Friday, March 27, 2015

மகிழ்ச்சி அதிகரிக்க மகா சிவராத்திரியைக் கொண்டாடுங்கள்

உலகம் சிவமயமாக இருக்கின்றது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். மாசி மாதம் என்றாலே மகம் நட்சத்திரம் தான் நினைவிற்கு வரும். அது போல சிவராத்திரி திருநாளும் மறக்கமுடியாத மகத்துவம் நிறைந்த நாளாகும். அம்பிகைக்கு உகந்த நாள் நவராத்திரி. அது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

அணிதிகழும் சிவனுக்கு கொண்டாடும் விழா சிவராத்திரி விழா. அது ஓரிரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடப்படுகிறது. உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய கரங்களால் மூடியதால் உலகமே இருளால் சூழப்பெற்றது. அந்த நாளே 'சிவராத்திரி' என்றும் புராணங்கள் சொல்கின்றன.

அந்த இரவில் ஒளிவேண்டித் தவித்த தேவர்களுக்கெல்லாம் ஒளிகொடுக்கச் சொன்ன சிவன் தன் நெற்றிக் கண்களைத் திறந்ததாகவும் கருதப்படுகின்றது. எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும்.

அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச்சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சித்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் வைத்து சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சர மந்திரத்தைப் பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும். சிவனுக்குரிய ராத்திரி சிவராத்திரி.

அன்றைய தினம் சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்து சேரும். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவுடைய அன்னை பார்வதி தேவியையும் அன்று வணங்கினால் ஊரும், உறவும் போற்றிக் கொண்டாடும் விதத்தில் உங்கள் வாழ்க்கை அமையும்.

எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்றாகும். இந்த விரத நாளில் மனமுருகி வழிபட்டால் தினமும் தித்திக்கும் செய்திகள் வந்து சேரும். மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தசி திதியில் வருவதாகும்.

அன்று இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதம்இருந்தால் நாள்தோறும் நற்பலன்கள் நடைபெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்து, விடியற்காலையில் நீராடிய பிறகு உணவு உண்பது உத்தமம். திருவண்ணாமலையில் அடிமுடி தேடி அலுத்துத் திரும்பிய பிறகு அடிபணிந்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதிவடிவாய்க் காட்சி தந்தார் சிவபெருமான்.

அந்த நிகழ்ச்சி நடைபெற்றது சிவராத்திரி நாளில் தான். கோவில்களில் பெருச்சாளி ஓடி, ஆடித் திரிவதைப் பார்த்திருப்பீர்கள். சிவன் வீற்றிருந்து அருள் வழங்கும் கோவில் ஒன்றில் இதே போல் ஒரு பெருச்சாளி திரிந்தது. அந்தக் கோவிலில் எரிந்து கொண்டிருந்த நெய் விளக்கின் நெய் வாசனை பெருச்சாளியின் மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது.

அதைச் சுவைப்பதற்காக விளக்கின் மேல் ஏறியது. மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி அருகே எலி வந்தது. எலியின் மூக்கு திரியில் பட்டது. உடனே மங்கலாக எரிந்த விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. எலியின் மூக்கில் வெப்பம் பட்டதால் அது தாவி ஓடி விட்டது. எலி தன்னை அறியாமலேயே திரியை மூக்கால் தூண்டிவிட்டது.

இதனால் ஒளி பிரகாசமானது. இந்த சம்பவத்திற்கு காரணமான பெருச்சாளியை மூவுலகையும் ஆளும் மகாபலிச் சக்கரவர்த்தியாக மறுபிறவியில் இறைவன்   படைத்தார். எனவே சிவாலயத்தில் நாம் சிவராத்திரி அன்று செய்யும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொருகைங்கரியமும் நம்மை உயர்த்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

'நமச்சிவாயத்தை' நான் மறவேனே! என்று சிவராத்திரியன்று 'சிவாய நம' என்று சிந்தித்து இருந்தால் அபாயம் ஒரு நாளுமில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். மங்கல நாளான சிவராத்திரியை மறவாமல் கொண்டாடுவோம்.

மகிழ்ச்சியை அனைவரும் வரவழைத்துக் கொள்ள மகேசன் அருள்புரியட்டும். சிவராத்திரியன்று மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிவரை ஒவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிவன்-உமையவள், நந்தி ஆகியோரின் நல்லருளைப் பெற்று நலமுடன் வாழலாம்

No comments:

Post a Comment