Monday, April 6, 2015

உண்மையான பக்திமான்கள் தெய்வத்திடம் எதையும் கேட்பதில்லை

அடபோங்க! நான் சொன்னா ஒரு பய கேட்க மாட்டேங்கறான்'' என்று பலபேர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், சிலர் சொன்னதை தெய்வமே கேட்டிருக்கிறது என்றால் என்னவென்பது! பத்து வயதிலேயே கவி பாடத் தொடங்கினார் ஒருவர். கோதாவரி ஆற்றங்கரையில் அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து ராமர், சீதையை நேரில் தரிசனம் செய்தவர். ராமரின் உத்தரவுப்படி ஒருநாள்......பாகவதத்தை எழுதத்
தொடங்கினார். அப்படி எழுதும் போது கற்பனை ஓட வில்லை. தடைப்பட்டு நின்றதால் ராமரை தியானித்தார். அப்படியே தூங்கிப் போனார். விழித்தபோது, பாடல்கள் முழுவதுமாக எழுதப்பட்டிருந்தது.
""ஸ்ரீராமரே எழுதியிருக்கிறாரே! அவரைத் தரிசிக்காமல் தூங்கி விட்டேனே...'' எனஅழுதார். இந்த விபரம் அறியாதவர்களோ அவர் தான்
பாகவதம் எழுதியதாகக் கருதி "மகாகவி' என அழைத்தனர். அரசருக்கும் தகவல் சென்றது.
அரசர், ""அந்த மகாகவியை அழைத்து வா. அவர் எழுதிய பாகவதத்தை என்னிடம் சமர்ப்பிக்கச் சொல்!'' என்று தகவல் அனுப்பினார்.
மகாகவியோ, ""கடவுளால் எழுதப்பட்டதை அரசரிடம் சமர்ப்பிக்க முடியாது'' என மறுத்தார்.
அரசரிடம் சமர்ப்பித்தால், பெரும் பொருள் கிடைக்குமே என்ற மனநிலையால் வருந்திய மகாகவியின் மனைவி, தன் சகோதரரான கவி
சர்வ பவும ஸ்ரீநாதருக்கு தகவல் அனுப்பினாள். சகல சித்துகளிலும் கை தேர்ந்த அவர், சகோதரி வீட்டுக்கு புறப்பட்டார். அதற்கு முன், சீடர்களிடம் சகோதரி வீட்டுக்கு ஏராளமான பொருட்களை வண்டியில் அனுப்பியிருந்தார்.
மகாகவி,""எனக்கு வேண்டியதை சரஸ்வதி கொடுத்தருள்வாள்'' என்று சொல்லி அந்தப் பொருட்களையும் ஏற்க மறுத்தார். ஸ்ரீநாதர் வந்த நேரம், மகாகவி தன் மகனுடன் வயலுக்குச் சென்றிருந்தார். ஸ்ரீநாதர் தன் ஆற்றலைக் காட்டும் நோக்கத்தில் வயலுக்கே பல்லக்கில் புறப்பட்டார். வயலை நெருங்கியதும், ""சீடர்களே! பல்லக்கை விட்டுவிடுங்கள். அது தானே இனி செல்லும்!'' என்றார் ஸ்ரீநாதர். அப்படியே
பல்லக்கு தானே காற்றில் மிதந்தபடி நகர்ந்தது.
மகாகவியின் மகனோ, "" அப்பா! மாமாவின் பல்லக்கு காற்றிலேயே மிதந்து வருது பாருங்க!'' என்றான். மகாகவி அவனிடம்,"" நீ உழும் இந்த கலப்பையை விட்டுவிடு! மாடுகளையும் அவிழ்த்து விடு!'' என்றார். அவ்வாறே செய்ய..... கலப்பை தானாக நகர்ந்து வயலை உழத் தொடங்கியது. அதைக் கண்ட ஸ்ரீநாதர் தலை குனிந்து, ""என் சித்து வேலையை காண்பிக்க நினைத்தேன். ஆனால், பக்தியின் ஆற்றலால்
என்னையும் மிஞ்சி விட்டீர்கள்,'' என்றார்.
அனைவருமாக வீட்டுக்குச் சென்றனர். அங்கு மகாகவியின் மனைவி, ""எங்க அண்ணன் அனுப்பின பொருளை திருப்பி அனுப்பிச்சிட்டீங்க. இப்ப இவ்வளவு பேருக்கும் எப்படி சாப்பாடு போடறது?'' என்று கண்களை கசக்கினாள்.
மகாகவி சரஸ்வதி தேவியைத் தியானித்துப் பாடினார். அவர் பாடப்பாட பலவித உணவுகள் வரிசையாக வந்தன. மகாகவி ஊருக்கே விருந்து படைத்தார். அதைக் கண்டு மலைத்துப் போன மைத்துனர் ஸ்ரீநாதர் ஆச்சரியப்பட்டார். ""வாணியின் அருள் பெற்ற உங்களை உபசரிக்க, அந்த கலைவாணியே எனக்கு பொருட்களை அளித்தாள்,'' என்றார் அடக்கமுடன் மகாகவி. ""பெரிய மகான் நீங்கள். பக்தியில் முதிர்ந்த உங்களுக்கு ஆலோசனை சொல்லி நீங்கள் எழுதிய பாகவதத்தை அரசருக்குச் சமர்ப்பிக்கச் சொல்லும் எண்ணத்துடன் வந்த என்னை மன்னியுங்கள்!'' என்று சொல்லி புறப்பட்டார்.
அந்த மகாகவியின் பெயர் போதனா. அவர் எழுதிய தெலுங்கு பாகவதம் இன்றும் ஆந்திராவில் உபன்யாசம் செய்யப்படுகிறது.
உண்மையான பக்திமான்கள் தெய்வத்திடம் எதையும் கேட்பதில்லை. ஏனென்றால், அவர்களின் தேவைகளை தெய்வமே பூர்த்தி செய்து விடும்.

No comments:

Post a Comment