Thursday, March 12, 2015

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்?

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்?

ஒரு மாமாங்கம் என்பது 12 ஆண்டுகளைக் குறிக்கும். தேவதா ஆராதனைக்கு குரு பகவானை பிரதானமாக கணக்கில் கொள்வார்கள். குரு பகவான் சராசரியாக ஒரு ராசியில் ஒரு வருட காலம் சஞ்சரிப்பார்.

 12 ராசிகளையும் முழுமையாக ஒருமுறை சுற்றி வருவதற்கு 12 ஆண்டுகள் காலம் ஆகும். நாம் வாழுகின்ற இந்த அண்டம்தான் 12 ராசி மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக குருபகவான் இந்த அண்டத்தை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள் என வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு மாமாங்கம் என்பது தேவதைகளை ஆராதனை செய்வதற்கான பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ளும் கால அளவாக வைத்துக் கொள்ளலாம். 

மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து ஆனது 12 ஆண்டுகளில் தனது சக்தியை இழந்துவிடும் என்பதால் அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர். ஆலயம் புதுப்பிக்கப்பட்டு செய்யப்படுகின்ற கும்பாபி ஷேகத்தினை புனருத்தாரணம் என்று அழைப்பர். 

பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்கும். மிகப்பெரிய ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது என்பது மிகவும்விசேஷமானது.


1 comment:

  1. Thanks Sir, This information was very useful for a work I am involved at the present moment . Godwin

    ReplyDelete