Wednesday, August 26, 2015

தாமதமா... வேண்டவே வேண்டாம்!

காலதாமதம் என்பது இப்போது சாதாரணமாகி விட்டது. 
"தாமதமா வந்ததைப் போயி பெரிசா பேசுறீங்களே' என்று கூட சிலர் கோபிப்பதுண்டு. கால தாமதத்தின் விபரீதத்தைச் சொல்லும் கதை இது. 
தேவலோக சபைக்கு வந்த தேவேந்திரன் சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டான். எல்லா தேவர்களும் அவனுக்கு முன்பாக வந்து காத்திருந்தார்கள். காமதேனு மட்டும் நீண்டநேரம் கழித்தே சபைக்கு வந்தது. இந்திரனுக்கு கடும் கோபம்... ""காமதேனுவே! காலம் கடந்து வந்த நீ பூலோகத்தில் காட்டுப்பசுவாக பிறப்பாய்,'' என்று சபித்தான். 
காமதேனு இந்திராணியிடம் சென்று அழுதது. இந்திராணி காமதேனுவிடம், " கவலைப்படாதே! பூலோகத்தில் வகுளாரண்ய க்ஷேத்திரம் சென்று சிவபெருமானை வழிபடு. சாப விமோசனம் உண்டாகும்,'' என்று வழிகாட்டினாள். 
கடவுள் ஒரு கதவை மூடினால், மற்றொரு கதவைத் திறந்து விட்டாரே என்று காமதேனுவுக்கு ஆறுதல்...! 
அது பூவுலகில் கபில முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தது. முனிவரின் ஆணைப்படி, தினமும் காது மடலில் கங்கை நீரை ஏந்திச் சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டது. சாப விமோசனம் கிடைக்கும் காலம் நெருங்கியது. ஒருநாள்..... 
வழிபாட்டிற்கு செல்லும் வழியில், அந்தப் பசுவை சிவன் வேங்கைப்புலியாக மாறி வழி மறித்தார். பயம் சிறிதும் அற்ற பசு, ""புலியே! என் அன்றாடக் கடமையான சிவவழிபாட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். திரும்பி வரும் போது, என்னை நீ உணவாக்கிக் கொள்!'' என்றது. புலியும் சம்மதித்தது. சொன்ன வாக்கு தவறாமல் பசு, சிறிது நேரத்தில் திரும்பி வர புலி அங்கு தென்படவில்லை. சத்தியநெறி தவறாத பசுவின் முன் சிவன், தன் துணைவி பார்வதியுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். பசு சாபவிமோசனம் பெற்று, காமதேனுவாக தேவலோகத்தை அடைந்தது. 
வேங்கை வடிவில் சிவன் தோன்றிய இடம் "வேங்கைவாசல்' என அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டை அருகிலுள்ள இத்திருத்தலம், பசு (கோ) தன் காதில் (கர்ணம்) கங்கை நீரை ஏந்தி வந்து அபிஷேகம் செய்ததால் "கோகர்ணம்' என பெயர் பெற்றது. 
புரிந்து கொள்ளுங்கள்...காலதாமதத்தால் சுகமான வாழ்க்கை பறிபோய் விடும். இனி, நேரத்துக்கு எதையும் செய்து முடிப்பீர்களா! 

No comments:

Post a Comment