Friday, March 27, 2015

வீரபத்திரருக்கு உகந்த 5 வகை வழிபாடு

சதுர்த்தி வழிபாடு :

பவுர்ணமி, அமாவாசை நாட்கள் விரதமிருந்து ஸ்ரீவீரபத்திரரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்களாகும். இதனால் காரியங்கள் கைகூடும். தடைகள் விலகும். துன்பம் தீரும். அமாவாசை பவுர்ணமிக்கு பிறகு நான்காவது நாள் வருவதே சதுர்த்தி திதியாகும். அழகில் சிறந்த சந்திரன் விநாயகரின் உருவத்தை கண்டு ஏளனம் செய்தான் அதனால் வெகுண்ட விநாயகர் அவனை ஒளி குன்றிப்போகுமாறு சபித்தார்.

சாபம் பெற்ற சந்திரன் தன் நிலை உணர்ந்து வருந்தி விநாயகரைச் சரண் அடைந்தான். அதனால் மனம் இரங்கிய விநாயகர், அவரை இகழ்ந்த சதுர்த்தி திதியன்று மட்டும் எவரும் சந்திரனைக் காணலாகாது என்றும் அவ்வாறு கண்டால் நினைவாற்றலை இழப்பர் என்றும் வீண்பழிக்கு உள்ளாவர் என்றும் சாபத்தில் இருந்து விடுவித்தார்.

எனவே சதுர்த்தி அன்று விநாயகரை குறித்து தவம் செய்வதும், விரதம் மேற்கொள்வதும் வழக்கம். சதுர்த்தி விரதம் இருப்போர் வாழ்வியல் துன்பங்கள் நீங்கி நலம் அடைவர். இக்கருத்தை மனதில் கொண்டு, சேலம் குகை நரசிங்கபுரம் வீரபத்திரசாமி கோயிலிலும், பட்டீசுவரம் அங்காள பரமேசுவரி கோவிலிலும் சதுர்த்தியன்று வீரபத்திரரைச் பூஜை செய்கிறார்கள்.

அஷ்டமி வழிபாடு :

அமாவாசை, பவுர்ணமிக்கு 8-வது நாள் அஷ்டமி நாளாகும். இது ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தநாள், பைரவருக்கு உகந்த நாள். பல்வேறு சிறப்புகளுடைய இந்நாளில் வீரபத்திரரை வழிபடும் வழக்கம் பக்தர்களிடம் உள்ளது.

மாயவரம் வீராவடி வீரபத்திரசுவாமி கோவிலில் பவுர்ணமியை அடுத்த அஷ்டமி திதியில், குறை தீர்வதற்காக சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். அஷ்டமியும் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் வீரபத்திரரை வழிபட்டால் வெகு விரைவில் பலன் கிட்டும்.

திரயோதசி வழிபாடு :

அமாவாசை, பவுர்ணமிக்கு 13-வது நாள் வருவது திரயோதசி நாளாகும். இது சிவபெருமானுக்கு உகந்த நாள். தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த நாள். சிவபெருமான் நந்திக்கு அருளிய நாள். வீரபத்திரரின் மறுவடிவாகிய சரபேஸ்வரர் நரசிம்மரின் கோபத்தை அடக்கிய நாள். இந்நாளில் ஆதிசிவன் தம்மை வழிபடும் அடியவர்களுக்கு அருளும் நாள்.

எனவே துன்பங்கள் நீங்க வினைப்பயன்கள் தீர இந்நாளில் சிவபெருமானைப் போற்றி வணங்குவது மரபு. வினைத் துன்பம் நீங்கும் என்பதால் இந்நாள் பிரதோஷ நாள் எனப்படும். சிவபெருமானின் வீர வடிவங்களுள் ஒருவராய்த் திகழும் வீரபத்திரரையும் விரதமிருந்து திரயோதசி திதியில் சிறப்பாக வழிபடுகின்றனர்.

பழங்காநத்தம் கணேச அக்னி வீரபத்திரசாமி கோவிலில் பிரதோச நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும். வீரபத்திரரின் எதிரில் இருக்கும் நந்தீசுவரருக்கு மட்டுமே பிரதோசப் பூஜை செய்கின்றனர். மயிலாப்பூர் ஸ்ரீவீரபத்திரர் கோவிலிலும், திண்டுக்கல் கத்தரிக்காய் சித்தர் கோவிலிலும், தனநாயக்கன் கோட்டை வீரபத்திரசுவாமி கோவிலிலும் உளள வீரபத்திரரைப் பிரதோசத்தன்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

சதுர்த்தசி வழிபாடு :

அமாவாசை, பவுர்ணமிக்கு 14-வது நாள் வருவது சதுர்த்தசி திதியாகும். இது உலகம்மையாகிய பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்ட நாள். ஊழியின் இருளை இறைவன் அகற்றிய நாள். இதன் பெருமை சொல்லில் அடங்காது. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முன்வரும் சதுர்த்தசி திதியை மாத சிவராத்திரியாக கொண்டாடுவது மரபு.

திருவெண்காட்டிலும், மம்சாவரத்திலும் உள்ள வீரபத்திரரைக் குலதெய்வமாகக் கொண்டோர், மாத சிவராத்திரியன்று சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். நட்சத்திர வழிபாடு : ///////// 27 நட்சத்திரங்களில் பூரம், கிருத்திகை ஆகிய நட்சத்திரங்களில் வீரபத்திரரைச் வழிபாடு செய்வது நல்லது.

No comments:

Post a Comment