Monday, January 21, 2013

மனசிருக்கணும் பிள்ளையாட்டம்!

சிந்துவுக்கு தயிர்ச்சாதம் என்றால் பிடிக்காது. அம்மாவும், பாட்டியும் வலுக்கட்டாயமாக ஊட்ட முயற்சிப்பார்கள். அன்றும் தயிர்ச்சாதம். குழந்தைக்கும் பெரியவர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. சிந்து ஓட, அம்மாவும் பாட்டியும் ஆளுக்கொரு பக்கமாய் வழிமறித்து பிடிக்க முயல...அப்பா வந்து விட்டார்.
அவர் அவளை அன்போடு அழைத்தார்.
""சிந்து! அப்பாவுக்காக கொஞ்சம் சாப்பிடேன்,'' அவரது கொஞ்சல் மொழியில் சொன்னது அவளை என்னவோ செய்து விட்டது.
""அப்பா நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன். சாப்பிட்டு முடித்ததும், நான் கேட்பதை நீங்கள் தர வேண்டும்,''.
மகளின் கோரிக்கையை அப்பா ஏற்றார். தயிர்சாதம் காலியாயிற்று.
அப்பாவிடம் வந்த மகள்,""அப்பா! கேட்பதைத் தருவீர்கள் அல்லவா!''
""அதிலென்னம்மா சந்தேகம், கேள்''.
""எனக்கு வரும் ஞாயிறன்று மொட்டை அடித்து விடு''.
அம்மாவும், பாட்டியும் கலங்கி விட்டனர். அப்பாவுக்கு இவள் ஏன் இப்படி கேட்கிறாள் என்ற குழப்பம். விபரம் புரியாமல் வாக்கு கொடுத்து விட்டோமே என்ற தர்மசங்கடம்.
""இவளுக்கென்ன பைத்தியமா! நாம் கோயிலுக்கு ஏதும் நேர்ந்து கொள்ளவில்லையே! ஏன் இப்படி கேட்கிறாள்?'' குழந்தை காரணம் ஏதும் சொல்லவில்லை.
மனைவியையும், தாயையும் சமாதானம் செய்தார் அப்பா.
""பெரியவர்கள் வாக்கு கொடுத்து விட்டால் அதைச் செய்தாக வேண்டும். நாமே வாக்கு மீறினால், பிற்காலத்தில் அவளிடம் ஒழுக்கத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். மொட்டை அடித்து விடலாம்''.
ஞாயிறன்று சலூன் திறந்ததும், சிந்துவின் தலை மொட்டையானது.
மறுநாள், அவளை பள்ளியில் கொண்டு விட்டார் அப்பா.
அப்போது, ஒரு காரில் மாணவன் ஹரீஷ் வந்து இறங்கினான். அவனும் மொட்டை அடித்திருந்தான்.
சிந்துவும், ஹரீஷும் கைகோர்த்து உள்ளே சென்றனர். ஹரீஷின் தாயார், சிந்துவின் அப்பா அருகில் வந்தார்.
""ஐயா! என் மகனுக்கு புற்றுநோய். அதற்கு மருந்து தருவதால் அவனது தலைமுடி கொட்டி விட்டது. குழந்தைகள் கேலி செய்வார்களே என அவன் வருந்தினான். இரண்டு நாள் முன்பு, உங்கள் மகள், என் மகனிடம், "ஹரீஷ்! ஆண்கள் மொட்டை அடிப்பது சகஜம். பெண்கள் அவ்வாறு செய்வதில்லை. நான் மொட்டை அடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்தால், எல்லாரது கவனமும் என் மீது திரும்பும். என்னை தான் அவர்கள் கேலி செய்வார்கள். உன்னை விட்டு விடுவார்கள்' என்று சொன்னாள். அதனால் தான், அவள் உங்களிடம் மொட்டையடிக்கும்படி கேட்டிருக்கிறாள். அவளைப் பாராட்ட வார்த்தை ஏது?'' என்றார்.
சிந்துவின் அப்பா கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர்.
""அம்மா சிந்து! உன் உயர்ந்த குணம் யாருக்கு வரும்! தாயே! அடுத்த பிறவியில் நான் உனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்,''.
உணர்ச்சிப் பெருக்குடன் அங்கிருந்து கிளம்பினார்.

No comments:

Post a Comment