Friday, March 27, 2015

ராமர் அழிக்க மறந்த வடிவம்

முன்பு ஒரு காலத்தில் விசுவா மித்திரர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் சத்திரிய வம்சமான அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் அவர் அரசு குடும்ப வாழ்க்கையை துறந்து, துறவறம் மேற்கொண்டார். இவ்வாறு துறவியான விசுவாமித்ரர் பல தவங்கள் செய்து பல்வேறு வரங்களை பெற்றார். ஒருமுறை அவர் கடக நாச்சி மலை என்ற இடத்திற்குச் சென்று அங்கு, அந்த மலையின் மேல் அமர்ந்து சிவனை நோக்கி தவம் இருக்க நினைத்தார்.

விசுவாமித்திரர் கடுந்தவங்கள் பல இருந்தவர். திரியாக தன் உடம்பை எரித்து, வரம்பெற்றார். ராஜரிஷி என்ற பட்டம் பெற்றவர். இத்தகைய விசுவாமித்திரர் கடக நாச்சி மலையில் தவம் மேற்கொள்ள முடிவெடுத்தார். ஆனால் கடக நாச்சி மலையில் தாடகை என்ற அரக்கி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இலங்கேஸ்வரன் இராவணின் மாபெரும் அபாய சக்திகள் பெற்றவள்.

பல வரங்கள் பெற்று அதை தீய வழியில் செலுத்தி வந்தாள். அம்மலையில் விசுவாமித்திரர் தவம் செய்து முடிக்க அவளால் ஏதேனும் தடை ஏற்படும் என எண்ணினார். ஆதலால், தசரதன் மகன்களான ராமர், லட்சுமணர் இருவரையும் அழைத்து வந்தார். அவர்களும் சம்மதித்து சமாளிக்க ஈஸ்வரியை வேண்டி வரம் கேட்க, ஈஸ்வரியும் அந்த அரக்கியை அழிக்க வழி கூறினாள்.

அரக்கியை அழிக்கப் போகும் முன் மண்ணாலான ஈஸ்வரியை வடித்து, பூஜை செய்து வழிபட்டு, அந்த வடிவத்தை அழித்து விட வேண்டும் என்றார். அதை ஏற்று பூஜை செய்து ராமர் அதை அழிக்க மறந்து விடுகிறார். பிறகு அரக்கியை அழித்த பின் நினைவு வந்ததும் அந்த வடிவை அழிக்க வேண்டாம் என்று கூறி விட்டு, அவ்வடிவம் இன்று முதல் என் பிரதிநிதியாக இருந்து இவ்வூரைக்காத்து வரும் என்று கூறினார்.

அவ்வாறு அமைந்த தெய்வமே நமது மாசாணி அம்மன். ஈஸ்வரியின் மறுவடிவமாக உள்ள மாசாணி அம்மன் வேண்டுவோருக்கு வேண்டுவன தரும் அன்பு தெய்வம். மாசாணி அம்மனை நினைத்து ஒரு காரியம் கை கூட வேண்டினால், கண்டிப்பாக நிறைவேறும். தவறு செய்தவர்களைத் தண்டிப்பதில் கடுமையான அம்மன் இந்த மாசாணி அம்மன்.

மாசாணித் தாயின் படம் வீட்டில் இருப்பது, அந்த ஈஸ்வரியே வீட்டில் இருப்பதற்கு சமமாகும். அன்னையின் தரிசனம் காண பருவமழை பெய்யாது பெய்யும். எப்பொழுதும் செழித்து வளமுடன் விளங்கும் இப்பகுதி, கொங்கு மண்டலத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கிருந்து 15 கி.மீ தொலைவில் கம்பீரமாக சாட்சியளிப்பது ஆனைமலை.

இவ்விடத்திலிருந்து திருச்சூர் நெடுஞ்சாலையில் சென்றால் ஆனைமலை பிரிவு வருகிறது. ஆனைமலையடுத்து சேத்து மடை சாலையில், அருள்மிகு மகாசக்தி மாசாணியம்மன் திருக்கோவில் என்ற அழகிய தோரணவாயில் நம்மை வரவேற்கிறது. பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து சற்று உள்ளே சென்றால் அருள்மிகு அன்னையின் எழிலார்ந்த மாளிகை.

அடுத்து ஆழியாற்றின் அழகினைக் காணலாம். அதன் கிளையாறாகிய உப்பாறு மிகவும் சிறப்புடையது. இந்த நதியில் இறங்கி நீராடினால் நம் பாவங்கள் நீரில் விழுந்த உப்பாக கரைந்தோடும், பிறகு அகத்தூய்மை புறத்தூய்மையோடு மாசற்ற மனத்துடன் அன்னையை தியானித்து அவள் கம்பீரமாக சயனித்திருக்கும் கண்கொள்ளாக் கட்சியைக் காணலாம்

No comments:

Post a Comment