Wednesday, August 26, 2015

என் ஜீவன் சிவாஜி!

சமர்த்த ராமதாசருக்கு மராட்டிய மன்னர் வீர சிவாஜி மீது தனி அன்பு உண்டு. ராஜா என்ற அந்தஸ்து காரணமாக சிவாஜி மீது அவர் அன்பு செலுத்துவதாக மற்றவர்கள் எண்ணினர்.
இதை அறிந்த ராமதாசர் சீடர்களுடன் காட்டுக்குப் புறப்பட்டார். வழியில் வயிற்று வலி ஏற்பட்டது. சீடர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தகவலறிந்த சிவாஜி அரண்மனை வைத்தியரை அழைத்து வந்தார். சிகிச்சை செய்ததில் பயனில்லை. 
உடனே ராமதாசர்""சிவாஜி! சிங்கத்தின் பாலை குடித்தால் தான் என் வலி குணமாகும். அது சாத்தியமா?'' என்றார்.
""கவலையை விடுங்கள் குருவே! சிங்கப்பாலுடன் வருகிறேன்'' என்று காட்டுக்குள் புறப்பட்டார் சிவாஜி. 
நடுக்காட்டில் ஒரு குகை தென்பட்டது.
அங்கிருந்த சிங்கம், சிவாஜியைக் கண்டதும் கர்ஜித்தது.
சிவாஜி மானசீகமாக "வயிற்றுவலியால் துடிக்கும் என் குருநாதருக்காக சிறிது பால் கொடுத்து, என்னைக் குருவருளுக்குப் பாத்திரமாக்க வேண்டும்,'' என்று வணங்கினார். 
சிங்கம் அமைதியானது. 
சிவாஜியும் பாலை ஒரு பாத்திரத்தில் கறந்து வந்து குருவிடம் கொடுத்தார்.
"சிவாஜி! நீ என் மீது கொண்டிருக்கும் தூய அன்பை மற்றவர்கள் அறியவே வயிற்று வலி வந்தது போல நடித்தேன். உயிரைப் பணயம் வைத்து சிங்கத்திடம் பால் கறந்து வந்த உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை. சீடர்களே! பிறருக்காக தன் உயிரையும் விடத்துணிபவன் எவனோ அவனே உயர்ந்தவன். அந்தஸ்து பார்த்து அன்பு வருவதில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment