Monday, March 30, 2015

சுப்பிரமணியம் என்பது என்ன ?

சுப்பிரமணியம் என்பது என்ன ?
நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கின்றது , இந்த ஜோதி மணியை ஷன்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது , இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள் .இந்த தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் சண்முகம் என்பார்கள் , ஆயினும் சர்வ தத்துவங்கிளனது அந்தத்தில் உண்மணிக்கப்பால் சாந்த நிறைவாய் உள்ள ஆறு தலையாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம் .
ஆறு ஜோதியாயும் , ஆறு அறிவாயும் , ஆறு தலை உடையதாயும் இருப்பதால் முகம் ஆறு . கால் இரண்டென்பது தோன்றும் அறிவு , தோற்றுவிக்கும் அறிவு என்னும் இரண்டறிவாகிய விஷய உணர்ச்சியும் , நிர் விஷய உணர்ச்சியும் ஆகும் , கை பன்னிரெண்டு என்பது ஆறு ஆதாரங்களில் உள்ள பிரகாசம் , அப்ப்ரகாசமாகிய பன்னிரெண்டாம்.
தசாயுதம் , அபய வரதம் என்பது என்பவை யாவை எனில் வஜ்ஜிரம் என்பது தீக்ஷன்யா உணர்ச்சி , வேல் என்பது சக்தி , அருள் , அறிவு . மணி என்பது ஆன்ம விளக்கமாகிய நாதம் .த்வஜம் என்பது கீர்த்தி . சரசிஜம் என்பது தயவு . குக்குடம் என்பது மாச்சரியம் இல்லாத நிறைவு , பராகம் என்பது பாச நீக்கம் , தண்டம் என்பது வைராக்கிய அறிவு , பாணம் என்பது அன்பு , அபயம் என்பது சமாதான உணர்ச்சி வரதம் என்பது நிராபாரமாகிய ஆதரவென்னும் சகிப்பு , கடப்ப மாலை என்பது சர்வ தத்துவ கண்டனம் , பல வர்ணமுள்ளதும் , விசித்திர வடிவமானதும் , மறதி முதலிய குணங்களுக்கு காரணமானதும் ,, மாயைக்கு இருப்பிடமாயுள்ளதும் ஆன மூலப்ரகிருதியே மயில் என்பது .
மயில் மேல் சுவாமி எறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்கு காரணம் என்னவென்றால் பிண்டாண்டமாகிய இந்த தேகத்திலும் அண்டத்திலும் மூலக்ஞான காரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதி மாயை இன் அசுத்தகேவலமாகிய அசுத்தாசுத்த மகா அகங்காரம் என்னும் ராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சேதரமான மூவகைத் தத்துவத்தோடு , அக்ஞான திசையல் , ஆன்ம அறிவையும் , பிண்ட விளக்கமான தேவர்களயும் , விஷய விளக்கமான இந்திரியங்களையும் , நாடி விளக்கமான யந்திரங்களையும் , பிராண விளக்கமாகிய உயீர்யையும் , விழுங்கித் தன்னரசு செலுத்தும் .அந்த சூர தத்துவத்தை வதைக்கும் , தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும் , மாச்சரியமாகிய கோழியையும் , விசித்திர மாயை என்னும் மயில் ஆகவும் மகாமதமாகிய யானை முகமாயும் , அதிக்ரோதமாகிய சிங்க முகமாயும் விளங்கும் .
சர்வ தத்துவங்களயும் தன்வசமாக்கி , அகங்கார கொடி கட்டி , அக்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி , பதி , பசு , பாசம் , அநாதிநித்யம் என்னும் சித்தாந்தத்தை விளங்கிக் காட்டுவதற்காக , மாச்சரிய குக்குடத்தை போதமாகிய கையால் அடக்கியும் , விசித்திர மாயையாகிய மயிலைக் கீழ்படுத்தி மேலிருந்து அடக்கியும் , ஆபாச தத்துவங்களைச் சம்மரித்தும் , சுத்த விஷய புவனமாகிய தேவலோகத்தை நிலை பெறச் செய்தும் இந்தரபதியான ரூபேந்த்ரனுடைய பெண்ணாகிய தத்துவ என்னும் தெய்வானையை இடப்பாலமைத்தும் , இந்த்ரியங்கள் ஆகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்டமான சமென்னும் மானினது கற்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும் , நவ தத்துவ காரணமாகிய , நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும் , சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேக வடிவாயும் பாதம் முதல் நாபி வரையில் உஷ்ண உருவாயும் , நாபி முதல் கண்டம் வரையில் ஆதார நாடி உருவாயும் கண்டம் முதல் புருவமத்தி வரையில் மணி உருவாயும் உச்சியில் ஓளி உருவாயும் புத்தியில் சுத்த அறிவாயும் , அனுபவத்தில் நித்தியமாயும் , எங்கும் நிறைவாயும் , கோணத்தில் ஆறாயும் , ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக்கடவுளே சுப்ரமணியம்.

1 comment:

  1. இதைச் சொன்னவர் வள்ளலார் என்று ஏன்குறிப்பிடவில்லை?

    ReplyDelete