Monday, October 20, 2014

அர்ஜுனனுக்கு அருளிய ஸ்ரீதுர்காம்பிகை

மகாபாரதத்தின் உச்சமாய் விளங்குவது 18 நாட்கள் நடந்த மகாபாரத போர் தான். போரில் ஸ்ரீகிருஷ்ணரின் துணையோடும் 7 அசௌணி சேனைகளோடும் பாண்டவர்கள் அணிவகுத்து நின்றார்கள்.

கவுரவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் சேனை உள்பட 11 அசௌணி சேனைகளோடும் பீஷ்மர் துரோணர், கிருபர் போன்ற சிறந்த போர் தளபதிகளுடனும் எதிர் வரிசையில் நின்றார்கள். பாண்டவ சேனை முழுவதும் அர்ஜுனையே நம்பி நின்றது.

`தன்னை விட அதிக சேனை பலத்துடன் எதிரில் நிற்கும் கவுரவ சேனையை எப்படி வெல்வது' என்று அர்ச்சுணன் யோசித்தான். அர்ஜுணனின் நிலையை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா அர்ஜுணனிடம் அவனை கவலைப்படாதிருக்குமாறும் போரில் எதிரிகள் தோற்க எல்லாம் வல்ல ஸ்ரீதுர்கா தேவியை துதிக்கும்படியும் அறிவுறுத்தினார்.

ஸ்ரீகிருஷ்ணனின் உபதேசத்தை சிரமேற்கொண்டு ரதத்திலிருந்து கீழே இறங்கி தன் இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் ஸ்ரீ துர்கா தேவியை துதித்தார் அர்ச்சுணன்.

``நமஸ்தே ஸித்தஸேனாணி ஆர்யே மந்த்ர வாஸினி
குமாரிகாளி காபாலி கபிலே கிருஷ்ண பிங்களே''

என்று தொடங்கி பலவாறாகத் துர்க்கையை துதித்தார் அர்ஜுணன். துதியில் மகிழ்ந்த ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி அர்ஜுணனுக்கு ஆகாயத்தில் காட்சியளித்தாள்.

`அர்ச்சுணா விரைவில் பகைவர்களை வெற்றி கொள்வாய். நர நாராயணர்களின் உதவியைப் பெற்ற உன்னை சத்ருக்கள் மட்டுமல்லாமல் வஜ்ராயுதம் தரித்த இந்திரனே கூட வெல்ல முடியாது' என்று அர்ஜுணனை ஆசிர்வதித்து மறைந்தாள்.

ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியின் அருளைப் பெற்று புத்துணர்வு கொண்ட அர்ஜுணனின் காண்டீபத்தின்று புறப்பட்ட அம்புகள் எதிரிகளை துவம்சம் செய்தன.

போரில் வெற்றி பெறுவதற்காக அர்ச்சுணனால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்ரம், சத்ருக்களை வெல்வதற்காகவும் எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டவும் பாராயணம் செய்ய உகந்தது.

No comments:

Post a Comment