Wednesday, August 26, 2015

தாயில்லாமல் நானில்லை!

கஸ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என இரு மனைவிகள். வினதைக்கு கருடனும், அருணனும் (சூரியனின் தேரோட்டி) பிறந்தனர். கத்ருவுக்கு கார்கோடன் உள்ளிட்ட நாகங்கள் பிறந்தன. 
வினதைக்கும், கத்ருவுக்கும் பகை இருந்தது. ஒருநாள் வெள்ளைக் குதிரை ஒன்றில் இந்திரன் செல்வதைக் கண்ட வினதை, கத்ருவிடம் அந்தக் காட்சியைக் காண்பித்தாள். குதிரையின் வால் மட்டும் கருப்பாக இருப்பதாக கத்ரு பொய் சொல்ல, வினதை திட்டவட்டமாக மறுத்தாள். வாலின் நிறம் கருப்பு என நிரூபித்தால் கத்ருவுக்கு தான் அடிமை என்று வினதை சபதமிட்டாள். பொய்யை உண்மையாக்க கார்கோடனின் உதவியை கத்ரு நாடினாள். 
உடனே பாம்பான கார்கோடன் வேகமாகச் சென்று குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டான். இதை கத்ரு, வினதையிடம் காட்டினாள். 
குதிரையின் வால் கருப்பாக இருந்ததைக் கண்ட வினதை, கத்ருவின் அடிமையானாள்.
சிலகாலம் கழித்து, கத்ரு வினதையிடம், இந்திரனிடம் உள்ள அமிர்த கலசத்தைத் தன்னிடம் கொண்டு வந்து சேர்த்தால், அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்தாள். இதை மகன் கருடனிடம் வினதை தெரிவித்தாள். கருடனும் தேவலோகம் புறப்பட்டார். 
இந்திரனிடம் போரிட்டு அமிர்த கலசத்தைக் கைப்பற்றினான். இதுபற்றி தேவர்கள் திருமாலிடம் முறையிட, அவர் கருடனைத் தடுத்து நிறுத்தினர். இருந்தாலும், தன் தாயாருக்காக வீரத்துடன் போரிட்ட கருடன் மீது திருமாலுக்கு மதிப்பு உண்டானது. அமிர்த கலசத்துடன் செல்ல கருடனை அனுமதித்தார். கருடன், கத்ருவிடம் அமிர்த கலசத்தை ஒப்படைத்து தாயை விடுவித்தார். அத்துடன், திருமாலின் வாகனமாகும் பாக்கியமும் பெற்றார்.

No comments:

Post a Comment