Wednesday, April 15, 2015

ஸ்ரீ சக்ர விளக்கமும் குரு பாதுகை விளக்கமும்



ஸ்ரீ சக்ர விளக்கமும் குரு பாதுகை விளக்கமும்
=========================================
ஸ்ரீ சக்ரத்தில் உள்ள கோணங்களை விளக்கும் பதிவு.
மற்றும் குரு பாதுகையின் விளக்கமும் இருக்கிறது.இது உடனே புரிவது கஷ்டம். ஆனால் எல்லா சமயங்களின் முடிவும் இங்கே சங்கமம் ஆகும். இதன் ஆறு ஆம்னாயங்களில் அனைத்து மந்திரங்களும் அடங்கும்.
இந்த வித்தை தெரிந்தவர் தனியாக சரபேஸ்வரரையோ , ப்ரத்யங்கிராவையோ இல்லை வராஹியையோ வணங்க வேண்டியதில்லை! இதை அறிய முயல்வதே புண்ணியமான விஷயம். அறிந்து கொள்வது கோடியில் ஒருவர் அல்லது இருவரால் மட்டும் முடியும்.
இதை படியுங்கள். பிராப்தம் இருப்பவர்களுக்கு குரு தரிசனம் கிடைக்கும்.
ஸ்ரீ வித்யாவில் குருதான் எல்லாம். அவரின்றி எதையும் செய்வது இங்கே தவிர்க்க பட்டது.
ஸ்ரீ வித்யை மஹா வித்யை. மனித உடலை தேவதையுடன் இணைக்கும் ஒரே விதயை இது. கிராஃபிக்கல் விளக்கம் சொல்லித்தரும் வித்யை இது.
பகிர்ந்து பதிவு செய்து கொள்வது என்றாவது உபயொகப்படலாம்.
குரு பாதுகா
==========
ஸ்ரீபாதுகா மந்த்ரம் 1. ஹ்ஸ்க்ப்ரேம்
மஹாவைபவத்தோடும் அதிஸூக்ஷ்மத்தோடும் ஆனந்த ரஹஸ்யத்தோடும் கூடிய மஹாவாக்கிய விளக்கங்களெல்லாம் ஸாதகன் உணர்ந்து அந்த உணர்வினாலே ப்ரம்மபோதம் ஏற்பட்டு ஐக்கியமடையவேணும் என்ற ஒரு கருணை திருநோக்கத்தினாலே பெரியோர்கள் ஸாதகன் உயர்வடையவேண்டி மந்திரபூர்வமான அபூர்வ சொற்கூட்டுகளை அமைத்திருக்கிறார்கள். இதிலே அனேகம் இருந்தாலும் ஸாதகன் அடிமனதிலே சிலவற்றின் விளக்கங்களைக் கண்டாலும் இன்னும் காணவேண்டியவைகள் எத்தனையோ.
அவைகளை ராஜச்யாமளையாயும் ராஜயோகினியாயும் உள்ள அந்த பராசக்தியின் அனுக்ரஹத்தால் சொற்களை ஆராய்கிறான் அன்றோ. அவனுக்களிக்கப்பட்ட குருபாதுகா மந்திரம் என்ற பெயரிலே மஹாவாக்கிய உபதேசத்தின் ஒரு சிலவற்றின் விளக்கங்களை இங்கு காணுகிறோம்.
எங்கும் நிறைந்த பரம்பொருள் ஸாதகனுக்குள்ளும் இருக்கிறது. அதனை உணர்த்தியது யார்? சக்திரூபமான ஸத்குருதான். இந்த உணர்வினாலே ஸாதகன் ஸ்ருஷ்டிக்கப் பட்டுள்ள இந்தப்ரபஞ்சத்தைக் காணுகிறான். இதிலே தான் அனுபவிக்கும் ஆனந்தங்கள் அத்தனையும் அக்ஞானங்கள் தான் என்பதை உணருகிறான். இவைகள் அனர்த்தங்கள். இந்த அனர்த்தங்களைக் கொடுக்கக்கூடிய மூலஅஞ்ஞானம் ரோகமாக ஆகி இவனை கொடுமைப்படுத்துகிறது. கொடுமைக்கு ஆளான இவன் குவலயத்திலே கூனிக்குறுகி-பின்னிப்பிணைந்து இருக்கிறான். இந்த ரோகம் இவனுக்கு நீங்கவேணும். அல்லது இவன் இதிலிருந்து விடுவிக்கப்படவேணும். இதற்கு இவ்வுடலிலேயே கொதிக்கும் சித் அக்னியில் இந்த அக்ஞானங்களையெல்லாம் போட்டு பொசுக்கி ரோகத்தை நிவர்த்தித்துக் கொள்ளவேணும். இதற்கு இவன் ஸத்குரு ரூபமான ரஹஸ்யயோகினிகளின் அனுக்ரஹ த்தினாலே ரோகங்களை நீக்கிக்கொண்டு நிலைபெறுகிறான்.
இப்படிப்பட்ட மஹா அனுபவத்தை இவனுக்கு உணர்த்தவேண்டுமே எனற கருணை திருநோக்கத்தினால் மஹாவாக்கியப் பொருளான ஹ்ஸ்க்ப்ரேம் என்ற சொற்கூட்டமைப்பு ஸாதகனுக்கு அளிக்ப்பட்டுள்ளது. உண்ணும் உணவிலே ருசியறியும் திறம் கொண்ட ஸாதகன் சொல்லும் சொல்லிலும் பொருளறிய வேண்டாமோ? என்பதாலே புரிந்து இவன் புனிதமடைய அந்த புவனத்தாய் கருணை செய்கிறாள்.
ஹ ह என்பது ஈசுவரனைக் குறிக்கும். இந்த ஈƒவரன்
ஸ स என்ற சத்தி உந்துதலால் இந்த ஸாதகனை உண்டாக்குகின்றான். உண்டாகிய ஸாதகன்
க क காரப்க்ருதியான ப்ரம்மாவினுடைய சக்திகள் என்பவர்களான வாக்தேவதைகளான வைகரீவிமர்சத்தினாலே-தான்-அனாதிவாஸனா ரூபமான, அக்ஞானமயமான விறகினாலே ஜ்வலிக்கப்படும் சித் அக்னி மண்டலம் தன்னுடைய இடுப்பு ஸ்தானமான
ப प என்ற அக்ஷர ஸ்தானத்திலே நிலைப்பெற்றிருப்பதை உணர்ந்துகொள்ளுகிறான். ரேபாகாரமான அக்னியிலே தன்னுடைய மூல அக்ஞானங்களை ஆஹூதிகளாக அளித்து சுத்தாத்மாவாக-சுயம்பிரகாச வடிவினனாக ஆகிறான்.
இந்த உணர்வையும் ஆனந்தத்தையும் இவன் இந்த ப்ரபஞ்சத்திலே நின்று கண்டு கொண்டிருப்பதனாலே-ஆனந்தம் என்ற உணர்வு இவனது அனுபவத்தில் நிறைந்திருப்பதினாலே அக்ஷரங்கள் முழுமையில்லாமல் பிந்துவோடு கூடிமட்டும் நிற்கிறது என்பதை ஸத்குரு உணர்த்துகிறான் .
ஸ்ரீபாதுகா மந்த்ரம் 2. ஹஸக்ஷமலவரயூம் -ஸஹக்ஷமலவரயீம்
தன்னிலே தன்மயமாகும் தனியொரு தத்துவம் தரணியிலே விரிந்து நிற்கிறதென்றால் அதன் காரணம் ப்ரம்ம வித்யையே. இதன் சம்பிரதாயத்திலே ஊறி வந்த பெரியோர்கள் ஸாதகன் சிறப்பதற்காக-ஒரு விரிந்த பொருளுடைய -ஞானபரமான-அஞ்ஞானம் அழியும்படியான ஆத்மஸ்வரூபம் புரியும்படியான- சொற்கூட்டமைப்புக்களை மேலும் குருபாதுகா மந்திரத்திலே அழகாக வகுத்துத் தந்திருக்கிறா“õகள். அதிலே நிலை பெற்றிருக்கும்ஆத்மன் தனக்கு அபேதமாக அந்த ஞான நிலையினை தெரிந்துகொள்ள ஸத்குரு க்ருபை தான் இங்கு வழிக்காட்டி. அவருடைய திருமந்த்ரம்தான் இவனுக்கு ஸுகுர்தமான ஒன்று . 
ஸ்தூலமான தமது கால்களுக்கு பௌதீகமாக முள்ளாலும், கல்லாலும் துன்பம் ஏற்படாதவாறு பாதுகைகள் எவ்வாறு அமைந்திருக்கின்றனவோ அது போல ஸாதகன் செல்லும் ஆனந்த வழியிலே ஏற்படும் துன்பங்களை துடைத்து ஒதுக்கி ஒளி காட்டுமாப்போலே ஸ்ரீ குருபாதுகைகள் அமைந்திருக்கின்றன. இவைகளில் ஒன்று வெள்ளைநிறம், மற்றொன்று இரத்தநிறம். இவைகள் இரண்டும்தான் ஸாதகனுக்கு தூயவழிகாட்டி, ஞானவழிகாட்டி. ஞான ஸ்வருபம் தான் என்பதை உணர்த்தியும் பரமான்மா வெளுத்த நிறமுடையவன், ஸ்படிக நிறமுடையவன் என்பதைக் காட்டியும் அதோடு ரத்த சரணம் அபேதப்படும் போது அதுவும் இதுவாகி அக்ஞானம் அழிந்து , ஸ்படிகத்திலும் ரக்த ஒளியேறி திகழும் நிலை பாதுகாவிமர்சம் என்பர்.
பரமாத்மா சக்திகூடலால் சப்தபிரபஞ்சமானான். அவனே ஆகாய தத்துவமாய் இருப்பதனாலே விரிந்த பொருளாய் இருப்பதனாலே பஞ்சபூதத்திலே ஆகாயபூதம் அன்வயப்பட்டு மீதி நான்காக பரிணமிக்கிறான். சப்தப் பிரபஞ்சம் பஞ்சபூதமாகப் பரிணமித்ததைக் கண்டவன் ஜீவன். இந்த ஜீவன் நிவர்த்தி மார்க்கத்திலே பிரவேசிக்கவேண்டியவன். இவன் இங்கே ஞான ஸ்வரூபத்தை தரிசிக்கவேண்டியவன். இந்த அருட்தெளிவு ஸாதகனுக்கு ஏற்படுமாப்போல குருபாதுகா மந்த்ரத்திலே சில அக்ஷரக்கூட்டு அமைந்திருப்பதை ஸாதகன் உணருகிறான். அதுவே ஹஸக்ஷமலவரயூம் என்ற அக்ஷரக்கூட்டு. ஞானம் ஏற்பட்ட உடனே உத்தரக்ஷணம் அக்ஞானம் அழிந்து விடுகிறது. நிவர்த்தி மார்க்கத்திலே சென்ற இவனுக்கு அக்ஞானம் ஒழிந்து ப்ரம்மஞானம், அஹம்ப்ரம்மாஸ்மி என்ற மஹாவாக்யங்களெல்லாம் மனதிலே தோன்றும். அது எவ்வாறு எனில் சித்சக்தியான பரப்ரம்மம் அவித்யாவாஸனையின் அழிவினாலே தெரியப் பட்டமையால் ஜீவனுக்கு ஆத்மானந்தம் ஏற்படுகிறது. அந்த ஆனந்தத்திற்கு இங்கு மற்றொரு காரணமும் புரிகிறது. வாஸனாமய போக்கியம் நீங்கிய இந்த பிரபஞ்சத்திலே அதாவது பஞ்சபூதத்திலே ஆகாயம் நீங்கிய நிலையில் என்பது இங்கு குறிப்பாகும். எதனால் அக்ஞானம் நீங்கியதோ அது இங்கே பராபோத காமகலையாக பரிணமித்து நிற்கிறது. இந்த காமகலா மஹாவாக்ய விமர்சமே ஸஹக்ஷமலவரயீம் என்ற அக்ஷரக்கூட்டாக அமைந்துள்ளதாய் அறியலாகிறது. அக்ஷரத்தைப் பிரித்து அழகாக விளக்கினால் ஸாதகன் இன்னும் அழகாக புரிந்து கொள்வானோ என்ற நிலையிலே நிற்போம். ஹ என்ற ஈச்வரன் ஸ என்ற சக்தியோடு கூடி க்ஷ என்ற சப்த ப்ரபஞ்சத்தை உண்டாக்குகிறான். ம என்ற ஜீவனானவன் ல வ ர ய என்ற ஆகாச பிந்து நீங்கலான பிரபஞ்சத்திலே ஊம் என்ற நிவர்த்தி மார்க்கத்திலே ஈடுபடுகிறான்.
பிறகு ஸ என்ற சித்சக்தியானது ஹ என்ற பரமனை ஐக்கியப்படுத்தியது. க்ஷ என்ற ஸாதகனது அவித்யா நாசத்தினாலே ல வ ர ய என்ற வாஸனாபோக்கியம் நீங்கிய பிரபஞ்சம் அத்தனையும் ஈம் என்று ஒட்டு மொத்தமாக பராகாமகலையாக ஸாதகன் கண்டு போதம் கொள்கிறான். இத்தனை தத்துவங்களும் இந்த தத்துவங்கள் புரிவதற்கு காரணமாகயிருந்த மந்திரங்கள் அத்தனையும் ஸத்குருநாதனால் உபதேசிக்கப்பட்டு அதாவது ஒலி வடிவிலே கலந்து நின்று காரியங்களை புரிவிக்கிறது. ஆகையினாலே இத்தனை காரியங்களும் ஒலிவடிவிலே உலவி வருவதால் முடிவில் பராகாமகலையும் ஒலிவடிவிலே அன்வயப்பட்டு நிற்பதாலே ய என்ற வாயு பீஜ காரணத்துடன் ஈம் என்ற பராகாமகலை ஒன்றி இணைந்து விடுகிறது. ஐந்தும் வெவ்வேறாக தெரிந்த பூதங்கள், கலா
தத்துவங்கள் ஒன்றிய நிலையிலே வேறுவேறாக தோன்றிய அவைகளெல்லாம் ஒன்றாகவே இணைந்து விடுகிறது. வெவ்வேறாக தெரிவதில்லை என்பதை ஸாதகன் உணருகிறான்.
நவநாத பீஜம்
ஒலி வடிவிலே உலவிவரும் அத்தனை சப்தங்களுக்கும் மூலகாரணமாக பைந்தவ சக்தியோடு கூடி மூலாதாரத்திலே சுற்றி சுழன்றுவருகிற பரா என்ற வாக்கு நாதத்தின் கர்ப்பமாக இருக்கிறது. ஒரு ஒலியினை ஒரு மனிதன் காதால் கேட்கிறான் என்றால் அதற்கு பஞ்சபூதத்திலே ஆகாயம் முக்கிய காரணமாய் அமைந்திருக்கின்றது. ஆகவே இந்த நாதத்திற்கும் ஆகாய பூதத்திற்கும் ஒரு ஒருமைப்பாடு உண்டு. மஹத்துக்கள் இந்த நாதமயமாயிருக்கிற - ஆகாசத்தை எல்லாம் நமக்கு ஆகாசமயமான ஸத்குருநாதர்களாக க்காட்டி குருவை வணங்குவதனால் ஆகாய தத்துவத்தை புரிவித்தும், ஆகாயத்தை புரிந்துகொள்வதனால் நாத ஸ்வரூபம் தெரியும்படியாயும் அனுக்கிரஹிக்கிறார்கள்.
இதனாலே குரு பாதுகா மந்த்ரத்திலே உள்ள ஹஸக்ஷமலவரயஊம் என்ற ஒன்பது அக்ஷரங்களும் ஒன்பது விதமான நாதமய ஆகாச ஸ்வருபமான ஸத்குருநாதர்களைக் காட்டிக் கொடுக்கிறது.
உன்மனி,சமனி, வியாபினி, சக்தி, த்வனி, த்வனிமாத்ரா, இந்து, சிதி, வ்யஸ்த்தா என்கிற ஒன்பதும் நவநாதம் என்பர் பெரியோர். ஆகவே, இந்த நவநாத ஒலிகளுக்கு மேற்சொன்ன மந்த்ராக்ஷரங்களை பீஜமாக அமைத்து, எந்த நாமம் கர்ப்பமாக அமைந்திருக்கிறதோ அந்த நாத ஸ்வரூபமாகவே குருநாதர்களை ஆக்கி சாதகனை பூஜைக்கு அமைத்திருக்கிறார்கள். இதனால் இந்த அக்ஷரங்கள் ஸாதகனை நிவர்த்தி மார்க்கத்தில் இழுத்துச் செல்லும் வழியிலேயே நவநாத ஸ்வரூபமான ஸத்குருநாதனையும் காட்டி கொடுத்துவிடுகிறது. இதுவே இந்த அக்ஷரங்களின் ரகஸ்யார்த்தமாகும்.
ஸ்ரீபாதுகா மந்த்ரம் 3. ஹ்ஸௌம்ஃ -.ஸ்ஹௌஃம் (ப்ராஸாதபரா - பராப்ராஸாதா)
ஸாதகன் வேதங்களை அப்யஸிக்கவேண்டிய காலம் நீண்டு நிற்கிறது, அதற்கு அங்கமாய் உள்ள தத்துவங்களை அறியத்தக்க ஆசானை கண்டு நிற்கிறான். அந்நிலையில் உண்ட உணவு பலவகைப்பட்டதாயினும் அதனாலே ஜீரணிக்கப்பட்டதென்பது ஒன்றேபோல எத்தனைக் காலம் எத்தனை வேதம் இவன் அப்யஸித்தாலும் எத்தனை தத்துவங்களை எத்தனை ஆசான் இவனுக்கு கற்பித்தாலும் இவனடையும் சத்து ஒன்றே. இந்த ஒரே சத்தினை அடைய இவன் எந்தநிலையில் அமையவேணும்-என்ற வழியினை எவர் உணர்த்துகிறாரோ அவரே ஸத்குரு.
ஸாதகன் முதலில் காரணத்தை வேண்டி நிற்கிறான். அதற்கு காரியத்திலே ஈடுபடவேண்டும்- என்ற இந்த நினைவு அதாவது சஞ்சல விருத்தியிலே ஸ்தாபிக்கப்பட்ட ஸாதகன் அந்நிலை நீங்கிய- விகல்பமும் விருத்தியும் அற்ற நிலையில் இவன் ஸ்தாபிக்கப்படவேண்டுமானால்- இந்த உணர்வுகளையெல்லாம் மூலாதார திருத்தலத்திலே ஸ்தாபிக்கப்பட்டு இருக்கிறாளே ஒரு தாய்-பரா-அவளுடைய பரிபூரண ஸ்வருப ரஹஸ்யம் தெரியவேண்டுமானால் இவைகள் அத்தனையும் ஸாதகனுக்கு நினைத்தமாத்திரத்தில் கிடைக்கவேணுமானால் வழி எங்கே? காட்டிவிட்ட ஸத்குரு அதை உனக்கு புகட்டிவிடவேண்டாமோ? நினைத்தமாத்திரத்தில் சிவமாகலாம், (ஸ்மரண மாத்ரேண சிவோஹம்), அந்த மஹாபிரசாதம் உனக்குக் கிடைக்கும், அடைந்து இன்புறலாம் என்றார். குணமோடு கொடுத்து குவலயத்திலே உன்னை ஆட்படுத்திவைத்தார். ஸூக்ஷ்மமாகவும், ரஹஸ்யமாயும் ஸாதகன் அடைந்த அத்தனை தத்துவங்களும்-அத்தனை பிரசாதங்களும் தத்துவங்கள் ஒழிந்த நிலையில் தானாக நின்று-புவனங்கள் பதினான்கிலும் விரிந்து ஜோதி அத்தனையிலும் கலந்து பிந்துவிலே ஒடுங்கிவிடுகிறது.
எதனை எங்கு விளக்க நின்றாலும் ஸ்வரூப விளக்கம் அங்கு தேவைப்படுவதால் இந்த பராப்ரஸாதம் அடைவதற்கு ஒரு ஸ்வரூபம் தேவைப்படுவதால் அதனையும் ஒரு உருவகப்படுத்தி உனக்களித்திருக்கிறார். இதனை தந்தரம் கூறுகிறது - அனந்த சந்த்ர புவனாமிந்து பிந்து யுகாத்மனா. ஆகவே ஸாதகன் எதனை உணர அங்கு நிற்கிறானோ அதனை உணர்த்த ஸத்குரு காத்துக் கொண்டிருக்கிறார். உணரவேணும் என்ற ஸங்கல்பம் உருவாகி உணர்ந்தபின் அது விகல்பம் ஆகாமல் ஸவிகல்பமாகி கரைந்துவிட காமாக்ஷி கருணை செய்யட்டும்.
ஸ்ரீ மஹா குருபாதுகா 
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை ஏற்றமிகு சக்கரத்தில் அமைத்து பூஜிப்பது என்பது உபாஸனா முறை. இந்த ப்ரம்ம வித்யா உபாஸனைக்கு துணை நின்று தத்துவங்களை தோன்றச் செய்வது சக்ரராஜமான ஸ்ரீ சக்கரம். இந்த ஸ்ரீ சக்கர பூஜைக்கு ஸாதகன் தயாராக ஆக முதலில் அவன் தன் குருவை அண்டி பரம்பரா தர்மத்தை அவலம்பித்து குருத்ரயத்தை முதலில் வணங்கவேண்டியவனாக இருக்கிறான். குருபாதுகா மந்த்ரம் அருளப்படும்போது தன்னையும் தன்னுடைய ப்ரகாசத்தையும்-தானும் ப்ரகாசமும் ஒன்றாக ஆகும் விதத்தையும் குரு காட்டிக்கொடுக்கும் வண்ணம் அதன் தத்துவம் விரிகிறது . கரசரணாதி அவயங்களுடன் கூடிய குரு ஸ்தூலமாக சிஷ்யனுக்கெதிரில் இருந்தாலும்கூட அவர் இவனது வழிகாட்டிதான். ஆனால் அவருடைய நல்லுபதேசத்தை இவன் மனனம், நிதித்யாஸனம் என்றபடி சாதனையும் பயிற்சியும் செய்து ஆத்ம ஜோதியிலே இரண்டற கலக்க வேணும். பின்பு அங்கு சொல்லிக்கொடுத்தவரும் இல்லை. கேட்டுக்கொண்டவரும் இல்லை. ஸுலபமாகவும் (அந்தர் முகஸமாராத்யா) அதுவே ஆராதிக்கப்படவேண்டிய முறையாகவும் வெளிநாட்டம் கொண்ட பூஜையால் அருளை அடைவது துர்லபம் என்பதும் (பஹிர்முக ஸுதுர்லபா) அவளது ஸஹஸ்ரநாம விளக்கத்தால் உணரலாம். இவ்வாறு ஸுலபமாக இருக்கும் அவள் ஸாதகனுக்கு சாƒவதமான ஆனந்தத்தை, நிலையான நலங்கள் யாவற்றையும் அருளுகிறாள். அதுதானே ஸாதகன் செய்யவேண்டிய கடமையாகவும் விதியாகவும் இருக்கிறது. அவளே எல்லாவற்றிற்கும் தானே முடிவுப் பொருளாக யாவற்றையும் தன்னுள் சேர்த்துக்கொள்ளும் கதி யாக இருக்கிறாள். அதனால்தான் அவளை சோபனா ஸுலபாய கதிஃ என்று அழைக்கிறோம். அப்படியாக உள்ள அவள் அமைந்திருக்கக்கூடிய அதி ஸூக்ஷ்மமான இடம் மூலாதாரம் என்பதை ஸாதகன் கண்டிருக்கிறான். அவள் அங்கு தன் அங்கோபாங்க ப்ரத்யங்க தேவதைகளுடன் அழகுற வீற்றிருக்கிறாள். ஆத்ம யோக பயிற்சியினாலே ஸத்குரு க்ருபையினாலே அவள் எழுந்து ப்ரம்மக்ரந்தியை பேதித்துக்கொண்டு இதயமான அனாஹத பத்மத்தில் அமருகிறாள். அங்கு வீற்றிருந்து உலகை நடத்தும் செயல்களையும் மேல் வைபவங்கள் நடைபெறுவதற்கான யோஜனைகளையும் மந்திரி ஸ்தானத்தில் இருந்து ஸ்புரிக்கச் செய்வதினாலே அவள் அங்கு மந்த்ரிணி என்ற ராஜச்யாமளையாக அழைக்கப்படுகிறாள்.
அந்த செயல்கள் யோஜனையிலேயே நின்றுவிடாமல் செயல்படவும் இன்ன இன்ன செயல்கள் இன்ன இன்னபடி செய்யப்படவேணும் என்கிற ஆக்ஞையையும் செய்யும் முகமாக அவளே எழுந்துவந்து விஷ்ணுக்ரந்தியை பிளந்துகொண்டு ஆக்ஞா சக்கரத்திலே நின்று மஹாவாராஹியாக கட்டளையிட்டு செயலும் ஆற்றுகிறாள். மலங்களையெல்லாம் அறுக்கிறாள். பிரபஞ்சவாழ்மனிதன் மும்மல ஸ்வரூபமானவனாக இருக்கிறான். ஆணவம், கன்மம், மாயை என்கிற இந்த ஆதிமலங்களை இவன் ஒழித்துக்கொண்டால் தானே உருப்பெறமுடியும், ஆகவே ஸ்தூல பிரபஞ்சத்திலே மனிதனுடைய மலங்களை அகற்றும் சிருஷ்டிக்கப்பட்ட பிராணியின் முகமாகவே இவள் அமைந்து ஸூக்ஷ்ம மலங்களான இந்த ஆணவாதி மலங்களை அடியோடு அழித்துவிடுகிறாள். ஸேனாதிபதியாக இருந்து இந்த அசுரக் கூட்டத்தை நாசம் செய்கிறாள். ஆகவே இங்கு இவள் தண்டினி என்ற பெயரோடு நிலை பெறுகிறாள். ஸாதகன் அமிர்த நிலையை அடைய வழியையும் மந்திரியாக இருந்து சொல்லி, வழியிலே நின்றிருக்கும் இடர்பாடுகளையெல்லாம் ஸேனாதிபதியாக இருந்து அழித்து, இவனுக்கு இந்த அமிர்த நிலையை அருளவேண்டும். அது அமிர்த ஸாகர மத்தியில் இருக்கும் த்வாசாந்தம் என்கிற மாத்ருகா கமல பீடமாகும். இதிலே ஸாதகனுக்கு வழிகாட்டிய வள்ளல்கள் ஸ்வரூபமானவளாயும் மஹா வைபவத்தோடுகூட பரதேவதை ப்ரகாசிக்கிறாள். இதுவே மஹாபீடம் என்கிற மஹாகுருபாதுகாபீடம் ஆகும். ஸ்வகுரு, பரமகுரு, பரமேஷ்டிகுரு என்ற மூன்று வழிக்காட்டிகளின் ஸ்வரூபமாகவும், இச்சை, கிரியை, ஞானம் என்கிற செயல் வடிவமாகவும், மந்த்ரிணி, தண்டினி, தலைவி என்கிற பதவி வடிவமாகவுமுடைய இந்த மஹாகுருபாதுகா ஸ்மரணம் நிச்சயமாக ஸாதகனை அமிர்தமயமாக்கிவிடும் என்பதில் சம்சயமே இல்லை.
இது அதிகாலை செய்யும் ரச்மிமாலை என்ற காலை வழிபாட்டில் உள்ளதன் ரஹஸ்யார்த்தமாம்.
ஸ்ரீ சக்ரம்
===========
ஸ்ரீப்ரபஞ்சாக்ருதி சக்ரஸ்தமூலபூ தாயதே நமஃ
14.மந்திரபூஜை
நாமம், ரூபம் இவற்றோடு கூடிய இந்தப்ரபஞ்சமும்,அதில் அமைந்திருக்கிற மனமும், சச்சிதானந்தமாகிய சித்சக்தியினுடைய அபிவியஞ்சகங்கள் என்ற பாவனைதான் இந்த 44 மந்திர பூஜையாம். இதன் ஒவ்வொன்றின் தத்வார்த்தம் காணுவோம்.
1. அம்ருதாம் போநிதி - அம்ருதக்கடல். அபாரமான நாசரஹிதமான எங்கும் நிறைந்துள்ள இன்பச்சக்தி. அது நகரத்தின் வெளியிலும் உள்ளது.
2. ரத்தின த்வீபம்- ரத்தினத்தீவு. சித் என்ற கடலில் தோன்றும் ஜடம் என்ற கற்பனைப் பொருள். இதுவே தீவு எனப்பட்டது. (தேஹோ நவரத்ன த்வீபஃ)
3. நாநாவ்ருக்ஷ மஹோத்யானம் - பலவகை மரங்களோடு கூடிய உத்தியானம். இது லிங்க சரீரமே. பலவகையான கர்ம வாஸனைகளுடன் கூடியது . சரீர ஜீவனைக் குறிக்கும்.
4. கல்ப வாடிகை - கற்பக மரங்களுள்ள சோலை. இது மனமே. நினைத்ததைக் கொடுக்கும் கற்பகமரம் போன்று இந்த மனமும் ஒன்றை நினைத்தால் அது எப்போதாவது எந்த ஜன்மத்திலாவது நிறைவேறாமல் போகாது. ஏனெனில் மனத்தின் எண்ண அலைகள் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது. (கல்பகோத்யானம்- பாவனோபநிஷத்)
5. ஸந்தான வாடிகை, 6. ஹரிசந்தன வாடிகை, 7. மந்தார வாடிகை,8. பாரிஜாத வாடிகை, 9. கதம்ப வாடிகை - பஞ்சபூதங்களின் திரண்ட உருவமே அந்தக்கரணம். மேற்கண்ட ஐந்தும்- ஸத்வ ஸமஷ்டியான மனம், புத்தி, சித்தம் , அஹங்காரம், உள்ளம் என்ற ஐந்தைக் குறிக்கிறது.
மேற்கண்ட இந்த வாடிகா பஞ்சகம் 5
அந்தக்கரணபஞ்சகம் 5
சப்தாதி விஷயப்பகுதிகள் 5 
ச்ரோத்ராதி ஞானேந்த்ரிய பகுதி 5
பஞ்சபூதம் 5
இந்த 25 தத்வங்களும் உலோகக்கோட்டை, இரத்தினக்கோட்டை என்று 25 பிரகாரங்களாக உள்ளன என்று லலிதோபாக்யானம் கூறுகிறது. (பஞ்விம்சதி தத்வாத்ம பஞ்சவிம்சதிவப்ரகே)
10 . புஷ்பராக ரத்னப்ரகாரம்
11. பத்மராக ரத்னப்ராகாரம்
12. கோமேதகரத்னப்ராகாரம் 
13. வஜ்ரரத்னப்ராகாரம் 
14. வைடூர்யரத்னப்ராகாரம் 
15. இந்த்ரநீலரத்னப்ராகாரம் 
16 . முக்தாரத்னப்ராகாரம்
17. மரகதரத்னப்ராகாரம்
18. வித்ருமரத்னப்ராகாரம்
இந்த ஒன்பதும் நவதாதுக்களை குறிக்கும். அதாவது மாமிசம், ஓஜஸ், மேதை,அஸ்தி,த்வக்,சுக்லம்,ரோமம்,சுக்லம், உதிரம், என்பன.
19. மாணிக்ய மண்டபம் - ஓஜஸின் கூட்டம். இதயம்.
20. ஸஹஸ்ரஸ்தம்பமண்டபம் - ஸஹஸ்ராரபத்மம். உச்சிக்கமலம்.
21. அம்ருதவாபிகை - த்வாதசாந்தம் 12 தளகமலம்
22. ஆனந்தவாபிகை - லலாடமத்தி(நெற்றி)
23. விமர்சவாபிகை - ப்ரூமத்தி
மேற்கண்ட 21,22,23 மூன்றும் வாபிகள். வாபி என்றால் ஜலம் நிறைந்த இடம். (ஓம் ஆபோ ஜ்யோதீரஸோ அம்ருதம் ப்ரஹ்ம........ ச்ருதி) எனவே இவை மூன்றும் நிதித்யாஸனம், ஸமாதி, ஸஹஜஸமாதி என்பனவற்றையே குறிக்கும்.
24. பாலாதபோத்காரம் - 25. சந்த்ரிகோத்காரம் 
இவை இரண்டும் ஸந்தோஷத்தைக்கொடுக்கும் விமர்சரூபமான வ்ருத்தியாம். (இதுவே ஸூர்யத்வாரம், சந்த்ரத்வாரம் என்பர்)
26. மஹாச்ருங்காரபரிகை -- உள்நாக்குத்தானம். சிருங்கார சிகரத்தின் நுனி. இந்த இந்த்ரயோனியே மனோலயத்தானமாம். பரிகை என்றால் அகழி. இந்த அகழைத்தாண்டினால் தான் அமனஸ்க நிலை ஸித்திக்கும்.
27. மஹாபத்மாடவீ - இதயம் அல்லது ஸஹஸ்ராரம்.
28. சிந்தாமணிக்ருஹராஜம் - சுத்தஸத்வப்ரதானமான அந்தக்கரணம்.
(இனி வருபவை இதன் வ்ருத்திவிசேஷங்களே.)
29. பூர்வாம்னாய பூர்வ த்வாரம், 
30. தக்ஷிணாம்னாய தக்ஷிணத்வாரம், 
31. பச்சிமாம்னாய பச்சிமத்வாரம், 
32. உத்தாரம்னாய உத்தரத்வாரம் - இவைகள் நான்கு வேதங்களையும் அதன்ஸாரமான மஹாவாக்யங்களையுமே குறிக்கும்
33. ரத்னப்ரதீபவலயம் - விவேக ரூபமான விக்ஞான வ்ருத்தி.
34. மணிமய மஹாஸிம்ஹாஸனம் - குருநாதர் போதித்த மந்த்ரத்தின் அனுஸந்தான வ்ருத்தி.
35. ப்ரஹ்ம மயைக மஞ்சபாதம், 
36. விஷ்ணு மயைக மஞ்சபாதம், 
37. ருத்ர மயைக மஞ்சபாதம், 
38. ஈƒவர மயைக மஞ்சபாதம் 
மூலாதாரம் முதல்அனாஹதம் வரை ஸ்ருஷ்டி,ஸ்திதி, லயதிரோதானங்களின் சக்தி.
39. ஸதாசிவ மயைகமஞ்சபலகம் - விசுத்தியில் அனுக்ரஹசக்தி.
40.ஹம்ஸதூளிகா தல்பம் - ஆக்ஞையில் பிரளயம் (அல்லது) ஸுஷுப்தி
41. ஹம்ஸதூளிகாமஹோபதானம்- அவித்யை - அக்ஞானம் 
42. கௌஸும்பாஸ்தரணம் -ஸமஷ்டி அஹங்காரம்
43.மஹாவிதானகம் -அவ்யக்தம் - மஹத்தத்வம்
44.மஹாமாயாயவனிகா-மூலாக்ஞானம்-யோகமாயை.

1 comment:

  1. எங்கும் நிறைந்த பரம்பொருள் ஸாதகனுக்குள்ளும் இருக்கிறது. அதனை உணர்த்தியது யார்? சக்திரூபமான ஸத்குருதான். இந்த உணர்வினாலே ஸாதகன் ஸ்ருஷ்டிக்கப் பட்டுள்ள இந்தப்ரபஞ்சத்தைக் காணுகிறான். இதிலே தான் அனுபவிக்கும் ஆனந்தங்கள் அத்தனையும் அக்ஞானங்கள் தான் என்பதை உணருகிறான். இவைகள் அனர்த்தங்கள். இந்த அனர்த்தங்களைக் கொடுக்கக்கூடிய மூலஅஞ்ஞானம் ரோகமாக ஆகி இவனை கொடுமைப்படுத்துகிறது. கொடுமைக்கு ஆளான இவன் குவலயத்திலே கூனிக்குறுகி-பின்னிப்பிணைந்து இருக்கிறான். இந்த ரோகம் இவனுக்கு நீங்கவேணும். ------இந்த பிரபஞ்சத்தை சிவசக்திஐக்கிய ரூபமாகவும் ஆனந்தமயமாகவும் ஸ்ரீவித்யையின் சாரம்.

    ReplyDelete