Tuesday, January 29, 2013

ஆசிரமங்களும் அதன் வகைகளும்...

இருப்பார்கள் என்றும் கூறுகிறார்.

ஆசிரமங்களும் அதன் வகைகளும்...



சித்த மரபு என்றில்லாமல், இந்திய வேத மரபில் குரு சிஷ்ய பாரம்பர்யம் என்பது தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்த ஒன்று. கடந்த நூற்றாண்டு வரையில் உயிர்ப்புடன் இருந்த இந்த குருகுல கல்வி முறையானது இப்போது முற்றாக வழக்கொழிந்து விட்டதென்றே கூறலாம். இனி வரும் தலை முறையினருக்கு இப்படி ஒரு வழக்கு இருந்ததே கூடத் தெரியாமல் போகலாம்.

ஆசிரமங்கள் என்றால் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில், ஓலையால் வேய்ந்த குடில்களும், அதனைச் சுற்றியொரு நந்தவனமும் என்பதாகவே மனக் காட்சி விரியும். அங்கே ஒரு குருவும், அவரிடம் பயிலும் மாணவர்களும் இருப்பார்கள். ஏறத்தாழ எல்லா ஆசிரமங்களும் இப்படித்தான் நமக்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது.

இவை மட்டும்தானா ஆசிரமம்?, அவற்றில் என்ன நடந்தது?, ஆசிரமங்களில் பிரிவுகள், வகைகள் என ஏதும் இருக்கின்றனவா?... இப்படி தொடரும் கேள்விகளுக்கு அகத்தியரின் “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் விளக்கங்கள் கிடைக்கின்றன. அவற்றை தொகுத்துப் பகிர்வதே இந்த தொடரின் நோக்கம்.

அகத்தியர் ஐந்து வகையான ஆசிரமங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

அவையாவன...


பிரமச்சாரி ஆச்சிரமம்


கிரகஸ்த ஆச்சிரமம்


சன்யாச ஆச்சிரமம்


வானப்பிரஸ்த ஆச்சிரமம்


அதிவர்ன ஆச்சிரமம்



இவை ஒவ்வொன்றும் ஒரு படி நிலையாகக் கருதப் படுகிறது. ஒரு ஆசிரம நிலையில் கடைத்தேறியவர்கள் மட்டுமே அடுத்தடுத்த ஆசிரம நிலைகளுக்கு போக முடியும் என்பதாகத் தெரிகிறது. இது தற்போதைய ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேற்படிப்பு என்பது போல இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த ஆசிரமங்களில் வாழ்ந்திருந்தவர்களை அகத்தியர் பின் வருமாறு உருவகித்துக் கூறுகிறார்.

பார்பிரமச் சாரியடா பிர்மாவாகும்
பதிவான கிரகஸ்தன் விஷ்ணுவாகும்
நேர்குருவாஞ் சன்யாசம் ருத்திரனாகும்
நிலைவானப் பிரஷ்தனடா மயேசனாகும்
சீர்பெருகும் ஆதிவர்னாச் சிரமமைந்தா
சிவசிவா சதாசிவனாய்த் தெளிந்துகொள்ளு
ஆரறிவா ரஞ்சுநிலை விரதம்பெற்று
அமர்ந்திருப்பான் கோடியிலே ஒருவன்றானே.

பிரமச்சாரி ஆசிரமத்தில் வசிப்பவர்களை பிரம்மனாகவும், கிரகஸ்த ஆசிரமத்தில் வசிப்பவர்களை விஷ்ணுவாகவும், சன்யாச ஆசிரமத்தில் வசிப்பவர்களை ருத்திரனாகவும், வானப்பிரஸ்த ஆசிரமத்தில் வசிப்பவர்கள் மகேஸ்வரனாகவும், அதிவர்ன ஆசிரமத்தில் வசிப்பவர்களை சதாசிவனாகவும் உருவகித்துக் கூறுகிறார். மேலும் இந்த ஐந்து நிலைகளையும் கடந்தவர்கள் கோடியில் ஒருவராகவே இருப்பார்கள் என்றும் கூறுகிறார்.

No comments:

Post a Comment