Wednesday, August 26, 2015

உனக்கே நீ யாரோ?

நீ எப்படி உன்னை அறிமுகம் செய்து கொள்கிறாய்? நீ யாரென்று உனக்கு தெரியுமா? 
உன்னை யாராவது ""நீ யார்?'' என்று கேட்டால், பெரும்பாலும், நீ செய்யும் தொழிலையோ மற்றும் யாரோ ஒருவருக்கு நான் இவ்விதமான உறவு என்றோ தான் சொல்கிறாய். 
"நான் இன்னாருடைய மகன்', அல்லது "நான் ஒரு மருத்துவன்' அல்லது "நான் இந்த இடத்தில் வேலை செய்கிறேன்' என்கிறாய். 
இப்போது, இந்தப் பதில்களை மீண்டும் அசை போட்டுப் பார். உன்னிடம் கேட்கப்பட்ட கேள்வி "நீ யார்?' என்பது. ஆனால், நீ சொன்ன பதிலோ உன் தொழில் அல்லது உறவைப் பற்றியது. 
செய்யும் தொழிலா நீ? அவ்வளவு தானா? இன்றைக்கு நீ ஒரு தையல்காரனாக இருக்கலாம். நாளை நீ சமையல்காரனாக மாறக்கூடும். 
அடுத்தநாள், நீ ஒரு ஆசிரியராக மாறக்கூடும். அதாவது, உன் தொழில்கள் மாறலாம். நீ ஒரு தாயாகவோ தந்தையாகவோ இன்று இருக்கிறாய். இதற்கு முன் நீ மாணவனாக இருந்தாய். அதற்கு முன் குழந்தையாக இருந்தாய். சில சமயங்களில் ஏதோ நோய் வந்து படுக்கையில் நோயாளியாக இருந்திருக்கிறாய். அதாவது, வாழ்க்கையில் நீ பலவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறாய். 
நான் இன்னான், நான் ஒரு அமெரிக்கன், மெக்சிகோவைச் சேர்ந்தவன், கனடா நாட்டவன், ஆங்கிலேயன், ஜெர்மானியன் எனத் தன்னை அடையாளம் காண்பது ஓரளவுக்கே பலன் தரும். ஆனால், அதுவே முடிவான உண்மை அல்ல. பூரணத்துவமும் அல்ல. 
எனவே, உன்னை நீ ஒரு பாத்திரமாக அறிமுகப்படுத்திக் கொள்ளாதே. "நான் யார்... நான் யார்...' என்று கேட்டுக்கொண்டே இரு. அப்போதே உன் ஆன்மிகப்பயணம் ஆரம்பமாகி விட்டது என்பதைப் புரிந்து கொள்.
ஆன்மிகப்பயணம் என்பது நம் மூலத்தை தேடுவதே ஆகும். இன்று இந்தியாவில் பிறந்திருக்கிறேன். இதற்கு முன் எங்கு பிறந்தேன். மனிதனாகவா அல்லது வேறு பிறப்பா? என்று ஆய்வு செய்து பார். நம் சரீரம் தான் மாறியிருக்கிறது. நாம் மாறவில்லை என்ற உண்மை புரியும். ஆனால், நம் உறவுகள் மாறியிருக்கும். 
அபிப்ராயம், தொழில் எல்லாமே மாறியிருக்கும். ஒரு பூச்சியாகப் பிறந்தால், அதே இனம் அல்லது வேறு இன பூச்சிகள் நமக்கு உறவாயிருக்கும். 
இப்படியே ஆய்வு செய்து கொண்டே போனால், நாம் எங்கிருந்து வந்தோம் என்ற மூலம் தெரிந்து விடும். இதைத்தான் நம் ஞானிகள் செய்தார்கள். கடைசியாக, படைப்பிற்கு ஆதாரமானவன் இறைவன் என கண்டு கொண்டார்கள். எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று ஐக்கியமாவது என்று முடிவெடுத்தார்கள். வாழ்வின் ரகசியத்தைப் புரிந்து கொண்டார்கள். 
வாழ்வின் முந்தைய நிலையை ஆய்வு செய்து இறைவனுடன் கலக்க நினைப்பது ஒன்றே பேரானந்தம் வரும். மற்ற ஆய்வுகள் தற்காலிக சுகத்தையே தரும்.

No comments:

Post a Comment