Wednesday, August 26, 2015

கடமையே கந்தன்

முருகனை குல தெய்வமாக எண்ணி, பக்தர் ஒருவர் பூஜை செய்து வந்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான். "கந்தவேலன்' என பெயர் சூட்டினார். அவனும் முருக பக்தனாகத் திகழ்ந்தான். தன் தந்தையிடம், முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதங்களையும், அவரது அடியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் கேட்பான்.
படிப்பு முடித்ததும், முழுநேரமும் முருகனுக்கே பணி செய்ய முடிவெடுத்தான். 
பக்தியோடு சேவை செய்தால், நக்கீரர், அருணகிரியார் போல தனக்கும் முருகன் காட்சி தருவார் என்று பரிபூரணமாக நம்பினான். 
சஷ்டி, கிருத்திகை நாட்களில், முருக பக்தர்களுக்கு அன்னதானம் செய்வான். 
தினமும் கோயிலுக்கு வரும் கந்தவேலன் கண்ணீர் வடித்து, ""முருகா! உன்னையே நினைத்து உருகிக்கொண்டிருக்கும் எனக்கு காட்சி தருவாயா? அருள் செய்,'' என்று வேண்டி நிற்பான். அவனது பிரார்த்தனைக்கு இரங்கிய முருகப்பெருமான் அவனுக்கு காட்சி தர எண்ணம் கொண்டார். 
அன்று வைகாசி விசாகம்! பக்தர்கள், அன்னதான மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அவனுக்கு அந்த அற்புதக் காட்சி கிடைத்தது. 
ஆம்! சன்னிதியில் நின்றவன் முன், முருகன் ஆறுமுகங்களும், பன்னிருகரங்களுடனும் காட்சி தந்தார். பக்திப்பரவசத்தில் திளைத்தான் அவன். அதே நேரத்தில் அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் விரைவில் உணவிடும்படி சப்தமிட்டது அவனது காதில் விழுந்தது. 
அதைக் கேட்டுபடபடத்தான். ""முருகா! எத்தனையோ நாட்கள் கழித்து எனக்கு நீ காட்சி தந்திருக்கிறாய். உன் பேரழகை ஆயுள் முழுவதும் தரிசித்து கொண்டிருக்கலாம். ஆனால், வந்தவர்களை காக்க வைத்து விட்டு, உன் முன்னால் அமர்ந்திருப்பது முறையல்ல. இதோ, ஒரு 
நிமிடம்! உணவு பரிமாறி விட்டு வந்து விடுகிறேன்,'' எனச் சொல்லி பதிலுக்குக் காத்திருக்காமல் விரைந்து சென்றான்.
பேச்சுக்கு ஒரு நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லலாமே தவிர, ஆயிரம் பேருக்கு அன்னம் போடுவதென்றால் சாதாரண விஷயமா? 3 மணி நேரம் கடந்து விட்டது. எல்லா வேலையும் முடிந்த பின் சன்னிதி திரும்பினான் அவன். 
என்ன ஆச்சரியம்! முருகன் தன் பக்தனுக்காக அங்கேயே காத்திருந்தார். 
அவன் வியந்து நின்றான். தாமதத்திற்கு மன்னிப்பு வேண்டி திருப்பாதங்களில் விழுந்தான். 
""கந்தவேலா! வருந்தாதே. "தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்ற 
அவ்வையின் பாடலை நீ அறிந்ததில்லையா? எனக்கு செய்யும் பூஜையை விட அடியார்களுக்கு அமுது அளிக்கும் உன் பணியில் இருந்த கடமையுணர்வின் முன் நான் நிற்பது ஒன்றும் பெரிதல்ல. உன் கடமையை எப்போதும் சரியாகச் செய்!'' எனச்சொல்லி ஆசிர்வதித்தார். 
"கடமையைச் செய்யுமிடத்தில் கந்தன் வாசம் செய்கிறான்' என்ற உண்மையை இந்தக்கதை 
உணர்த்துகிறது.

No comments:

Post a Comment