Wednesday, August 26, 2015

சாதிக்க வைத்த தாமரை!

ஆதிசங்கரரைத் தன் மானசீகக் குருவாக ஏற்றவர் சனந்தன். ஒருநாள் அவர் கங்கைக்கரையில் நின்ற போது, எதிர்க்கரையில் சங்கரர் நிற்பதைக் கண்டார். பக்தியுடன் வணங்கினார். சங்கரர் தன் அருகில் வர சைகை காட்டினார்.
கரை புரண்டோடும் எப்படி ஆற்றைக் கடப்பது என சனந்தன் யோசித்தார். குருவை மனதில் தியானித்தபடி, வெள்ளத்தில் காலை வைத்தார். அவரது காலடியில் ஒரு தாமரை மலர்ந்தது. இப்படி ஒவ்வொரு அடி வைக்கும் போதெல்லாம் ஒரு தாமரை அவரின் பாதத்தை தாங்கியது.
கங்கையை எளிதாக கடந்து சாதனை புரிந்த சனந்தன், குருவின் திருவடியில் விழுந்து வணங்கினார். 
சங்கரரும் அவரை சீடராக ஏற்று தீட்சை அளித்தார். அன்று முதல் சனந்தனுக்கு "பத்மபாதர்' என்ற பெயர் உண்டானது. "தாமரைப் பாதம் கொண்டவர்' என்பது இதன் பொருள். 
குருவருள் இருந்தால் பிறவிக்கடலை எளிதில் கடக்கமுடியும் என்பதை உணர்த்தவே இந்த அற்புதத்தை நிகழ்த்தினார் சங்கரர். சங்கரரின் அத்வைத கருத்தை பரப்பிய சீடர்களில் பத்மபாதர் குறிப்பிடத்தக்கவர். அத்வைதம் என்ற சொல்லுக்கு "இரண்டு அல்ல.. ஒன்றே' என்று பொருள். கடவுளும், இந்த உலகமும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. அதாவது, கடவுளே எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதே தத்துவம்.

No comments:

Post a Comment