Monday, January 21, 2013

நாட்டைக் காக்கும் பணியில் மரணமடைபவர்கள் மக்கள் இதயங்களில் என்றும் வாழ்வார்கள்

காமாட்சி தன் குடிசை வாசலில் கால்நீட்டி அமர்ந்திருந்தாள். அவளைக் காண வந்தாள் அருகில் வசிக்கும் கனகா. அழகுப்பதுமையான அவளுக்கு, மூதாட்டியின் மகன் சரவணன் மீது ஒரு கண்.
அவனும் கட்டழகன். மாவீரன்.
""அம்மா! தனியாக அமர்ந்திருக்கிறீர்களே! சாப்பிட்டீர்களா? தங்கள் மகனை இரண்டு மூன்று நாட்களாகக் காணவில்லையே! எங்கே போயிருக்கிறார்?''
அவள் தன் மகனை மனதுக்குள் காதலிக்கிறாள் என்ற விஷயம் காமாட்சிக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், அதைக் காட்டிக்கொள்ளாமல், ""அவன் தான் வீரனாயிற்றே! போர்க்களத்தில் நிற்பான். எதிரிகளைப் பந்தாடிக் கொண்டிருப்பான். எடுத்த கருமத்தை முடிக்கும் வரையில் அவனது கைகள் ஓயாது. உயிர் கொடுத்தேனும் நாட்டைக் காப்பவன் அவன்,''.
தன் காதலனின் பெருமை கண்டு, கனகா மகிழ்ந்தாள். புன்முறுவலுடன் அவள் கிளம்பிய வேளையில், சில போர்வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
காமாட்சி அவர்களிடம்,""என் மகனைக் கண்டீர்களா?'' என்றாள்.
""தாயே! வீரமகனைப் பெற்றவர் நீங்கள். தங்கள் மகன் கடுமையாகப் போரிட்டான். எதிரிகள் நூறு பேறாவது அவன் வாளுக்கு இரையாகியிருப்பர். ஆனால், அற்பபுத்தி கொண்ட எதிரி ஒருவன் அவனை வஞ்சகமாகக் கொன்று விட்டான். தங்கள் மகன் வீரமரணம் எய்தினான்,'' என்றனர்.
கனகா, காமாட்சியை அணைத்துக் கொண்டு, ""அவரல்லவோ என் கணவர் என இருந்தேன். ஆனால், கடவுள் பறித்துக் கொண்டானே!'' எனக் கதறினாள். காமாட்சி அவளைத் தேற்றினாள்.
""இல்லை மருமகளே! அவன் இறக்கவில்லை. எல்லா மரணமும் மரணமல்ல. அவன் நாடு காக்க இறந்தான். நாட்டைக் காக்கும் பணியில் மரணமடைபவர்கள் மக்கள் இதயங்களில் என்றும் வாழ்வார்கள்,''. காமாட்சியும் அழுதாள்... ஆனால், வழிந்தது ஆனந்தக்கண்ணீர்.

No comments:

Post a Comment