Monday, August 24, 2015

அடக்கமுமே இறைவன் அருகில் நம்மைக் கொண்டு சேர்க்கும்,

பக்தியை ஊட்டும் விதத்தில் சாய்பாபா பல கதைகள் சொல்வார். அதில் ஒரு கதை மிகவும் சுவாரஸ்யமானது.
கிருஷ்ணர் மீது பாமா, ருக்மணி இருவருக்கும் கொள்ளை ஆசை. ஆனால், பாமா அவரைத் தன்னுடன் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பாள். இதற்காக நாரதரின் உதவியை நாடினாள்.
கடவுளை யாரும் தனக்குச் சொந்தமென உரிமை கொண்டாட முடியாது. அவர் எல்லோருக்கும் பொதுவானவர். இது நாரதருக்குத் தெரியும். இருப்பினும், பாமாவிடம் நேரில் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டாள். 
ஏதாவது உபாயம் செய்து, அவளுக்குப் புரிய வைக்க வேண்டுமென முடிவு செய்தார். 
""பாமா! நீ கிருஷ்ணனை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும். பிறகு, ஒரு தராசுத்தட்டில் கிருஷ்ணனை இருக்கச் செய்து, மறுதட்டில் அவரது எடைக்கு எடை தங்கம் வைக்க வேண்டும். அதைத் தானம் பெற்றவரிடம் கொடுத்து மீட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் கிருஷ்ணன் எப்போதும் உன் சொந்தம் தான்,'' என்றார் அந்த கலகக்கார முனிவர்.
பாமாவும் அதை நம்பி தங்கத்தைக் கொட்டு வந்து கொட்டினாள். உஹும்..தராசு முள் அசையவே இல்லை. நேராக ருக்மணியின் அறைக்கு ஓடினாள். நிலைமையைச் சொன்னாள். ருக்மணி அங்கு வந்து நாரதரிடம், ""கிருஷ்ணனை பணத்தால் வாங்க முடியாது. ஒரே ஒருமுறை "கிருஷ்ணா' என பக்தியுடன் சொல்லி, ஒரு இலையோ, பழமோ, பூவோ எடுத்து அவனுக்கு படைத்தால் போதும். தராசு சரியாகி விடும். அவனது திருநாமம் தான் அவனது எடைக்கு நிகரானது,'' என்றாள்.
நாரதர் சிரித்தார்.
""உருவமுள்ள இறைவனுக்கு உருவமற்ற ஒரு பெயர் எப்படி சமமாக முடியும்? இதெல்லாம் நடக்கப் போவதில்லை. இருந்தாலும் 
முயன்று பார்,'' என்றார்.
ருக்மணி தான் சொன்னபடியே "கிருஷ்ணா' என மனதார சொல்லிக்கொண்டு, ஒரே ஒரு துளசி இலையை எடுத்து வைத்தாள்.
ருக்மணியின் அன்பு, பக்தி, தூய மனம் ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டார் கிருஷ்ணர். எடை சமமாகி விட்டது.
இந்தக் கதையைச் சொன்ன சாய்பாபா, ""தூய பக்தியே ஆன்மிகத்தின் ஆணிவேர். ஆன்மிகவாதிகளுக்கு தானே உயர்ந்த பக்தியுடையவன் என்ற ஆணவம் கூடாது. எளிமையும் அடக்கமுமே இறைவன் அருகில் நம்மைக் கொண்டு சேர்க்கும்,'' என்கிறார்.

No comments:

Post a Comment