Wednesday, August 26, 2015

வாழும் வரை போராடு!

ஏராளமான பணம் இருந்தும் கூட இளைஞன் ஒருவன், ஏதாவது பிரச்னையில் சிக்கித் தவித்தான். மனதில் நிம்மதி இல்லை. முதியவர் ஒருவர் அவன் வீட்டுக்கு வந்தார். வாட்டமுடன் இருந்த இளைஞனிடம், ""உனக்கு என்ன பிரச்னை?'' என்று கேட்டார்.
""நான் நிறைய சம்பாதிக்கிறேன். குடும்பத்திலுள்ள அனைவரும் இஷ்டம் போல செலவழித்தும் யாருக்கும் திருப்தி இல்லை. எப்போதும் வேலை செய்தே அலுத்து விட்டேன். நிம்மதியின்றித் தவிக்கிறேன்,'' என்றான் சோகத்துடன்.
பெரியவர் சிரித்தபடி, ""நிம்மதி தரும் இடம் ஒன்று இருக்கிறது. என்னுடன் வருகிறாயா... பார்க்கலாம்,'' என்றார். 
ஆர்வமாக அவருடன் புறப்பட்டான் இளைஞன். அவர் அவனை மயானத்துக்கு அழைத்துச் சென்றார். 
அவன் அதிர்ந்து போனான்.
""என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள்?'' என்றான்.
""பார்த்தாயா... தன் மீது நெருப்பு எரிவது கூட தெரியாமல், நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்... இறப்புக்கு பிறகே மனிதனுக்கு நிம்மதி... அதுவரை மனிதனுக்கு பிரச்னை இருக்கவே செய்யும். வாழும் வரை போராடக் கற்றுக் கொள். போராட்டம் முடிந்ததும் கடவுளின் அருளால் அமைதியான பேருறக்கம் கிடைக்கும்,'' என்றார்.
தெளிவுடன் புறப்பட்டான் இளைஞன்.

No comments:

Post a Comment