Monday, January 21, 2013

பெற்றோர் சொல் கேட்டு திருமணம் செய்து கொள்வதே பல வகையிலும் பாதுகாப்பானது

காவிரிபூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கரிகாற்சோழன் ஆண்டு வந்தான். வணிகமணி என்பவர் அவ்வூரில் இருந்தார். அவரது மகள் குண்டலகேசி.. அழகுப்பதுமை... அரண்மனை அருகில் இருந்த பெரிய வீட்டில் குடியிருந்தாள்.
அப்பகுதியில் வணிகம் செய்து வந்த காளன், நஷ்டப்பட்டதால் திருடத் துவங்கினான். கையும், களவுமாக பிடிபட்டான்.
அவனைக் காவலர்கள் கைது செய்து அழைத்து வந்த போது, தனது மாளிகையின் உச்சியில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த குண்டலகேசி வேடிக்கை பார்க்க வந்தாள். அவன் ஒரு குற்றவாளியாக இருக்கிறானே என்பது பற்றி கவலைப்படாமல், விதிவசத்தால் காளனிடம் காதல் வசப்பட்டாள். அந்தளவுக்கு அவன் அழகாக இருந்தான்.
கரிகாற்சோழன் முன் கொண்டு செல்லப்பட்ட காளனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு, மறுநாளே தூக்கில் போட உத்தரவிடப்பட்டது. இதற்குள் தன் தந்தையிடம் தனது காதலை விவரித்தாள் குண்டலகேசி.
""ஒரு குற்றவாளியைப் போயா காதலிக்கிறாய்?'' என தந்தை கடிந்தும், காதல் கண்ணை மறைக்க பிடிவாதம் செய்தாள்.
வேறு வழியின்றி மன்னனைக் காணச் சென்றார் வணிகமணி.
அவருக்கும் சோழனுக்கும் நல்ல பழக்கமுண்டு. அவரை வரவேற்ற மன்னன், ""இரவோடு இரவாக வந்துள்ளீர்களே! ஏதேனும் உதவி வேண்டுமா?'' என்றான்.
""தாங்கள் நான் கேட்பதைத் தருவீர்களா?'' என்றதும், ""என்ன கேட்டாலும் தருகிறேன்'' என வாக்களித்து விட்டான். தன் நிலையை எடுத்துச் சொல்லி, காளனை விடுவிக்கும்படி வணிகமணி வேண்டினார்.
மன்னனும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காளனை விடுதலை செய்தான். ஒரு நல்லநாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது. ஏராளமான செல்வம் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. ஆனாலும், ஆசை விடவில்லை. மேலும் சம்பாதித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் அவன் திருட்டில் இறங்கினான். கணவனைக் குண்டலகேசி கண்டித்தாள்.
மனைவி தன்னைக் கண்டிப்பது காளனுக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் மலை உச்சிக்குப் போய் வரலாம் எனக் கூறி, அவளை அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் அவளைத் தள்ள முயற்சித்தான். அவள் சுதாரித்துக் கொண்டு, ""இனியவரே! தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆனால், சாகும் முன் கணவனை வலம் வந்து வணங்கும் பெண்கள் பாக்கியசாலிகள். அதற்கு அனுமதியுங்கள்,'' என்றாள். காளனும் வேண்டாவெறுப்பாய் சம்மதித்தான்.
இரண்டு முறை வலம் வந்த குண்டலகேசி, மூன்றாம் முறை வலம் வரும்போது மிகவும் விரைவாக தன் கணவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள். அவன் உயிரிழந்தான். பின்னர் அந்த துரதிர்ஷ்ட சாலிப் பெண், ""ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம்,'' என்ற புத்தரின் போதனையை உலகெங்கும் பரப்பி, அவரது திருவடியை எய்தினாள்.
பெண்கள் காதல் வலையில் விழுவது ஆபத்து. பெற்றோர் சொல் கேட்டு திருமணம் செய்து கொள்வதே பல வகையிலும் பாதுகாப்பானது.

No comments:

Post a Comment