Wednesday, August 26, 2015

அழகு சிகப்புத் தோலிலும், பளீரிடும் முகத்திலும் இல்லை.

வால்மீகிமுனிவர் ராமாயணத்தைப் படைத்துக் கொண்டிருந்தார். அந்தக் காவியத்தின் பாத்திரங்கள் வாழ்ந்த காலத்திலேயே அதை எழுதும் பேறு அவருக்குக் கிடைத்தது. 
ராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உள்ளன. கதையின் போக்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஐந்தாவது காண்டம். அதை எழுதி முடித்துவிட்டு. அதற்கு என்ன பெயர் வைப்பது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தார். 
அந்த காண்டத்தில் மிக முக்கியமான வேலையைச் செய்யும் பாத்திரம் அனுமன். 
கடலைத் தாண்டி இலங்கை சென்று, சீதையை அசோகவனத்தில் சந்தித்து, அவளுக்கு நம்பிக்கை கொடுத்து, இலங்கைக்குத் தீ வைத்துவிட்டு, பின் ராமனிடம் ஓடி வந்து "கண்டேன் சீதையை' என்று சொல்லிக் கதையில் திருப்பத்தை ஏற்படுத்தியவன் அனுமன். ஆகவே, ஐந்தாவது காண்டத்திற்கு "அனுமத் காண்டம்'' என்று பெயர் சூட்ட முடிவு செய்தார். 
அனுமனை மனதால் தியானித்து அந்தப் பெயரை எழுத முற்பட்டார். அடுத்த கணமே அனுமன் அவர் முன் தோன்றினான்.
""முனிபுங்கவரே! இது ராமபிரானைப் பற்றிய காவியம். ராமனின் ஆணையால்தான் அன்னை ஜானகியைத் தேடிப் போனேன். அவன் அருளால்தான் கடலைத் தாண்டினேன். இலங்கையைக் கொளுத்தினேன். இதில் என் பங்கு என்று ஒன்றும் இல்லை. ஆகையால், இந்த காண்டத்திற்கு என் பெயர் வைக்க ஒரு நாளும் ஒத்துக் கொள்ள மாட்டேன்.''
வால்மீகி எவ்வளவோ வாதாடிப் பார்த்தார். சாதனை செய்பவர்கள் எல்லோருமே இறைவனின் அருளால்தான் செய்கிறார்கள். என்றாலும், நாம் அவர்களைக் கொண்டாடி, அவர்களின் பெயர்களைக் கதைகளுக்கும் காவியங்களுக்கும் சூட்டுகிறோமே என்று சொல்லிப் பார்த்தார். அஞ்சனை செல்வன் ஏற்றுக்கொள்ளவில்லை. தன் பெயரை வைக்கக்கூடாது என்று ஒற்றைக்காலில் நின்றான் . 
""வேறு பெயர் சூட்டிய பிறகுதான், இந்த இடத்தைவிட்டுப் போவேன்,'' என்றும் உறுதியாகச் சொல்லிவிட்டான்.
கண்களை மூடி யோசித்தார் முனிவர். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
""சரியப்பா. உன் பெயர் வேண்டாம். கதையின் இந்தப் பகுதி மிகவும் அழகாக இருக்கிறது. அதனால் இதற்கு சுந்தரகாண்டம். (சுந்தரம் என்றால் அழகு) என்று பெயர் சூட்டுகிறேன்.'' அனுமனுக்கு மகிழ்ச்சி. முனிவரை வணங்கிவிட்டுத் தன் அன்னையைக் காணப் புறப்பட்டான். 
அனுமனின் தாயான அஞ்சனை தன் மகனைப் பார்த்ததும், மகிழ்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கினாள்.
""சுந்தரா! என் செல்வமே வா!'' என்று அழைத்து அணைத்துக் கொண்டாள்.
அனுமன் திடுக்கிட்டான். "இது என்ன புதுப் பெயராக இருக்கிறது' என்று துணுக்குற்றான். அன்னையிடம் விளக்கம் கேட்டான்.
""ஆமாம் குழந்தாய்! உன் பெயர்தான் சுந்தரன்... நீ மிகவும் அழகாக இருப்பதால் நானும், உன் தந்தையும் உனக்கு முதலில் வைத்த பெயர் சுந்தரன்.''
அப்போதுதான் அனுமனுக்கு வால்மீகி முனிவர் செய்த சூழ்ச்சி புரிந்தது. மனிதர் எப்படியோ தன் பெயரைச் சூட்டிவிட்டாரே என்று நினைத்தான்.
அதை விடுங்கள்... இதில் பொதிந்திருக்கும் பாடத்தைப் பாருங்கள்...
அனுமனை அழகு என்று அவனுடைய அன்னை சொல்கிறாள். எந்த அன்னைக்கும் தன் குழந்தை அழகுதான். அனுமன் அழகு என்று 
காவியம் படைத்த வால்மீகி சொல்கிறார். அனுமன் குரங்கினத்தைச் சேர்ந்தவன். இன்றுகூட அழகில்லாத ஒருவரைக் கேலி செய்யும் போது, அவன் குரங்கைப் போல் இருக்கிறான் என்றுதான் சொல்கிறார்கள். என்றாலும் அனுமன் அழகன்... எப்படி? அவனுடைய மனம், அவனுடைய பக்தி, அவனுடைய சொல்வன்மை, அவனுடைய செயல்திறமை எல்லாம் சேர்ந்து அவனை அழகனாக்கிவிட்டது. 
ராவணன் அதிரூப சுந்தரன் என்று ராமாயணமே சொல்கிறது. என்றாலும், நம்மால் அந்த அரக்கனை அழகு என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்தவர் மனைவியைக் கவர நினைப்பவனுக்கு எவ்வளவு அழகு இருந்து என்ன பயன்...!
கைகேயி பேரழகி தான்... என்றாலும் அவள் செய்ததை வைத்துப் பார்த்தால் அவளை அழகியாக ஏற்றுக் கொள்ள நம் மனம் மறுக்கிறது.
இன்று எல்லோரும் புற அழகைப் பெறவும் அதைப் பேணவும் கடினமாக உழைக்கிறார்கள். சிவப்பு கிரீமுக்கும், அழகு நிலையங்களுக்கும் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்கிறார்கள். புறத்தோற்றம் ஓரளவுக்கு முக்கியம்தான். ஆனால், அனுமனுக்கு இருந்ததைப் போன்ற உள்ளழகு அதைவிட ஆயிரம் மடங்கு முக்கியம்.
உங்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது... என்னைப் பொறுத்த மட்டில் அழகுப் போட்டி நடந்து அதில் நடிகர் சல்மான்கானும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் கலந்து கொண்டால் நான் கண்ணை மூடிக் கொண்டு முதல் பரிசைக் கலாமிடம் தந்துவிடுவேன். 
சல்மான்கான் சிகப்பாக நல்ல உடற்கட்டுடன் இருக்கலாம். ஆனால், கலாம் இந்த நாட்டிற்குச் செய்த தொண்டை நாம் வாழும் வரை நினைத்து மகிழலாமே...! 
ஒரு பக்கம் உலக அழகி ஐஸ்வர்யா ராய். மறு பக்கம் நம் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலைத் தொட்டு வணங்கினாரே.. மதுரை சின்னப்பிள்ளை என்ற பெண்மணி... இவர்களில் சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு, இந்தச் சமுதாயத்திற்கு உழைக்கும் சின்னப்பிள்ளைதான் என் கண்களுக்கு அழகாகத் தெரிவார். 
பளபளவென்று இருக்கும் நடிகரைவிட நமக்காக நாட்டின் எல்லையில் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் வீரனே அழகு. 
சில வருடங்கள் மனித வளத்துறைப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவருக்குப் பெண் உதவியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.
""மிகவும் அழகான பெண்தான் வேண்டும்'' என்று அந்த நிறுவனத்தில் சொல்லிவிட்டார்கள்.
நாங்களும் சுயம்வரம் வைக்காத குறையாகத் தேடி மிக அழகான ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தோம். அந்தப் பெண் என் அறைக்குள் நுழைந்தபோது மொத்த அலுவலகமும் அவள் அழகைப் பார்த்து வாயைப் பிளந்தது. எப்படியும் இந்த அழகு தேவதைக்குத்தான் வேலை கிடைக்கப் போகிறது என்று நினைத்து, மேம்போக்காகச் சில கேள்விகள் கேட்டேன். அந்த அழகி பேசத் தொடங்கியபோதுதான் அவள் எவ்வளவு அசிங்கமானவள் என்று தெரிந்து கொண்டேன். அவளிடம் எந்தத் திறமையும் இல்லை. அவளால் கோர்வையாகப் பேசக்கூட முடியவில்லை. நொடிக்கு ஒரு முறை கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பேச்சிலும் போக்கிலும் அசாத்தியத் திமிர். 
ஒரு வேளை இந்தப் பெண் வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று இன்னொரு பெண்ணையும் தேர்ந்தெடுத்து வைத்திருந்தோம். அவளைப் பார்த்துப் பேசினேன். அவளை அப்படி ஒன்றும் பேரழகி என்று சொல்ல முடியாது. பளிச் என்று இருந்தாள். அழகாகப் பேசினாள். பணிவாக இருந்தாள். அவளிடம் பல திறமைகள் இருந்தன. குறிப்பாகத் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் மேல் அவளுக்கு இருந்த ஆளுமை பிரமிப்பூட்டுவதாக இருந்தது. 
இந்த இரண்டு பெண்களையும் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தோம். அதன் தலைவரே இவர்கள் இருவரையும் பார்த்துப் பேசினார். இரண்டாவது பெண்ணிற்கே வேலை கிடைத்தது. 
பார்த்தீர்களா...! அழகு சிகப்புத் தோலிலும், பளீரிடும் முகத்திலும் இல்லை. இனிமையான பேச்சிலும், பணிவான நடத்தையிலும், உண்மையான புன்னகையிலும் தான் இருக்கிறது. இந்த அழகு இருந்தால்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வெற்றியும் பெற முடியும். 

No comments:

Post a Comment