Wednesday, August 26, 2015

அன்பே! அன்பே!

அன்பு என்றால் என்ன என்று நாரதர் எழுதியிருக்கிறார்.
பக்தியே அன்பின் உன்னதமான நிலை. அதுவே அன்பின் சிகரம். ஒரு மனிதன் இன்னொருவன் மீது செலுத்தும் அன்பு வெறுப்பாகவும் கோபமாகவும் தாழ்வுணர்ச்சியாகவும் மாறும் சூழ்நிலை உண்டு. அதே மனிதன் கடவுள் மீது அன்பு செலுத்தும் போது அது பவித்ரமாக இருக்கிறது. அதில் துளியளவும் துவேஷம் என்பதே இல்லை.
அன்பு அழிவில்லாதது. அதற்கு இறப்பே கிடையாது. நீங்கள் ஒருவர் மீது அன்பு செலுத்தும் போது, அவர் பதிலுக்கு அன்பு செலுத்துவாரோ மாட்டாரோ என்று கவலைப்படாதீர்கள். 
ஒரு குழந்தை தன் தாயிடம் எப்படி நடந்து கொண்டாலும், அவள் அதுபற்றி கவலைப்படாமல், குழந்தை மீது அன்பைப் பொழிகிறாள்.
இதோ! ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்.
ஒரு மகனும், வயதான தாயும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் மகன் தாயை மிகக் கடுமையாக அடித்து விட்டான். 
அவளுக்கு பல இடங்களில் காயம். விஷயம் தெரிந்து, போலீஸ் அவனைப் பிடிக்க வந்தது. உடனே அந்தத்தாய், ""வேண்டாம்...
வேண்டாம்... என் மகனை ஒன்றும் செய்து விடாதீர்கள். இது எங்கள் குடும்ப பிரச்னை. நாங்களே பேசித் தீர்த்துக் கொள்கிறோம்,'' 
என்றாள். 
இப்படிப்பட்ட நிபந்தனையற்ற அன்பை அமிர்தத்தின் மறுவடிவம் எனலாம். அமிர்தம் என்பது அழிவற்ற வாழ்வைத் தரும். அதுபோல, அன்பும் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும். ஒருவர் அன்பின் சிகரத்தை ருசித்து விட்டால், அதை ஒரு பொழுதும் மறக்க இயலாது. அதை விடவும் முடியாது. அதனால் அன்பு என்பது எப்போதும் அழியாதது.
அன்பின் மகிமையை ஒருவன் உணரத் தொடங்கி விட்டால், அவனது வாழ்க்கை குறையற்றதாக முழுமை ஆகி விடுகிறது. 
உள்ளத்தின் ஆழத்தில் என்றுமே முதுமை அடையாத ஏதோ ஒன்று இருப்பதை உணர முடிகிறது. முழு திருப்தியை வாழ்க்கையில் 
பெற முடிகிறது. மனதில் அன்பு ஆழமாகப் பதிந்து விட்டால், வேறு விருப்பங்களுக்கு அங்கே இடம் இருக்காது. 
அன்பு தான் மனிதனை அமைதி அடையச் செய்யும். ஒன்றைப் படிக்கும் போதும், பார்க்கும் போதும் மனிதன் இன்பம் அடைவது போல உணர்கிறான். அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவனுக்கு அதில் திருப்தியே இராது. இதற்கு 
காரணம் அதைப் பற்றி மேலும் அறிந்து கொண்டு, அறிவை விருத்தி செய்ய வேண்டும் என்ற உந்துதல் தான்! ஆனால், ஆழ்ந்த பக்தி 
செலுத்தும் போது இதுபோன்ற கிளர்ச்சி மனதில் ஏற்படுவதில்லை. அங்கே அமைதி தான் குடி கொள்கிறது.
அன்பைப் போல் உன்னதமானது வேறு ஒன்றும் இல்லை என புரிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர்ஜி

No comments:

Post a Comment