Monday, August 24, 2015

சத்தியமே லட்சியம்!

ராமாயணம் பற்றிப் பேசாதவரே இல்லை. கடவுளை நம்பாதவரும், "ஆரம்பிச்சிட்டான்யா ராமாயணத்தை' என்பதுண்டு. அந்த அளவிற்கு புகழ் பெற்ற ராமாயணத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
வித்வான் ஒருவர், தினமும் ராமாயணம் படித்து வந்தார். பலரும் அதைக் கேட்டு மகிழ்ந்தனர். 
ஜடாயுவுக்கு ராமர் முக்தியளிப்பதைப் படிக்கும் நாள் அன்று! அதற்காக மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 
"ஜடாயு முக்தி' படித்தும் முடிக்கப்பட்டது. 
நள்ளிரவில் நகர்வலம் வந்த அவ்வூர் மன்னன் மண்டபத்தைக் கண்டான். சேவகன் காவலுக்கு நின்றான். 
அவனிடம்,"" இங்கு என்ன விசேஷம்?'' என்றான். 
""இங்கு பெரியவர் ஒருவர் தினமும் ராமாயணம் படிக்கிறார். இன்று ஜடாயுவிற்கு மோட்சம் கொடுத்ததால், மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது,''என்றான். 
""நீ அந்த கதையைக் கேட்டாயா?'' என்று மன்னன் கேட்க அவனும் தலையசைத்தான். 
""ராமரும் நம் போல மனிதன் தானே? அவரால் எப்படி மோட்சம் கிடைக்கும்? கதை சொல்பவர் அதற்கு என்ன விளக்கம் சொன்னார்?'' என்று கேட்டான் மன்னன். 
""அது பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லையே!'' என்றான் சேவகன். 
""சரி! அவரிடம் கேட்டுப் பதில் சொன்னால் உனக்கு சன்மானம் அளிப்பேன்,'' என்று சொல்லிப் புறப்பட்டான். 
மறுநாள் ராமாயணம் படிக்கும் நேரம் வந்தது. சேவகன், ""சுவாமி! என் சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும். நேற்று ஜடாயுவுக்கு ராமன் மோட்சம் கொடுத்ததாகச் சொன்னீர்கள். மனிதனான அவரால் இதை எப்படி செய்ய முடியும்? '' 
""அப்பா! "ஸத்யேந லோகாந் ஜயதி' என்கிறது சாஸ்திரம். சத்தியத்தைக் கடைபிடித்தால் சகல உலகங்களும் ஒருவருக்கு வசமாகி விடும். இதனால் தான் சத்திய சந்தனான ராமனால் ஜடாயுவிற்கு மோட்ச உலகை வழங்க முடிந்தது,'' என்றார். 
சேவகனும் அதை மன்னனிடம் தெரிவித்து சன்மானம் பெற்றான். 
நாமும் சத்திய வழியில் நடந்தால், அந்த ராமனைப் போல் வாழும் பேறு பெறலாம்

No comments:

Post a Comment