Monday, April 6, 2015

உண்மையான பக்தி கொண்ட உனக்கு எந்த வேஷமும் தேவையில்லை

பாரதியார், ஒருசமயம் காசியில் வசித்த தன் அத்தை வீட்டில் தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு வயது 18. கிராப்புத்தலை, கோட், ஷூ என்று மேலை நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றினார். இதைக் கண்ட அவரது மாமா கிருஷ்ண சிவன், பாரதியாரைத் தன்னோடு சேர்ந்து சாப்பிடக் கூட அனுமதி மறுத்து விட்டார்.
ஒரு மார்கழி திருவாதிரை நாளில் நடராஜருக்கு அபிஷேகம், தாண்டவ தீபாராதனை நடந்து கொண்டு இருந்தது. பூஜையின் நிறைவில் திருவெம்பாவைப் பாட வேண்டிய ஓதுவார் வரவில்லை. அதனால், கிருஷ்ணசிவனும் மற்ற பக்தர்களும் பரபரத்தனர். அங்கிருந்த
ஒருவருக்கும் திருவெம்பாவை பாடத்தெரியவில்லை.
அத்தை பாரதியை அழைத்து, கிராப்புத்தலை தெரியாமல் தலைப்பாகை கட்டி நெற்றியில் திருநீறு பூசிவிட்டாள்.
""திருவெம்பாவை பாடுடா,'' என்று மருமகனிடம் சொன்னாள்.தெளிவான உச்சரிப்புடன் பாரதியார் சிறப்பாக பாடினார். இதைக் கண்ட கிருஷ்ண சிவன், ""அப்பா! இத்தனை சின்ன வயதில் எத்தனை ஞானம் உனக்கு! குடுமியும், பூணூலும் எங்களுக்குத் தான் தேவை!
உண்மையான பக்தி கொண்ட உனக்கு எந்த வேஷமும் தேவையில்லை,'' என்று சொல்லி அணைத்துக் கொண்டார்.

No comments:

Post a Comment