Monday, October 20, 2014

சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.

சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும், படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களா வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.

சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும்.

இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும். எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து சுக்லாம் பரதரம் விஷ்ணும் சஸிவர்ணம் சதுர்புஜம்! ப்ரசந்த வதனம் தீயாயேத் சர்வ விக்நோப சாந்தயே'' என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.

சரஸ்வதி பூஜையின் போது ``துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம'' என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று. பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.

பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம்.

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.




கல்விச்செல்வத்தை அடைய, அறிவும், ஆற்றலும் பெறக் கலைமகளின் அருள் வேண்டும். நமது நாட்டில் சரஸ்வதிக்கு என்று தனிக்கோயில்கள் இல்லை எனவே கலைமகளை நம் வீட்டிலே நாமே பூஜை செய்து வழிபட வேண்டும்.

முதன்முதலாக பூஜையை எந்த மாதத்திலும், எந்த நாளிலும், எந்தக்கிழமையிலும் தொடங்கலாம். ஆனால் அன்று பவுர்ணமியாக மட்டும் இருக்க வேண்டும். கலைமகளுக்குப் பூஜை செய்யும் போது அலை மகளுக்கும் சேர்த்து வழிபாடு செய்ய வேண்டும்.

மலர்களுள் வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை, முல்லை, இருவாட்சி, சம்பங்கி, மருக்கொழுந்து,வெட்டிவேர், மற்றும் வாசனைத் திரவியங்கள், சந்தனம் முதலியவற்றையும் இளநீர்,மாதுளம் பழம், கொய்யா, கரும்பு, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுவத்தி முதலியனவற்றையும் சேகரிக்கவேண்டும்.

நிவேதனப் பொருள்களாகக்கல்கண்டு, பால்பாயசம், வெண்கடலைக் சுண்டல், இனிப்புச் சுவையுள்ள பலகாரங்கள் ஆகியவற்றைக் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜைப் பொருள்களில் ஐந்துமுக விளக்கும் கலசத்திற்காக இரு தட்டுகள், இரு செம்புகள், இரு தேங்காய்கள்,நெல் பச்சஅரிசி ஆகியவையும் புதிதாக வாங்கப்பட்ட பேனா பென்சில், சில நோட்டுப்புத்தகங்கள், சிலேட்டுகள் ஆகியவையும் இடம் பெற வேண்டும்.

வீட்டின் அறையில் நடுப்பகுதியில் கிழக்கு முகமாக பீடம் அமைக்க வேண்டும். அதில் சதுரமாக நெல்லை பரப்ப வேண்டும். அதன் மீது இரு தட்டுகளில் பச்ச அரிசியை பரப்ப வேண்டும். அதில் கலசங்களை வைக்க வேண்டும்.

முதல் கலசத்தின் கீழ்ச்சுற்றில் வெண்தாமரை இதழ்களையும், இரண்டாவது கலசத்தின் கீழ்ச்சுற்றில் செந்தாமரை இதழ்களையும் சுற்றி வைக்க வேண்டும். கலசத்திற்கும் தேங்காய்க்கும் மஞ்சள், குங்குமத்திலகம் இடவேண்டும். அவற்றை மலர்ச்சரங்களால் சூடி அலங்கரித்து வைக்க வேண்டும்.

மஞ்சள் தூளிலோ, பசும் சாணியிலோ பிடித்த விநாயகரை அறுகம்புல் ஆசனத்தில் அமர்த்த வேண்டும். அதற்குத் திலக மிட்டு மலரிட வேண்டும். ஐந்துமுக விளக்கை இரு கலசத்தின் நடுவே வைத்து, திலகமிட்டு மலர்ச்சரம் சுற்றி வைக்க வேண்டும்.

விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றிய பின் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். பின்பு ஸ்தோத்திரங்களைச் சொல்லி கற்பூர தூப தீப ஆராதனை முடித்து விநாயகரை வணங்க வேண்டும். பவுர்ணமி உதயமாகும் போது கலசங்களுக்குக்கற்பூர தீபம் காட்ட வேண்டும்.

அடுத்து கலைமகள் அலைமகள் ஸ்தோத்திரங்களை மனம் உருக எல்லாரும் சேர்ந்து சொல்ல வேண்டும். ஸ்தோத்திரங்கள் சொல்லி முடித்ததும் கற்பூர தூப தீப நிவேதனம் காட்ட வேண்டும். எல்லாரும் சாஷ்டாங்கமாக வீழ்ந்துவணங்க வேண்டும்.

சிறுவர் சிறுமியர்க்குப் பேனா, பென்சில, சிலேட், நோட்டுப்புத்தகம் ஆகியவற்றைத் தானமாகவும், மற்ற பிரசாதப் பொருள்களையும் தர வேண்டும், அதற்குப் பிறகே பிரசாதங்களைப் பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment