Monday, October 20, 2014

செல்வம் தரும் எண்ணெய் குளியல் -----

தீபாவளியன்று கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது ஐதீகம். தலைக்கு எண்ணெய் தேய்ப்பதில் கூட சாஸ்திரங்கள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து நீராடினால் மனவருத்தத்தையும், திங்கட்கிழமை உடலுக்கு புத்துணர்ச்சியையும், செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவையும், புதன்கிழமை செல்வத்தையும், வியாழக்கிழமை உடல் நலத்தையும், வெள்ளிக்கிழமை அதிக செலவையும், சனிக்கிழமை விரும்பியவற்றை அடைதலையும் அளிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு புதன்கிழமை தீபாவளி வருவதால் அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் பட்சத்தில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும். ஞாயிறு எண்ணெயுடன் புஷ்பங்களையும், செவ்வாய் சிறிது மண்ணையும், வெள்ளி கோசலத்தையும் சேர்த்துக்கொண்டு எண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.

மேலும் சஷ்டி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தி, அஷ்டமி, பிரதமை, பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளிலும் உத்தரம், கேட்டை, திருவோணம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களிலும் எண்ணெய் நீராடக்கூடாது என்றும் அவ்விதம் செய்ய நேரிட்டால் சிறிது நெய் கலந்து எண்ணெய் நீராடலாம் என்றும் அப்பயங்க ஸ்நானம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக அறநூல்களில் காலை 8.30 மணிக்கு முன்பும் மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளியன்று மட்டும் அதிகாலை நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவது கட்டாயமாக செய்ய வேண்டுமென்றும் அவ்விதம் செய்யாவிடில் நரகத்தைக் கொடுக்ககூடிய பாவம் சேரும் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

தவிர நரக சதுர்த்தசியன்று அதிகாலையில் சூரியன் சந்திரன் இருவரும் பெரும்பாலும் சுவாதி நட்சத்திர சாரத்தில் சஞ்சரிப்பதால் இது மிகவும் புண்ணிய தினம் என்றும், அந்நாளில் எண்ணெய்த்தேய்த்து நீராடிப் புத்தாடை அணிந்து லட்சுமி நாராயணனைப் பூஜிப்பது சிறப்பான பலனைத்தரும் என்று விஷ்ணு புராணம் தெரிவிக்கிறது.

தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் தண்ணீரில் கங்கா தேவியும் உறைகின்றனர். இதற்கு விஷ்ணு புராணத்தில் ஒரு வரலாறும் உண்டு. நரகாசுரனுடன் பகவான் போரில் இருந்தசமயம் அரக்கர்கள் லட்சுமி தேவியைக் கவர்ந்து செல்ல முயன்றனர். உடனே தேவி பகவான் போர் முடிந்து திரும்பும் வரை எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தில் மறைந்து விட்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

இந்தப் புண்ணிய தினத்தில் தான் பாற்கடலில் தோன்றிய திருமகளை நாராயணன் திருமணம் செய்து கொண்டார். அப்போது தேவர்களுடன் யமதர்மராஜனும் பணிந்து போற்றினார்கள். இதை கண்ட லட்சுமி, யமனிடம் இப்பண்டிகையை முறையாக கடைப் பிடிப்பவர்களது வீட்டில் என் உத்தரவு இன்றி நீ பிரவேசிக்கக்கூடாது என்று உத்தரவிட்டாள்.

லட்சுமி தேவியின் அந்த உத்தரவை யமதர்மராஜனும் ஏற்றுக்கொண்டார். இதனால் லட்சுமி தேவி மகிழ்ந்து, இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்துடன் சோபன அட்சதைகளால் பதினான்கு தர்ப்பணம் செய்து மகிழ்விப்பார்கள் என்று வரம் அளித்தாள். இதுவே தற்போது யமதர்ப்பண தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் பலன் கொடுக்கும். தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை உடல் எல்லாம் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும் இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.

அதிகாலை நீராட வேண்டும் என்பதால் அன்று வெந்நீரில் நீராட வேண்டும். நீரினுள் ஆல் அரசு புரசு அத்தி மாவிலங்கம் பட்டை போட்டு சுடவைத்து அந்த மருத்துவ குணம் கொண்ட நீரில் ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து பூஜை அறையில் தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.






தீபாவளிக்கு தேய்த்து குளிக்க எந்த எண்ணெய் சிறந்தது?


நல்லெண்ணெய் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது. தலையில் மட்டும் அல்ல உடல் முழுவதும் தேய்த்து குளிக்க வேண்டும். காதுகளில் இரண்டு சொட்டு எண்ணெய் விடுவது நல்லது. ரொம்ப முக்கியம் கடைகளில் விற்கப்படும் எண்ணெய் வேண்டாம்.

சுத்தமாக செக்கில் ஆட்டிய எண்ணெய், உபயோகிக்கவும், அவை அனைத்து இடத்திலும் கிடைக்கும். இல்லை என்றால் நீங்களே எள்ளு வாங்கி மில்லில் கொடுத்து அரைத்து வாங்கி கொள்ளலாம். பலர் ஞாயிறு விடுமுறை என்பதால் அன்று தான் குளிக்கின்றனர்.

அது தவறு. "ஞாயிற்றுகிழமை கழுதை கூட எள்ளு காட்டு பக்கம் போகாது'' என்பது பழமொழி. சனி நீராடு என்பதும் பழமொழி. நீங்கள் பிறந்த நட்சத்திரம், திதி, கிழமைகளில், குளிக்க கூடாது. குளித்தால் பலன் கொஞ்சும் குறையும் அவ்வளவுதான்.

5 மணி முதல் 7 மணி வரை எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம். மதியம் 12 மணிக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளித்தால் பலன் இருக்காது. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் வைத்து இருந்து பிறகு குளிக்க வேண்டும். ரொம்ப நேரம் தேய்த்து வைத்திருக்க கூடாது.

எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்ய கூடாதவை. தூங்ககூடாது. தூங்கினால் பலன் இருக்காது. இரவு வரை தூங்க கூடாது. ஏன் என்றால் உங்கள் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறி கொண்டிருக்கும். அப்போது தூங்கினால் உடல் பாதிக்கும்.

ஆனால் தூக்கம் வரும். உடலில் எண்ணெய் தேய்த்து வைத்திருக்கும் போது கண்ணாடி பார்க்க கூடாது. பழங்கள், மோர், தயிர், பால், ஜுஸ், ஐஸ் க்ரீம் போன்ற எந்த குளிர்ச்சி பொருட்களும் உண்ண கூடாது. ஓடி, ஆடி வேலை செய்யவோ, விளையாடவோ கூடாது. முழுக்க முழுக்க ஓய்வாக இருக்க வேண்டும். ஆனால் தூங்க கூடாது




எண்ணெய் குளியலுக்கு சிறந்த தினம்



15 வருடங்களுக்கு முன்பு வரை எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும். இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும்.

ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது. ``எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. இந்த தீபாவளி முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்''. ``நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம்.

இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம்.

பிறந்த குழந்தைக்கு காலையில் எழுந்ததும், அதன் தாய் செய்கிற விஷயம், உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் மெல்ல மறைகிறது. இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், தலையில் எண்ணெய் வைத்துக் கொள்வதை நாகரிகக் குறைவாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள் பிள்ளைகள்.

எண்ணெய் குளியலையும் தவிர்க்கிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும் என்பது பரவலான குற்றச்சாட்டு. சரியான முறையில் எண்ணெயைத் தேய்ப்பதும், பிறகு சரியான முறையில் குளிப்பதும் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கும்.

உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ, ஒப்புக் கொள்ளுமோ அதை தலை, உடல், கை, கால் என முழுக்கத் தடவுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.

சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் நீராடுவது உசிதம் என்கின்றன. காரணம் சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி. எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும்.

விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணெய் குளியலை சனியன்று செய்வது நல்லது. பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை.

செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது








No comments:

Post a Comment