Tuesday, March 17, 2015

கரு வளர்ச்சியின் சுக்சுமம்

கரு வளர்ச்சியின் சுக்சுமம்.
----------------------------------------------
ஒரு பெண்ணின் கருப்பையின்
உள்ளே கருவானது எவ்வாறு உருவாகிறது 
என்பதை திருமந்திரப்
பாடல்களின் வழியே கடந்த இதழில்
கண்டோம். இனி அந்தக் கரு வளரும்
நிலைகளில் என்னென்ன
நிகழுகிறது என்று திருமூலர்
கூறியுள்ள சில கருத்துக்களைக்
காணலாம்.
ஒரு கரு உருவான உடனேயே அதில்
உயிர் வந்துவிடுவதில்லை. பிராண
சக்தியும், மறுபிறவி எடுக்கும்
ஒரு ஆன்மாவும் அந்த கருப்
பிண்டத்தின்
உள்ளே நுழையும்போதுதான்,
அது செல்களின் குவியல் என்ற
நிலையிலிருந்து உயர்ந்து உயிருள்ள
ஒரு கருவாக உருவம் பெறுகிறது.
அதுவரையில் நம் உடலிலுள்ள பல
தசைகளைப் போன்றே அந்த கருவுற்ற
முட்டையும்
ஒரு தசை போன்றே கருதப்படும்.
பிராணன் எனும்
மூச்சுக்காற்று (உயிர்க்காற்று)
கருவினுள்ளே நுழைவது குறித்து கீழுள்ள
திருமந்திரப் பாடல் குறிப்பிடுகிறது.
"பூவின் மணத்தைப் பொருந்திய
வாயுவும்
தாவி உலகில் தரிப்பத்தவாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள்
வாயுவும்
கூவி, அவிழும் குறிகொண்ட போதே.'
-திருமந்திரம் பாடல் எண்-265.
தாயின் கருப்பையினுள் இருக்கும்
சிறிய கருவிற்கு உயிரூட்டுகின்ற
மூச்சுக் காற்றானது, குறிப்பிட்ட
காலம் வரும்போது ஒரு மெல்லிய
ஒலியோடு அந்த கருவின்
உள்ளே புகும் என்பது இப்பாடலின்
பொருளாகும்.
அவ்வாறு உள்ளே நுழைந்த
காற்று அந்தக் கருவின் அனைத்துப்
பகுதிகளிலும்
(அனைத்து செல்களிலும் என
வைத்துக்கொள்ளலாம்) பரவி நிற்கும்.
இதற்கு உவமையாக திருமூலர்
பூவின் நறுமணத்தைக்
குறிப்பிடுகிறார்.
ஒரு பூ மலரும்போது அதிலிருந்து வரும்
நறுமணம் காற்றோடு சேர்ந்து அந்தப்
பகுதி முழுவதும் பரவி நிற்பதைப்
போன்று, பிராணன் எனும்
மூச்சுக்காற்றும் கருவின்
உள்ளே நுழைந்து பரவி நிற்கும்!
எவ்வளவு அற்புதமான ஒரு உவமை!
இந்த மூச்சுக்காற்று சரியான
வேளையில்
உள்ளே நுழைந்து கருவுக்கு உயிரூட்டினால்
மட்டுமே, அந்தக் கரு முறையாக
வளர்ந்து ஒரு குழந்தையாக உருமாற
முடியும்.
மூச்சுக்காற்று உள்ளே நுழைவதில்
தாமதங்கள் அல்லது தடைகள்
ஏற்பட்டாலோ அல்லது உள்ளே நுழைந்த
மூச்சுக்காற்றின் இயக்கங்கள் சரிவர
இல்லாது போனாலோ கருவின்
வளர்ச்சி பாதிக்கப்படும்.
கருச்சிதைவும் ஏற்படலாம்.
இதை அடுத்த பாடலில் திருமூலர்
விளக்குகின்றார்.
"போகின்ற எட்டும் புகுகின்ற
பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும்
ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடாவிடின் பன்றியும் ஆமே.'
-திருமந்திரம் பாடல் எண்-266.
இந்த நான்கு வரிகளில் பல
அற்புதமான சூட்சும உண்மைகள்
பொதிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு வரியாக
சற்றே விளக்கமாகக் காணலாம்.
முதல் இரண்டு வரிகளில்,
மூச்சுக்காற்று உள்ளே நுழையும்
முன்னர் அந்தக்
கருவினுள்ளே என்னென்ன உள்ளன
என்பதைப் பட்டியலிடுகிறார்.
கருப்பையினுள்ளே இருக்கும் சிறிய
உடலினுள்,
-போகின்ற எட்டு (8)
-புகுகின்ற பத்தெட்டு (10+8=18)
-ஒன்பது வாய்தல் (வாயில்கள்)
ஆகியவை உள்ளன.
இவை எவையெவை என்பதைக்
காணலாம்.
போகின்ற எட்டு
1. சுவை
2. ஒளி
3. ஊறு
4. ஓசை
5. வாசம்
6. மனம்
7. புத்தி
8. அகங்காரம்
ஆகிய அருவமாக உள்ள
எட்டையே போகின்ற எட்டு என்கிறார்
திருமூலர்.
புகுகின்ற பத்தெட்டு (18)
10 வாயுக்கள் 8 விகாரங்கள்
ஆகியவற்றையே புகுகின்ற
பத்தெட்டு என்கிறார்.
பத்து வாயுக்கள்
1. பிராணன்
2. அபானன்
3. உதானன்
4. வியானன்
5. சமானன்
6. நாகன்
7. கூர்மன்
8. கிருகரன்
9. தேவதத்தன்
10. தனஞ்செயன்
எட்டு விகாரங்கள்
1. காமம்
2. குரோதம்
3. உலோபம்
4. மோகம்
5. மதம்
6. மாச்சரியம்
7. துன்பம்
ஒன்பது வாயில்கள்
1. வலது கண்
2. இடது கண்
3. வலது நாசி
4. இடது நாசி
5. வலது காது
6. இடது காது
7. வாய்
8. குதம்
9. பிறப்புறுப்பு
என உடலிலுள்ள வாசல்கள் மொத்தம்
ஒன்பது. இதையே இப்பாடலில்
"ஒன்பது வாய்தலும்'
என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
இரண்டாவது வரியில் வருகின்ற
"மூழ்கின்ற முத்தனும்' என்னும்
சொற்களும் மிகவும் அர்த்தம்
உள்ளவை.
கருப்பையினுள்ளே கரு பனிநீர்
எனப்படும் ஆம்ய்ண்ர்ற்ண்ஸ்ரீ
எப்ன்ண்க் என்ற
திரவத்தினுள்ளே மூழ்கி இருக்கும்
இல்லையா? எனவேதான் "மூழ்கின்ற'
என்ற வார்த்தையை திருமூலர்
உபயோகப்படுத்தியிருக்கிறார்.
"முத்தன்' என்ற சொல்லுக்கும்
ஆழமான அர்த்தம் உள்ளது.
கடவுளுக்கும்கூட "முத்தன்'
என்றொரு பெயருண்டு. படைத்தல்,
காத்தல், அழித்தல் ஆகிய
மூன்று செயல்களையும்
முறையே பிரம்மன், திருமால், சிவன்
ஆகிய மூன்று கடவுள்களும்
செய்வதாகக் குறிப்பிட்டாலும்
மூவரும் ஒருவர்
என்பதே உயர்நிலைத் தத்துவம்.
மூன்று குணங்களை-
செயல்களை உடைய கடவுள்
"முத்தன்'.
கிறிஸ்துவ மதத்திலும் "தந்தை, மகன்,
தூய ஆவி (பிதா, சுதன், பரிசுத்த
ஆவி)' என கடவுள்
மூன்று நிலைகளில் இருந்தாலும்,
ஒரே கடவுளே என்ற
கோட்பாடு கற்பிக்கப்படுகிறது.
கடவுளுக்குச் சரி;
மூன்று நிலைகளில் ஒன்றாக
இருப்பதால் முத்தன் எனலாம்.
கருவிலிருக்கும்
குழந்தைக்கு "முத்தன்' என்ற
சொல்லை திருமூலர் ஏன்
பயன்படுத்துகிறார்?
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
மூன்று உடல்கள் உள்ளன. நாம்
கண்ணால் காணக்கூடிய
பருவுடலை ஸ்தூல சரீரம்
என்பார்கள். இது தவிர சூட்சும சரீரம்,
காரண சரீரம் என மேலும்
இரு உடல்கள் ஒவ்வொருவருக்கும்
உண்டு. இவை சக்தி நிலை உடல்கள்
(Energy Bodies). சூட்சும சரீரம்,
ஸ்தூல சரீரம், காரண சரீரம் ஆகிய
மூன்றும் இணைந்தே மனிதன்
உருவாகிறான். கருவிலிருக்கும்
குழந்தைக்கும் இது பொருந்தும்.
மூன்று உடல்களால் உருவாவதால்
கருவையும் திருமூலர் "முத்தன்'
என்கிறார்.
இனி பாடலின் அடுத்த
இரண்டு வரி களுக்கு வருவோம்.
முதல் இரண்டு வரிகளில் கருவில்
என்னென்ன உள்ளன என்பதைப்
பட்டியலிட்ட திருமூலர், அடுத்த
இரு வரிகளில்,
"இவை அனைத்துமே ஒரு கருவில்
இருந்தாலும், குண்டலினி சக்தி,
பிராண சக்தி ஆகிய
இரு சக்திகளை இறைவன் சரியான
நேரத்தில் கருவுக்குள் செலுத்தினால்
மட்டுமே, அந்தக்
கரு வளர்ந்து ஒரு குழந்தையாக
மாறும். அது நடைபெறாவிடில்
கரு பாழாகிப் போகும்' என்கிறார்.
"நாகமும் எட்டுடன் நாலு புரவியும்'
என்ற
மூன்றாவது வரியை சற்றே அலசிப்
பார்க்கலாம்.
குண்டலினி சக்தியையே "நாகம்' என
குறிப்பிடுகிறார் திருமூலர்.
நமது உடலில் மூலாதாரச்
சக்கரத்திற்கு அருகில் உறங்கிக்
கிடக்கும் அற்புதமான
சக்தியே குண்டலினி சக்தியாகும்.
சமஸ்கிருத மொழியில் "குண்டலா'
என்றால்
குவிந்து கிடப்பது அல்லது சுருண்டு 
கிடப்பது என்று பொருள்.
பாம்புகள் ஓய்வாக
இருக்கும்போது சுருண்டே இருக்கும்.
எனவேதான் வடமொழி யில்
பாம்புக்கு "குண்டலா' என்ற பெயரும்
உண்டு. தூக்கத்தில்
சுருண்டு கிடக்கும் பாம்பைப்
போலவே நமது குண்டலினி சக்தி தூங்கிய
நிலையில் மூலாதாரத்தின்
அருகே சுருண்டு கிடக்கிறது. இந்திய
மரபுப்படி சக்தி என்பதைப்
பெண்பாலாகவும் தேவியாகவும்
உருவகப்படுத்துவர். எனவேதான்
சுருண்டு கிடக்கும்
சக்திக்கு குண்டலினி,
குண்டலினி தேவி எனப் பெயரிட்டனர்.
எதையும் நேரடியாகக் கூறாமல்
சங்கேத வார்த்தைகளால்
கூறுவது சித்தர் மரபு. எனவேதான்
திருமூலர் குண்டலினியைக் குறிக்க
"நாகம்' என்ற சங்கேத மொழியைப்
பயன்படுத்தியுள்ளார்.
அடுத்து வரும் "எட்டுடன்
நாலு புரவியும்' என்பதுவும் சங்கேத
வார்த்தைகளே. நேரடி யாக அர்த்தம்
கொண்டால் "12 குதிரைகள்'
என்றே அர்த்தம் வரும். ஆனால்
திருமூலர்
இங்கே மூச்சுக்காற்றையே புரவி என்ற
சங்கேத மொழியில் கூறுகிறார்.
சாதாரண
மனிதர்களுக்கு மூச்சுக்காற்று கண்டத்திற்குக்
கீழே எட்டு விரற்கடை பரவி நிற்கும்.
யோகிகளுக்கு கண்டத்திற்கு மேலே நான்கு 
விரற்கடை பரந்து நிற்கும்.
இதையே எட்டுடன் நாலு புரவியும்
என்று சங்கேத மொழியில் கூறுகிறார்.
கடைசி வரியில் வரும் "பாகன்' என்ற
சொல் கடவுளைக் குறிக்கும்
(சிவனை) சங்கேதச் சொல்லாகும்.
"பாகன்' என்பதற்கு செலுத்துபவன்,
கட்டுப்படுத்துபவன் என பல
அர்த்தங்கள் உண்டு.
குண்டலினி சக்தியையும்
மூச்சுக்காற்றையும் கருவின்
உள்ளே செலுத்து பவனாகையால்
கடவுள் இங்கே "பாகன்' ஆகிறார்.
இவை இரண்டையும் பாகனாகிய
கடவுள் அந்தக் கருவின்
உள்ளே செலுத்தா மல் போனால்
அந்தக் கரு வளர்ச்சியடையாது.
வீணாகப் போய்விடும்.
ஐயன் வகுத்த
திருக்குறளை சிறு அடிகளில் பெரும்
உண்மைகளை விளக்கும்
சிறப்பு வாய்ந்த நூலாகக்
கொண்டாடுகிறோம். "கடுகைத்
துளைத்து, ஏழ் கடலைப்
புகுத்தி குறுகத் தரித்த குறள்'
என்று புகழ்வார்கள். திருவள்ளுவரின்
திறமைக்குச் சற்றும் குறைந்ததல்ல
திருமூலரின்
திறமை என்பதற்கு திருமந்திரப் பாடல்
சான்றாக உள்ளதல்லவா?
நான்கு வரிகளில்
எத்தனை எத்தனை சூட்சுமங்கள்!

No comments:

Post a Comment