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து, பகலில் பூஜை செய்தல் வேண்டும். இதனால் கணவனுக்கு ஜாதகத்தில் எத்தகைய கண்டங்கள் இருந்தாலும், எந்தக் காரணத்தாலும், எத்தகைய ஆபத்துக்கள் வந்தாலும் அவனைத் தீண்டாது. இந்த பூஜை மாங்கல்ய பலத்தை அளிக்கும்.

ஐந்தாம் நாள் - பஞ்சமி திதி:-

வேப்ப மரத்தின் வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்வதால் எதிர்காலத்தை அறியும் ஆற்றல் தேடி வரும்.

ஆறாம் நாள் - சஷ்டி திதி:-

வேங்கை மரத்தின் வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை செய்து வந்தால் ஒருவரது நாடியைப் பிடித்துப் பார்க்காமலேயே நோயினை அறியும் ஆற்றல் உண்டாகும்.

ஏழாம் நாள் - சப்தமி திதி:-

பலா மரத்தின் வடக்கு வேர் அல்லது அரச மரத்தின் வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து பூஜை செய்தல் வேண்டும். அறுவை சிகிச்சை செய்யும் முன்னர் இந்த சிவலிங்க பூஜை செய்து விட்டுப் பின்னர் செய்தால், கண்டிப்பாக ஆபரேஷன் வெற்றிகரமாக முடியும்.

எட்டாம் நாள் - அஷ்டமி திதி:-

அரச மரத்தின் வடக்கு வேர் அல்லது ஆல மர வடக்கு வேர் அல்லது குருந்த மர வடக்கு வேர் எடுத்து, சிவலிங்கம் செய்து, பூஜை செய்தல் வேண்டும். இந்த பூஜையில் தன் முன்னால் யார் எந்த ரூபத்தை எடுத்தாலும், சுயரூபத் தத்துவத்தால் தன் கணவனையும் கரையேற்றும் சக்தி கிட்டும்.

தீய வழிகளில் கணவர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களைத் திருத்தும் சக்தியை பெண்கள் பெறுவார்கள். ஆண்களாக இருந்தால் எப்படிப்பட்ட முரட்டு குணம் உள்ள மனைவியையும் திருத்தும் ஆற்றல் கிட்டும்.

ஒன்பதாம் நாள் - நவமி திதி:-

அத்தி மரத்து வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து பூஜை செய்தல் வேண்டும். இதனால் தனம், தான்யம், போகம், பாக்கியங்கள், ஐஸ்வர்யங்கள் அனைத்தும் கிட்டும்.

நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும், கோபித்துக் கொண்டு பல காலத்திற்கு முன் சென்று இருந்தாலும், அவர்களைப் பற்றிய தகவல்கள் வந்து சேரும்.

பத்தாம் நாள் - தசமி திதி:-

வன்னி மரத்து வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து பூஜை செய்தல் வேண்டும். இதனால் சித்திகள் உண்டாகும்.
மேலும் வழிபாடு

No comments:

Post a Comment