Wednesday, August 26, 2015

தெய்வத்தை பெயர்சொல்லி அழைக்கக் காரணம் என்ன ?

தெய்வத்தை பெயர்சொல்லி அழைக்கக் காரணம் என்ன ?
நம்மைவிட வயதில் மூத்தவர்களை, உயர்ந்த நிலையில் இருக்கும் மேலானவர்களை நாம் பேர் சொல்லி அழைத்தால் நம்மை என்ன நினைப்பார்கள்? நம் பண்பாட்டையும் படிப்பையும் யாராவது பாராட்டுவார்களா? இவ்வளவு ஏன்? என் அம்மாவையோ அப்பாவையோ அவர்கள் பேர் சொல்லி நான் கூப்பிட்டால் என்னைத் தவறாக நினைப்பீர்களா? இல்லையா? கண்டிப்பாக நினைப்பீர்கள்.
ஆனால் சர்வ லோகத்துக்கும் மாதாவாக விளங்கும் பராசக்தியை அவளுடைய ஆயிரம் பேர் சொல்லி நாம் அழைப்பதும் அவள் அதில் மகிழ்ச்சி அடைவதும் ஆச்சர்யமாக இல்லையா? பெற்ற தாயையே பெயர் சொல்லி அழைப்பது பண்பாடு இல்லை என்கிற போது சகல உயிர்களின் தாயாரைப் பெயர் சொல்லி அழைப்பது மட்டும் எப்படி சரியாக இருக்கமுடியும்?
நடந்த ஒரு சம்பவம் சொல்லுகிறேன். ஒரு கோவில் திருவிழா. பெருங்கூட்டம். ஆறு வயதுப் பையன் ஒருவன் அந்தத் திருவிழாக் கூட்டத்தில் காணாமல்போய் விட்டான். காவல்துறையினர் ஒலி பெருக்கி மூலம் இதை அறிவித்துவிட்டு அந்த ஆறு வயதுப் பையனை மைக் முன் நிறுத்தி “உன் அம்மாவைக் கூப்பிடு... அழாதே” என்று உற்சாகப்படுத்தினர். அந்தப் பையன் சத்தமாக “சரோஜா.. சரோஜா.. நான் இங்க இருக்கேன் சரோஜா! இங்க வா” என்று அலறினான். சரோஜா என்று அவன் கூப்பிட்டதும் கூட்டத்தில் பலர் திகைத்துப் போனோம். ஆனால் ஐந்தே நிமிடத்தில் அவன் தாய் அலறி அடித்துக் கொண்டுவந்து மகனை மீட்டுக் கொண்டாள்.
தாயோடு கூட வந்த அவள் பெரியம்மா “என்னடி! பிள்ளை வளர்த்திருக்கே? சரோஜா சரோஜான்னு இவன் என்னமோ உனக்குப் பெயர் வைச்ச மாதிரி கூப்பிடறான். பட்டுன்னு அவன் வாயில இரண்டு போடு” என்றாள். பயல் சூடாக “உளறாதே பாட்டி! நான் அம்மா அம்மான்னுதான் முதல்ல எல்லாம் அழுதேன். நிறையப் பெண்கள் திருப்பித் திரும்பிப் பார்த்தா. அம்மான்னா எல்லா அம்மாவும் தான் திரும்பிப் பார்ப்பான்னு தோன்றியது, சரோஜா சரோஜான்னு அம்மா பெயரைச் சொல்லிக் கத்தினேன். அதனால்தான் சட்டுன்னு அம்மா வந்தா” என்றான்.
ஒருகணம் எனக்குள் ஒரு பூ பூத்தது. சர்வலோக ஜனனி ஆகிய அம்பிகையின் கவனத்தைச் சட்டென்று பிள்ளை ஈர்க்க சவுகர்யமான வழி சகஸ்ர நாமத்தை, அதாவது பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதுதான் என்று எனக்குப் புரியத் தொடங்கியது. அதனால் தான் லலிதா சகஸ்ரநாமம் உருவானதோ என்னவோ யார் கண்டார்கள்.
நாமத்தை ஒரு முறை சொன்னால் போதாதா? அதென்ன ஆயிரம் முறை அவள் நாமம் சொல்வது என்று கூட ஓர் ஐயம் தோன்றலாம். அதிக பட்சம் என்பதை ஆயிரம் என்று சொல்வது நம் பழக்கம். மேடையில் பேசும்போது “இதை ஆயிரம் கோவில்ல வேண்டும் என்றாலும் சத்தியம் செய்யத் தயார்” என்று ஒரு வசனம் சிலர் பேச்சில் வரும். எனவே ஆயிரம் என்பது தான் நம் சிந்தனையில் அதிகபட்ச எண்ணிக்கை என்று பொருளாகிறது.
அதுசரி. ஒரே ஒரு நாமத்தைச் சொன்னால் அம்பிகை அருள் செய்ய மாட்டாளா? அவள் என்ன கல் நெஞ்சுக்காரியா என்ன? எதற்கு ஆயிரம் நாமம் சொல்லவேண்டும்? விடை தரவா? வெகு சுலபம். ஆயிரம் முறை சொன்னால்தான் ஒரு தடவையாவது நம் மனம் நிஜமாகவே அதில் ஒன்றுகிறது. இல்லையென்றால் ஒரே முறையில் நமக்கு அந்த ஆழமான தொடர்பு, லயிப்பு, வந்துவிடுவதில்லை. அதனால் ஆயிரம் நாமத்தைச் சொல்லும்போது ஏதாவது ஒன்றில் ஆன்மாவும் நாமாவும் ஐக்கியமாகிவிடும் என்றே நினைக்கிறேன்.
ஆயிரம், கோடி என்கிற அளவில் அணுமின் நிலையத்தில் எத்தனை யூனிட் மின்சக்தி உற்பத்தியானாலும் நம் வீட்டில் உள்ள பல்பு எரிய வேண்டும் என்றால் அந்த மின்சக்திக்கும் இந்த பல்புக்கும் இடையில் ஏதோ ஒரு சின்ன தொடர்பு (திusமீ சிணீக்ஷீக்ஷீவீமீக்ஷீ) வேண்டி இருக்கிறது. அந்த இணைப்புதான் பகவன் நாமா. கோடி கோடி யூனிட்டாக வெளிப்படும் பராசக்திக்கும் நம் ஜீவசக்திக்கும் இடையே உள்ள சின்ன தொடர்பு அவள் நாமங்கள்.
ஆனால் பராசக்தியின் நாமங்களை நாள்தோறும் பாராயணம் செய்கிற பலர், ஏதோ பெண்கள் கல்லூரியில் வருகைப் பேரேட்டில் பெயர் கூப்பிடுகிற பேராசிரியர் மாதிரி லொட லொட என்று பட்டியலை ஒப்புவிக்கும் போது என்னால் சந்தோஷப் படமுடியவில்லை. காரணம் ஒவ்வொரு நாமத்திலும் ஜீவசக்தியும் பராசக்தியும் பின்னிப் பிணையும் அற்பத அனுபவம் நடந்தால் தான் அனுபூதி சாத்தியம். அதனால்தான் அபிராமி அந்தாதி அருளிய அபிராமபட்டர் தம் பாடலில் “கண்ணியது உன்புகழ். கற்பது உன் நாமம். கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பதாம் புயத்தில்” என்று பாடினார். கடகடவென்று படிப்பது உன் நாமம் என்று அவர் சொல்லவில்லை. கற்பது.. கற்பது.. ஆழமாகத் தோண்டுவது கல்லுவது.. கற்பது.. ஒவ்வொரு நாமத்தையும் துருவித்துருவி இணைத்து உட்புகுந்தால் ஜீவசக்தியும் சிவசக்தியும் ஐக்கியமாக முடியும். இல்லை என்றால் கோடி முறை லலிதா சகஸ்ரநாமம் சொன்ன டேப்ரிகார்டரும் சி.டி பிளேயரும் மோட்சம் போயிருக்குமே! அவையெல்லாம் ரிப்பேர் ஆகி குப்பைத்தொட்டிக்குப் போனதுதான் மிச்சம். எப்படி சில குழந்தைகள் தங்களுக்குப் பிரியமான தின்பண்டத்தைப் பார்த்ததும் கண்கள் விரிய இதழ்கள் மலர வாயமுது வழிந்தோட சிரித்தபடி ரசித்தபடி உண்டு அனுபவிக்கிறதோ அப்படி ஓர் உண்மை பக்தன் ஸ்ரீலலிதையின் சகஸ்ர நாமத்தில் ஒவ்வொரு நாமத்தையும் அனுபவிக்கிறான்.
”சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பராசக்தியாய் விளங்கும்
அருட் சக்தியாகிய அன்னை பல்வேறு நாமங்களில்,
காசியிலிருந்து கன்னியாகுமரி வரை நமக்கு
அருள்பாலித்துக் கொண்டிருகிறாள்
அன்னை அஞ்சொல் மொழியாள், அருந்தவப் பெண்பிள்ளை,
செஞ்சொல் மடமொழி, சீருடைச் சேயிழை,
தஞ்சமென்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு,
இன்சொல் அளிக்கும் இறவி யென்றாரே.
அற்புதத்தினும் அதியற்புதமாக, ஹ்ரீங் கார வடிவத்தோடுங் கூடிய
காந்த சக்தியாய் எல்லாவற்றிலும் ஊடுருவி உயிர்ப்பாய் நிற்பது
ஆதி சக்தியாம் சக்தி தத்துவம்.
எல்லா உயிர்களுக்கும் ஓங்கார பிரணவம் எப்படி அமைந்திருக்கின்றதோ,எல்லா அசைவிற்கும் எல்லாத் துடிப்பிற்கும்,எல்லா இயக்கங்களுக்கும் உறைவிடமாக, ஹ்ரீங்கார பிரணவம் அமைந்திருக்கிறதென எல்லா வேதாந்த,சித்தாந்த அருள் நிலைகளும், மகான்களும் முனிவர்களும்,மகரிஷிகளும் கூறியுள்ளனர்
ஓயாது அருள் பாலிக்கும் மகா சக்தி கலியுகத்தில் கண்கண்ட
தெய்வமாக விளங்கிறாள்.
.
அட்சரங்கள்,ஆதி ஒலி எழுத்துக்கள் ஐம்பத்தொன்று.
எனவே அம்பாளுக்கு ஐம்பத்தொரு பீடங்களை உண்டாக்கினார்கள் இதில் மச்சபுராணம் குறிப்பிடும் சித்தவனம் எனும் சக்திபீடமே மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆகும் .
வந்தாளே ஆதிசக்தி பூமியில்
பங்காரு என்னும் பிள்ளை மேனியில்
மகனவன் வடிவினிலே.....
மாதா இறங்கிவந்தாள் .
ஓம்சக்தி ஆதிபராசக்தி !

1 comment:

  1. இதில் மச்சபுராணம் குறிப்பிடும் சித்தவனம் எனும் சக்திபீடமே மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆகும் .

    WHERE IN MACCHAA PURANAM THIS COMES? I NEED THE AUTHOR NAME OF THE BOOK AND IF POSSIBLE PAGE NUMBER ALSO. WE ARE RESEARCHING ON IT PLEASE

    ReplyDelete