Monday, January 21, 2013

பொங்கல் வைக்கும் முறை!

வீட்டு வாசலில் திருவிளக்கை ஒரு பலகையிட்டு அதன் மேல் வையுங்கள். பூ சூட்டுங்கள். காற்றடிக்கலாம் என்பதால் ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறைவிளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலை விரித்து, வலது ஓரத்தில் சாணப்பிள்ளையாரை வையுங்கள். செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகில் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். அதன்மேல் கிழங்கு வகை, காய்கறி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வையுங்கள். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் பல் சேர்த்து தயாரித்த காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். தேங்காய் உடைத்து, அதன் நீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். பனை அல்லது தென்னை ஓலை கிடைத்தால் அதைக் கொண்டு அடுப்பு எரிக்கலாம். கிடைக்காதவர்கள் விறகு பயன்படுத்தலாம். மண்ணெண்ணெய் விட்டு அடுப்பு பற்ற வைப்பதைத் தவிர்க்கவும்.
பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், குலவையிடுங்கள். "பொங்கலோ பொங்கல்' என்று முழங்குங்கள். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி சமைக்க இருக்கிறோமோ, அந்தளவுக்கு முகர்ந்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல எரிபொருளின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும். பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யுங்கள்.
பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள். ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுங்கள். பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து காகத்துக்கு வையுங்கள். மதியம், திருவிளக்கேற்றி பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சமைத்த காய்கறி வகைகளை இலையில் வையுங்கள். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்யுங்கள். அதன் பிறகு குடும்பத்தார் கூட்டாக சாப்பிடலாம்.

No comments:

Post a Comment