Monday, August 31, 2015

சாந்தி செய்வது ஏன்,

சாந்தி செய்வது ஏன்,
ஆகமங்களிலும் புராண தர்ம சாஸ்திரங்களிலும் மனிதனுக்கு உரியனவான 41சடங்குகள் சொல்லப் பட்டிருக்கிறது. இவற்றில் பல சடங்குகள் மனிதன் குழந்தையாக, பாலகனாக இருக்கும் போதிலிருந்து யௌவனப் பருவம் வந்த ஒரு பெண்னை பாணிக்ரஹணம் என்று கைகோர்த்து சேர்த்து வைக்கும் வரை அவருடைய தகப்பனார் செய்யக் கூடியவை. மற்ற ஏனைய சடங்குகள் அவனே முன்னின்று ஏற்று நடத்தக் கூடியவை.
"ஜனனாத்பரம் ப்ரதிவர்ஷே ஜன்ம மாஸே ஜன்மநக்ஷத்ரே ஆயுஷ்ய ஹுவனம் குர்யாத்" என்கிற வாக்கிற்கிணங்க, ஜன்ம நட்சத்திரம் வரும் ஒவ்வொரு வருஷமும் ஆயுள் விருத்திக்காகவும், மற்ற நற்பலன்களைப் பெறவும் ஆயுஷ்ஹோமம் செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் இவைகளை ஒவ்வொரு ஆண்டும் செய்ய இயலாவிடினும் மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம்" என்னும் இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவ கார்ய பலன் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் கண்டிப்பாக அவனது 59, 60, 61 மற்றும் 70 வது வயது துவக்கம், 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 வது ஆண்டு நிறைவு ஆகிய கால கட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளைச் செய்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால், 59 ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு 60, 61 ஆம் ஆண்டு வரை ஆட்படுகிறான். அப்பொழுது ஈசனின் அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி உக்ர ரத சாந்தி என்கிற சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா எனப்படும். 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்னும் ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டு " பீமரத சாந்தி " எனும் சடங்கு செய்தல் வேண்டும்.
78 ஆம் ஆண்டின் துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக அவரை அமைதிப்படுத்தும் பொருட்டு "விஜயரத சாந்தி" எனும் சடங்கு செய்ய வேண்டும். இதைச் செய்தாலே பூரண ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது சாத்திர கருத்து. அதன்பிறகு 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று "சகஸ்ர சந்திர தர்சன" சாந்தி செய்தல். அன்றே சிலர் சதாபிஷேகம் எனும் 108 ருத்ர காலபிஷேகம் செய்து கொள்வது நடைமுறையில் உள்ளது. எனினும் 100 வது ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் அன்று செய்யப்படும் சாந்தியே "சதாபிஷேக கனகாபிஷேகம்" என்று பெயர் பெற்ற சடங்காகும். இது "அஷ்டோத்ர சதருத்ர கலாபிஷேகம்" எனப்படும்.
இவற்றில் ஷஷ்டியப்த பூர்த்தி செய்வதில் ஆகமப்படியும் புராணப்படியும் 5, 9, 12, 13, 29, 33, 65, 125, 320 என்ற கிரமத்தில் தேவதைகளுக்கு கும்பங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் நடத்தப்படுகிறது. பிரதானமாக ம்ருத்யுஞ்ஜய கலசமும் வரிசையாக ப்ரும்மா, விஷ்ணு, உருத்திரன், மார்க்கண்டேயன், திக்பாலகர்கள், சப்சிரஞ்சீவிகள், ஆயுள்தேவதை, வருஷம், அயனம், நட்சத்திரம், கணபதி, நவக்ரஹும், அதிதேவதை, ப்ரத்யதி தேவதை எனும் 13 கலச பூஜைகள் சிறப்பானதாகும். இதில் சிவதீட்சதை எடுத்துக் கொண்டவர்களுக்கும், சிவ பூஜை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ருத்ரர்களுக்காக 11 அல்லது 1 கலசமும் பஞ்சப்ரும்ம கலசங்களாக 5 அல்லது 1 ம், பஞ்சகங்கைக் கலசங்களாக 5 அல்லது 1 ம், ஆன்மார்த்த மூர்த்தி ஸ்தபனமாக 10 கலசமும் ஆக 16 அல்லது 44 கலசங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்வது சிறப்பாகும். அதன்பிறகு தைலதானம், ஆஜ்யதானம், உதகபாத்ரதானம், வஸ்திரதானம், நவதான்யதானம், பூதானம், கோதானம், திலதானம், தீபதானம், ருத்ராட்சம் அல்து மணிதானம் என்னும் தசதானம் செய்து உமா மகேஷ்வர பூஜை என்னும் வயோதிக தம்பதி பாத பூஜை செய்து திருநாண் பூட்டுதல் செய்து ஆரத்தி எடுத்து நிறைவு செய்ய வேண்டும்.
இப்படி விதிக்கப்பட்டுள்ள சாந்திகளை அறிந்து அவற்றைக் கடைப்பிடித்து நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும்.

No comments:

Post a Comment