Wednesday, August 26, 2015

அணுவும் அசையுமா அவனின்றி...!

தேவாசுர யுத்தத்தில், அசுரர்களின் கை அவ்வப்போது ஓங்கினாலும், இறுதி வெற்றி தேவர்களுக்கே கிடைக்கும். ஒருமுறை, தேவர்கள் தங்கள் வெற்றியை கர்வத்துடன் கொண்டாடினர். அவர்களின் கர்வத்தை அடக்க சிவபெருமான் ஒரு உபாயம் செய்தார். 
தேவர்கள் முன் கண்ணைப் பறிக்கும் மின்னல் போல ஜோதி வடிவம் ஒன்று வந்து நின்றது. தேவர்களுக்கு அது என்ன என்று
அவர்களுக்கு புரியவில்லை. ஒரே குழப்பம்.
உடனே தேவர்கள் அக்னிதேவனை அனுப்பி, அதை என்னவென்று அறிந்து வரும்படி கூறினர். அக்னியும் ஒளிப்பிழம்பின் முன் சென்றான். அந்த உருவம் ""நீ யார்? உன்னால் என்னை என்ன செய்யமுடியும்?'' என்று கேட்டது.
""நான் அக்னி தேவன். நான் நினைத்தால் எந்தப்பொருளையும் சுட்டு பொசுக்கி விடுவேன். நீ யார் என சொல்லாவிட்டால் உன்னையும்...,'' என்று முடிப்பதற்குள், அந்த உருவம், ""சரி இதை எரித்துக்காட்டு,'' என ஒரு புல்லை எதிரே போட்டது.
""இந்த சிறு புல் எனக்கு ஒரு பொருட்டா?'' என்ற அக்னி கொழுந்துவிட்டு எரிந்த தன் ஜூவாலையால் அதனை எரிக்க படாதபாடு பட்டான். ஆனால், அந்த துரும்பை எரிக்க முடியவில்லை. தலை குனிந்தபடி திரும்பி விட்டான்.
பிறகு வாயுவை அனுப்பினர். அவனைப் பார்த்து கேட்டது அந்த உருவம். ""நீ யார்?'' என்று.
""நான் வாயுதேவன். இந்தப் பூமியில் உள்ள எந்தப் பொருளையும் தூக்கி எறிந்து விடுவேன்,'' என அகந்தையோடு சொன்னான்.
""அப்படியா! இதை நகர்த்து பார்க்கலாம்,'' என்று ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டது உருவம்.
வாயு உடனே சூறாவளியாய் வீசினான். துரும்பு அசைந்து கூட கொடுக்கவில்லை. திரும்பி விட்டான்.
இதைக் கண்டு பிரமித்த தேவர்கள். தங்கள் தலைவன் இந்திரனை அனுப்பினர். இந்திரன் சென்றான். அப்போது அந்த உருவம் 
மறைந்தது. வானவீதியிலே சுடர்க்கொடி போல் பார்வதி தேவி காட்சி அளித்தாள். இந்திரன் தலை வணங்கினான். அந்த உருவத்தின் ரகசியம் பற்றி கேட்டான்.
""அவரே சிவனாகிய பரம்பொருள். உங்கள் வெற்றிக்குக் காரணமானவர்,'' என்றாள் தேவி.
அந்த வார்த்தை தேவர்களிடம் இருந்த அகந்தையை அழித்தது. தேவர்களுக்கு மட்டுமல்ல! மனிதர்களின் வெற்றிக்கு காரணமும் அவர்களுக்கு திறமை அளிக்கும் ஆண்டவனே!

No comments:

Post a Comment