Monday, April 6, 2015

அன்னதானமும், நீர்மோர் தானமும். இதனால், கிடைக்கும் நன்மை பற்றியதே இந்தக் கதை.

பங்குனி உத்திரத்தன்று முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டியது அன்னதானமும், நீர்மோர் தானமும். இதனால், கிடைக்கும்
நன்மை பற்றியதே இந்தக் கதை.
சிவசாமி- சிவகாமி தம்பதியரின் புதல்வன் கந்தன். பணக்காரரான சிவசாமி, தினமும் அன்னதானம் செய்து வந்தார். கணவருக்கு உதவியாக சிவகாமி இருந்தாள். சிறுவனான கந்தனுக்கு பெற்றோர் தினமும் இப்படி தானம் செய்கிறார்களே! இது எதற்காக என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. தந்தையிடம் இதுபற்றி கேட்டான்.
மகனே! ஒரு பங்குனி உத்திரத்தன்று என் தாத்தா இந்த தானத்தை ஆரம்பிக்க அதை உன் தாத்தாவும் கடைபிடித்தார். நானும், அதையே பின்பற்றுகிறேன். முன்னோர் செயலுக்கு காரணம் இருக்கும். ஆனால், நான் எந்த பலனையும் எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை என்பதால், அதை அறிய முயற்சிக்கவில்லை. வேண்டுமானால், நீ முயற்சித்துப் பார்,'' என்றார்.
""அப்பா! நான் காட்டிற்கு போய் தவமிருந்து, அன்னதானத்தின் பலன் பற்றி அறிந்து வருகிறேன். நீங்கள் அனுமதிக்க வேண்டும்,'' என்றான்.
சிவசாமியும் அனுமதி தர கந்தன் காட்டுக்கு புறப்பட்டான். அவனது அம்மா கட்டுச்சோறு கட்டிக் கொடுத்தாள். வழியில், ஒரு துறவி
அவனைச் சந்தித்து, "பசிக்கிறது' என்றார்.
கட்டுச்சோற்றை அவரிடம் கொடுத்து விட்டு கந்தன் நடந்தான்.
காட்டை அடைந்த வேளையில் இருள் சூழ ஆரம்பித்தது. அவனைக் கண்ட ஒரு வேடன், ""தம்பி! காட்டில் இருளில் நடமாடுவது நல்லதல்ல. மிருகங்கள் உன்னைக் கொன்று விட வாய்ப்புள்ளது. நீ எனது வீட்டுக்கு வா. என்னோடு தங்கி விட்டு காலையில் செல்,'' என்றான்.
கந்தனும் உடன் சென்றான். வேடன், தன் மனைவியிடம், ""இருவருக்கும் உணவு கொடு,'' என்றான்.
அவள் ஒரு கொடுமைக்காரி. ""நீயே தண்டச்சோறு. கூட ஒருவனை கூட்டி வந்திருக்கிறாயா?'' என்று திட்டினாள்.
"நீ அவனுக்கு தனியாக ஏதும் கொடுக்க வேண்டாம். எனக்கு தரும் சோற்றை தா. அதை நான் பகிர்ந்து கொள்கிறேன்,'' என்றான்.
அதன்படியே கந்தனுக்கு உணவளித்தான்.
இரவில் அவர்கள் பரணில் ஏறி படுத்தனர். தனக்குரிய இடத்தை சிறுவனுக்கு கொடுத்து விட்டு, வேடன் விழித்திருந்தான். ஒரு கட்டத்தில் கண் அசந்தான். அங்கு வந்த புலி அவனைக் கொன்றது. மறுநாள் வேடனின் மனைவி அந்த அதிர்ச்சியில் இறந்து விட்டாள்.
வருத்தமடைந்த கந்தன், தவம் செய்ய காட்டுக்குள் சென்றான். அப்போது, ஒரு ஆண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தவமுயற்சியை விட்டுவிட்டு, அரண்மனையில் ஒப்படைத்தான். அது அந்த நாட்டு ராஜாவின் குழந்தை. ராஜாவுக்கு வேண்டாத சிலர், அது பிறந்தவுடன் காட்டில் போட்டிருந்தனர். குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் ராஜா கந்தனை பாராட்டினான்.
அப்போது குழந்தை பேசியது.
""நான் நேற்று இரவு இறந்து போன வேடன். நான், இந்த சிறுவனுக்கு உணவளித்ததால், ராஜா வீட்டு குழந்தையாகப் பிறந்தேன். இவனுக்கு உணவளிக்க மறுத்த என் மனைவி, காட்டில் பன்றியாகப் பிறந்திருக்கிறாள். அன்னதானத்தின் பலன் பற்றி அறிய இந்தச் சிறுவன் காட்டுக்கு வந்தான். அவனுக்கு அதை உணர்த்தவே, இறைவன் மூலம் இந்த நாடகம் நடந்தது,'' என்றது.
தானத்தின் பெருமை உணர்ந்த கந்தன், வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் தானத்தைத் தொடர்ந்தனர்.

No comments:

Post a Comment