Monday, January 21, 2013

கிருஷ்ண அவதாரம்

அசுரர்களின் அக்கிரம செயலால் பாவங்கள் அதிகரித்து பாரம் தாங்காமல் பூமாதேவி பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டாள். அதற்கு பிரம்மாவோ, சிவன் மற்றும் தேவர்களையும் அழைத்து கொண்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள்.
மகாவிஷ்ணுவும் அவர்கள் குறையை தீர்த்து வைப்பதாக கூறினார்.
யது வம்சத்தில் போஜகுலத்தில் தோன்றிய உக்ரசேனனின் மகன் கம்சன். இவன் வட மதுராவை ஆண்டு வந்தான். இவனுக்கு கம்சை, தேவகி என இரண்டு சகோதரிகள். இதில் தேவகி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான் கம்சன். தேவகியை, சூரசேன மகாராஜாவின் மகனான வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.
இவர்கள் இருவரையும், கம்சன் தன் ரதத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்ற போது, தீடிரென ஆகாயத்தில் இருந்து அசரீரி ஒன்று, ''கம்சா, தேவகியின் எட்டாவது பிள்ளையால் நீ கொல்லப்படுவாய்'' என்று கூறியது.
இதனால் கடும் குழப்பமடைந்த கம்சன் தன் தங்கையை கொல்ல முற்பட, வசுதேவர் தடுத்து, ''இவளால் உனது உயிருக்கு பிரச்சினை இல்லையே. எனவே இவளை விட்டு விடு.
இவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் உன்னிடம் கொடுத்து விடுகிறேன். அவற்றைக் கொன்றுவிடு''. என்று கூற, அதனை ஏற்று தேவகியை உயிருடன் விட்டான். எனினும் அவர்கள் இருவரையும் சிறையுள் வைத்திருந்தான். தேவகிக்கு சிறையுள் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொலை செய்தான்.
எழாவது குழந்தையாக ஆதிஷேசன் கருவில் தங்கினான். ஏழாவது மாதத்தில் மகாவிஷ்ணுவின் மாயையால் வசுதேவரின் முதல் மனைவி ரோகினியின் கருவில் சேர்க்கப்பட்டு பலராமனாக பிறந்தார்.
தேவகிக்கு பிறக்க போகும் எட்டாவது குழந்தைக்காக ஆவேசத்துடன் காத்திருந்தான் கம்சன். எட்டாவது குழந்தையாக அவதரித்தார் மகாவிஷ்ணு.
அவருடைய ஆணைப்படி அக்குழந்தையை கோகுலத்தில் இருந்த நந்த கோபரின் மனைவி யசோதையிடம் மாற்றி அவள் பெற்ற பெண் குழந்தையை தேவகியிடம் கொண்டு சேர்த்தார் வசுதேவர்.
கம்சன் பெண் குழந்தை என்றும் பாராமல் அதனை கொல்ல முயன்ற போது அது அவன் பிடியில் இருந்து தப்பி வானத்தில் பறந்து சென்றது. ''கம்சா!, நீ என்னை கொல்ல முடியாது. உன்னை கொல்பவன் ஏற்கனவே பிறந்து விட்டான்''. என்று கூறி மறைந்தது.
கோகுலத்தில் பலராமனும், கிருஷ்னனும் ஒன்றாகவே வளர்ந்து கன்றுகளை மேய்த்து வந்தனர்.
கம்சன் தன்னை அழிக்கப் பிறந்திருக்கும் குழந்தையை தேடி அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். எதுவுமே வெற்றி பெறவில்லை.
கிருஷ்ணனை கொல்ல நினைத்த கம்சனின் முயற்சிகள் பலவும் வீணாகின.
ஆயர்பாடியில் கிருஷ்ணன், வருடாந்த இந்திர விழா தடுக்கப்பட்டதால், கோபம் அடைந்த இந்திரனின் ஆணவத்தினை, கோவர்த்தன மலையை குடையாக ஏந்தி, மக்களை காத்ததன் மூலம் அழித்தான்.
இறுதியாக கம்சன், மல்யுத்த வீரர் இருவரை அனுப்பி பலராமன், கிருஷ்ணன் இருவரையும் மல்யுத்தம் மூலம் கொல்ல முயன்றான். எனினும் இருவரும் கொல்லப்பட கம்சன் தானே கிருஷ்ணனுடன் மோத முயன்றான்.
இறுதியில் கிருஷ்ணன், கம்சனை தரையில் தள்ளி அவன் மீது பாய்ந்து மேலே அமர்ந்ததும் பாரம் தாங்காமல் கம்சன் இறந்தான.
பின்னர் பலராமனும், கிருஷ்ணனும் சிறையில் இருந்த தமது தாய், தந்தையரை விடுவித்தனர். அதன் பிறகு இருவரும் கோகுலத்துக்கு செல்லாமல் வசுதேவருடனே இருந்து வந்தனர்.
இருவருக்கும் சாந்தீப முனிவர் கல்வி போதித்து வந்தார். குருதட்சனையாக குருவின் இறந்து போன மகனை மீட்டு கொடுத்தார்கள்.
கம்சனின் மரணத்தினை தாங்காது அவனது மனைவிகள் தமது தந்தை ஜராசந்தனிடம் அழுது புலம்ப அவன் கோபம் கொண்டு யாதவ குலத்தினையே அழித்துவிடுவதாக கூறி படை எடுத்து வந்தான். ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து செல்லும் போதும் மனம் தளராது மீண்டும் மீண்டும் வந்தான்.
இதனால் யாதவ குலத்தினை காக்க, விஸ்வகர்மா மூலமாக துவாரகை எனும் பெரும் பட்டணத்தை நிருமானித்து அதில் யாதவர்களை குடியேற செய்தான் கிருஷ்ணன்.
விதர்ப்பராஜாவின் மகளான ருக்மிணி, தனது தந்தை தன்னை சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய
நிச்சயத்திருபதனை அறிந்து, தன்னை காப்பாறும்மாறு கிருஷ்ணனிடம் தகவல் அனுப்ப அவளை மீட்டு பின்னர் மணந்து கொண்டான்.

உறவினரான குந்திதேவி, கணவரை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் கஷ்டப்படுவதனை அறிந்து உதவிகள் புரிந்தார்.
அவளது பிள்ளைகளான பாண்டவர்களுக்கு சேர வேண்டிய நாடு, நகரங்கள் எல்லாவற்றையும், துரியோதனன் வஞ்சகமாக, சூதாட்டம் மூலம் பறித்து கொண்டு, அவர்கள் மனைவி பாஞ்சாலியையும் மானபங்கம் செய்தான்.

அவர்கள் வனவாசம் சென்று வந்தால் நாடு, நகரங்கள் எல்லாவற்றையும் திருப்பி கொடுப்பதாக சொன்ன சொன்ன துரியோதனன் அவ்வாறு செய்யவில்லை. இது குறித்து தூது சென்ற கிருஷ்ணனையும் இழிவாக பேசினான்.
இதனால் பாரத போர் மூண்டது. கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு தேர்ரோட்டியாக இருந்து போரை நடத்தினான். ஒரு சமயம் தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, தன் விசுவரூபம் காட்டி பகவத் கீதையை உபதேசித்தார்.
பாரத போர் முடிவில் பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தினை ஆண்டு வந்தனர்.
அதே வேளையில் துவாரகையில், கிருஷ்ணன், பலராமன் இருப்பதனால் தம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என யாதவர்கள் இறுமாப்பு அடைந்து பெரும் அக்கிரமங்களில் ஈடுபட்டனர். கிருஷ்ணன், பலராமன் கூட அவர்களை அடக்க பெரும் சிரமப்பட்டனர்.
ஒருசமயம் துவாரகை வந்த முனிவர்கள் சிலரை ஏளனம் செய்து, ஒரு ஆடவனை கர்ப்பவதி போல காட்டி இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என கேட்க, கோபம் கொண்ட முனிவர்கள் 'இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே உங்கள் குலத்தினையே அழிக்கும்''. என சாபமிட்டனர்.
முனிவர்கள் கூறியவாறே இரும்பு உலக்கை அவன் வயிற்றில் இருப்பதை கண்டு பயந்து அதனை பொடிப் பொடியாக்கி கடல் நீரில் கரைத்தனர். எஞ்சிய சிறிய துண்டையும் நீரில் எறிந்தனர். அந்த துண்டை மீன் ஒன்று விழுங்கி விட்டது.
அந்த மீன் ஒரு மீனவன் கையில் சிக்கி விட்டது. மீனை வெட்டும் போது அதன் வயிற்றில் இருந்த இரும்பை வீசி எறிய அது ஒரு வேடன் கையில் கிடைத்தது. அதனை அவன் ஒரு அம்பு நுனியில் பொருத்தினான்.
கடல் நீரில் கரைந்த பொடிகள், கரையில் இரும்பு கோரைப்புற்களாக வளர்ந்து இருந்தன. ஒரு சமயத்தில் பெரும் போதை மயக்கத்தில் இருந்த யாதவர்கள் கோரைகளை பிடுங்கி தமக்கிடையே சண்டை இட்டு இறந்து போயினர். பலராமனும் அக்கடற்கரையினில் அமர்ந்து தன் சரீரத்தினை விடுத்தது வைகுண்டம் சென்றார்.
வேடன் மிருகம் ஒன்றுக்காக எய்த அம்பு பட்டு கிருஷ்ணன் தனது அவதாரப் பணியை முடித்து வைகுண்டம் சென்றார்.

No comments:

Post a Comment