Friday, March 27, 2015

3 வகை வீரபத்திரர்கள்

அகோர வீரபத்திரரும் அக்னி வீரபத்திரரும்:

தமிழகத்தின் பல பகுதிகளில் நாயக்கர் ஆட்சி மேலோங்கிய காலத்தில் உருவான பல கோயில்களின் மண்டபங்களில், பெரிய சிற்பங்களாகவும் தூண்களில் புடைப்புச் சிற்பமாகவும் வீரபத்திரர் உருவங்களைக் காணலாம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், கம்பத்தடி மண்டபத்தின் அருகில், மேற்கு நோக்கியபடி உள்ள அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலை வடிவங்கள், வீரபத்திரர் சிலைகளிலே மிகப் பெரியவை ஆகும்.

எட்டு, பத்துக்கரங்களுடன், கனல் கக்கும் கண்களுடன் அக்னி சுவாலையாக சுட்டெரிக்கும் ஆக்ரோஷத்துடன் காட்சி தரும் வீரபத்திரர் திருமேனிகள், காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாகும். இவைபோன்ற சிற்பங்கள் பேரூர், தாடிக்கொம்பு, ஆவுடையார்கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, தாரமங்கலம், அவினாசி போன்ற தலங்களிலும் இடம் பெற்றுள்ளன. பேரூரிலுள்ள அக்னி வீரபத்திரர் ஜடா மகுடத்தில் தேள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

நடன வீரபத்திரர்:

தட்சனின் யாகத்தைத் துவம்சம் செய்து தேவர்களை எல்லம் புறமுதுகிட்டு ஓடச் செய்த மகிழ்ச்சியில், ஆனந்த நடனமிடும் கோலத்திலும் வீரபத்திரரை நாம் பல ஆலயங்களில் காணலாம். கிருஷ்ணாபுரம், மதுரை ஆயிரங்கால் மண்டபம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் நடன வீரபத்திரர் சிலை கலை நயம் மிக்கதாகக் காணப்படுகின்றன.

இடது கரத்தில் வீரபத்திரரின் உருவம் பதித்த கேடயத்துடன், வலது காலைத்தூக்கி உயர்த்திய கோலத்தில் நடன வீரபத்திரரைக் காணலாம். காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயில் போன்ற பல ஆலயங்களின் மண்டபத்தூண்களில் புடைப்புச் சிற்பமாகவும், நான்கு கரங்கள் கொண்ட வீரபத்திரரைக் காண முடிகிறது.

பிரளயகால வீரபத்திரர்:
தட்சனின் யாகத்தை அழித்துத் துவம்சம் செய்ய 32 கரங்களுடன் வெகுண்டெழுந்த பிரளய காலருத்திரரின் அற்புதத் திருமேனி ஒன்று, பெங்களூருக்கு அருகில் குட்டஹள்ளி என்ற சிற்றூரில் காணலாம். இங்கு தை மாதம் ரதசப்தமி நாளன்று, அக்னி குண்டம் வளர்த்து, பக்தர்கள் பூக்குழி இறங்குதல் தனிச்சிறப்பு ஆகும்.

No comments:

Post a Comment