Monday, August 24, 2015

நம்ம கஷ்டம் நம்மோடு!

சிருங்கேரி மடத்தில் தங்கியிருந்த ஆதிசங்கரரை சந்திக்க, விஜயநகர அரசர் வந்தார். அன்று சங்கரருக்கு குளிர் காய்ச்சல். அவரைச் சந்திக்க இயலாது என சீடர்கள் கூறினர். இருப்பினும், போராடி அனுமதி பெற்று விட்டார் அரசர். சீடர்கள் ஒரு பலகையைக் கொண்டு வந்து போட்டு, அரசரை அமரச் சொன்னார்கள். சற்று நேரத்தில் இன்னொரு பலகை வந்தது. அதைக் கீழே வைத்ததும் கடகடவென ஆடியது. அரசருக்கு ஆச்சரியம்! இந்த நேரத்தில் சங்கரர் வந்தார். அவரைப் பார்த்தால், காய்ச்சல் வந்தவர் போலவே தெரியவில்லை. அரசருக்கு ஆச்சரியம். அவருக்கு காய்ச்சல் என சீடர்கள் ஏன் தன்னிடம் சொல்ல வேண்டுமென்று! சங்கரர் அரசனுக்கு ஆசி வழங்கினார்.அரசர் சங்கரரிடம்,"" சுவாமி! தங்கள் அருகிலுள்ள பலகை ஏன் ஆடிக் கொண்டிருக்கிறது? '' என்றார். ""அதற்கு குளிர் காய்ச்சல்'' என்ற சங்கரரின் முகத்தை அரசர் ஏறிட்டு பார்க்க, ""என் காய்ச்சலை அந்த பலகைக்கு மாற்றியுள்ளேன். உன்னிடம் பேசி விட்டு மீண்டும் எடுத்துக் கொள்வேன்,'' என்றார்.சுவாமி! அதை அதனிடமே விட்டு விடக் கூடாதா? தாங்கள் ஏன் அவஸ்தைப்பட வேண்டும்,'' என்றார் அரசர். ""மன்னா! அவரவர் கஷ்டத்தை அவரவரே அனுபவிக்க வேண்டும். அதிலிருந்து விலகியோட நினைக்கக்கூடாது,'' என்றார்.ஒரு ஜடப்பொருளுக்கு கூட துன்பம் விளைவிக்கக்கூடாது என நினைத்த ஆதிசங்கரரின் கருணையை எண்ணி கண்ணீர் மல்க அரசர் விடைபெற்றார். அவர் சென்றதும், பலகை ஆட்டத்தை நிறுத்தியது. சங்கரர் நடுங்க ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment